search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நீதியோடு வாழ்வோம், நீதியைப் பெறுவோம்
    X

    நீதியோடு வாழ்வோம், நீதியைப் பெறுவோம்

    தான், தன் குடும்பம், தன் இனம் என நீதியை ஒருதலைபட்சமாக வளைத்துக் கொள்ளக்கூடாது. எங்கு நீதி நிலைநாட்டப்படுகிறதோ, அங்கு தீவிரவாதம் இருக்காது.
    மனித நேயத்தை வலியுறுத்தும் மார்க்கங் களில் முன்னிலை வகிக்கிறது, இஸ்லாம். மக்களின் உரிமைகளைப் பறிப்பதையும், அவர்களின் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றை சேதப்படுத்துவதையும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதையும் இஸ்லாம் தடைசெய்கிறது. அதற்கான பாவத்தை குற்றவாளி மீதே சுமத்துகிறது.

    பிறரை பாதிக்கும்படியான செயலை செய்துவிட்டு, அதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால் அந்த பாவம் மன்னிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, ‘மன்னிக்க மாட்டான்’ என்ற பதிலே கிடைக்கிறது.

    ‘மனித நேயம்’ மட்டுமல்ல, அடுத்தவர் உரிமையை பறிக்கும்அதிகாரம் யாருக்கும் இல்லை என்று இஸ்லாம் ஆணித்தரமாக கூறுகிறது.

    உலகத்தை படைத்து காத்துவரும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. தான் படைத்த உயிரினங்களின் மீது எல்லையில்லா அதிகாரம் அல்லாஹ்விடம் உள்ளது. இதுபற்றி திருக்குர்ஆனில் (40:2-3) இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

    ‘இவ்வேதம் அல்லாஹ்விடம் இருந்து இறக்கி அருளப்பட்டிருக்கின்றது. அவனே வல்லமை மிக்கவன். அனைத்தையும் அறிந்தவன். பாவத்தை மன்னிப்பவன். பாவமன்னிப்புக் கோரி மீள்வதை ஏற்றுக்கொள்பவன். கடும் தண்டனையளிப்பவன். அருட்பேறு உடையவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறுயாருமில்லை. அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது’.

    பாவம் செய்தவர்களின் பாவமன்னிப்பை ஏற்று மன்னிப்பை அளிப்பவன் இறைவன். ஆனால், ஒரு மனிதன் பிறருக்கு தீங்கு செய்துவிட்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டால், பாதிக்கப்பட்ட நபர் மன்னிக்காதவரையில், இறைவன் மன்னிப்பதில்லை.

    தவறு செய்த மனிதன் அழுது புரண்டாலும், நோன்பு நோற்றாலும், தொழுது அழுது மன்னிப்புக் கேட்டாலும், தீங்கு இழைத்த நபரை அல்லாஹ் மன்னிப்பதில்லை. மன்னிக்கும் உரிமை தனக்கு இல்லை என்று இறைவன் கைவிரித்துவிடுகிறான்.

    ‘அநீதம் செய்யப்பட்ட மனிதன் மன்னித்தால் ஒழிய இறைவன் மன்னிப்பதில்லை’ என்பது நபிமொழி.

    இது எத்தகைய உயரிய பண்பாடு. அகிலத்தை படைத்த இறைவன், அர்ப்பமான மனிதனுக்கு இந்த உரிமையை தருகிறான். காரணம், தன் படைப்பிற்கு அவன் அளித்துள்ள உரிமை.

    ‘அநீதம் இழைக்கப்பட்டவருக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த ஒரு தடையும் இல்லை’. (புகாரி)

    அடுத்தவரின் உரிமை என்பது, பொருட் களை எடுப்பதோ, தாக்குவதோ, துன்புறுத்துவதோ மட்டுமல்ல. ஒருவரைப்பற்றி பிறரிடம் புறம்பேசுவது, அவதூறு பேசுவது என மன ரீதியாக துன்புறுத்துவது ஆகும். ஒரு மனிதனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதும் துன் புறுத்தும் செயலாகும்.

    இப்படிப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    ‘குறைசொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்’. (104:1)

    புறம் பேசுவதை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெறுத் திருக்கிறார்கள் என்பது நபி மொழியாகும்.

    ‘கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

    ஒரு தடவை நபிகள் பெருமான் (ஸல்) அவர்களிடம் தோழர் ஒருவர் வந்து மற்றொரு தோழரைப்பற்றி குறைகூற ஆரம்பித்தார்கள், அப்போது நபிகளார், அந்த தோழரைப் பார்த்து, ‘நான் அந்த தோழரை பார்க்கும் போது நல்ல எண்ணத்தோடு அவரைப் பார்க்க விரும்புகிறேன். எனவே, நீங்கள் அவரைப் பற்றி என்னிடம் குறை கூற வேண்டாம்’ என்றார்கள்.

    மற்றொரு தடவை, தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, புறம்பேசுவது குறித்து பின்வருமாறு நபிகளார் விளக்கம் அளித்தார்கள்:

    ‘புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?’ என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

    அப்போது ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் பதில் கூறினர்.

    அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள்”.

    ‘நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?’ என்று தோழர்கள் கேட்டனர்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம்பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இன்று வாட்ஸ்அப், சமூக வலைதளம் என பல்வேறு சமூக ஊடகங்களில் ஒவ்வொருவரைப் பற்றியும் அவதூறு கருத்துக்கள் சர்வ சாதாரணமாக பரப்பப்பட்டு வருகின்றன. மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. தனக்கு தெரியாத அல்லது உறுதிப்படுத்தாத செய்திகளை பரிமாறுவதும் நடைபெறுகிறது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.

    தனி மனித உரிமை என்பது, ‘அடுத்தவரின் மூக்கு நுனி வரையில்’ என்பது தான் இலக்கணம். என் கையை வீசுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது எனில் அந்த உரிமை, பக்கத்தில் உள்ளவரை பாதிக்காத வரையில் பிரச்சினையில்லை. மாறாக, அடுத்தவரின் மூக்கு நுனியை இடித்துவிட்டால் அது மனித உரிமை மீறல் ஆகும்.

    இன்றைய காலகட்டத்தில், அடுத்தவரின் உரிமைகள் தெரிந்தோ தெரியாமலோ இலகுவாக பறிக்கப்படுகிறது. நாடுகளுக்கு இடையே ஏற்படும் தாக்குதல் களும் உரிமை மீறல் பிரச்சினைதான். உரிமை என்பது, தனி மனிதனுக்கு ஏற் படுவது மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையேயும், வலியவன்-எளியவன் என்ற பாகுபாட்டில் ஏற்படும் நிலையும் காரணம்.

    தான், தன் குடும்பம், தன் இனம் என நீதியை ஒருதலைபட்சமாக வளைத்துக் கொள்ளக்கூடாது. எங்கு நீதி நிலைநாட்டப்படுகிறதோ, அங்கு தீவிரவாதம் இருக்காது.

    திருக்குர்ஆன் கூறும் பல்வேறு வசனங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு உயிருக்கும் அது வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதை தடுப்பதற்கான உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை.

    உலக அமைதி என்பது நீதியை நிலைநாட்டுவதிலும், உரிமையை அளிப்பதிலும்தான் உள்ளது.

    நீதியோடு வாழ்வோம், நீதியைப் பெறுவோம்.

    கமால்பாஷா, வி.களத்தூர்.
    Next Story
    ×