search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "islam worship"

    • அல்லாஹ்வுடைய அனுமதியின்றி யாதொரு தீங்கும் எவரையும் வந்தடையாது.
    • சிறந்த வாழ்வுக்கு இஸ்லாம் அழகாக வழிகாட்டுகிறது.

    மனிதன் தன் வசதியான வாழ்விற்காக எந்திரங்களையும், அதிவேக போக்குவரத்தையும், தகவல் தொடர்பு சாதனங்களையும் கண்டுபிடித்தான். நவீன வசதிகள் பெருகிய பிறகு அவனது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கலாம். ஆனால் அதற்குப்பதிலாக அவனது பொறுமை, சகிப்புத்தன்மை, கொடைத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்றவை காணாமல் போய்விட்டது. எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வது, பொறாமை கொள்வது, பொறுமை இன்றி நடந்து கொள்வது, எந்த செயலிலும் பதற்றம், பரபரப்பு என்று செயல்படுவது.... என மனிதனின் மனமும், வாழ்க்கையும் எந்திரத்தன மாகிவிட்டது.

    தன்னுடைய தீய செயல் களாலே தனக்குத்தானே தீங்கு விளைவித்துக்கொள்கின்றான் இன்றைய மனிதன். இதனால் அவனது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வைத்தேடி மருத்துவத்தை நாடுகின்றான். மன நல ஆலோசகர்களை நாடி ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழித்து நிம்மதியை தேடுகின்றான். மருந்து மாத்திரைகளை நாடி நோயாளி ஆகின்றான். உள்ளம் தெளிவாக இருந்தால் எண்ணங்களும், செயல்களும் தெளிவாக இருக்கும்.

    செயல்கள் தெளிவாக இருந்தால் அவனது வாழ்க்கை சிறந்ததாக இருக்கும். இத்தகைய சிறந்த வாழ்வுக்கு இஸ்லாம் அழகாக வழிகாட்டுகிறது. சந்தேகமான எண்ணங்களில் இருந்து விலகி இருத்தல், பிறர் மீது பொறாமை கொள்ளாமல், புறங்கூறாமல் இருத்தல் போன்றவை நிம்மதியான வாழ்வுக்கு அடித்தளம் ஆகும். இதையே பின்வரும் திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது:

    "இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்துவிட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா, என்ன? பாருங்கள்! நீங்களே அதனை அருவருப்பாய்க் கருதுகின்றீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையைப் பெரிதும் ஏற்றுக் கொள்பவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 49:12). வாழ்க்கையில் எது நடந்தாலும் அது இறைவனின் கட்டளைப்படியே நடக்கிறது என்ற இறையச்சமும், இறை நம்பிக்கையும் தேவை.

    ஏக இறைவனான அல்லாஹ்வை நாம் முழுமையாக அடிபணிந்து சரண் அடையும் போது நமது மனம் அமைதி பெறும். இறை சிந்தனையிலும், இறைவனை நினைவுகூர்வதிலும், இறைவழிபாட்டிலும், இறைவன் வகுத்த வழியில் வாழ்க்கையை நடத்தும் போதும் நம்மை எந்த துன்பமும் எட்டிப்பார்க்காது. வந்த துன்பமும் நம்மை தடுமாறச்செய்யாது. துன்பங்களை தாண்டிச்செல்லும் பக்குவத்தை இறையருளால் பெறமுடியும். இதையே பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

    "அல்லாஹ்வுடைய அனுமதியின்றி யாதொரு தீங்கும் எவரையும் வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய உள்ளத்தை சகிப்பு, பொறுமை என்ற நேரான வழியில் நடத்துகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்". "அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடங்கள். அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தால் அது உங்களுக்குத்தான் நஷ்டம்.

    ஏனென்றால், நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் தன்னுடைய தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான்". "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மீதே பொறுப்பை ஒப்படையுங்கள்". (திருக்குர்ஆன் 64:11-13) அந்த ஏக இறைவனை முழுமையாக சரண் அடைந்து இறையருளையும், அமைதியான, ஆரோக்கியமான, நிம்மதியான வாழ்க்கை யையும் நாம் அனைவரும் பெறுவோம், ஆமின்.

    பேராசிரியர் அ. முகம்மது அப்துல்காதர், சென்னை.

    வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவும், இறைவன் விரும்பும் செயல்களை செய்யவும், அவன் வெறுக்கும் செயல்களை விட்டு பாதுகாத்துக் கொள்ளவும், நல்லவனாக வாழவும் அவசியமான தேவை இறையச்சமே.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறையச்சம்’ குறித்த தகவல்களை காண்போம்.

    இறைநம்பிக்கையின் ஒரு பகுதிதான் இறையச்சம். மறைவானவற்றை நம்புவது இறைநம்பிக்கை என்றால், அவற்றை பின்பற்றி வாழ்வதுதான் இறையச்சம் ஆகும்.

    இவ்வுலகம், மறுவுலகம் ஆகியவற்றின் ஈடேற்றம் தரும் வழியில் வீறுநடை போடும் பாதையில் நடப்பதே இறையச்சம். மேலும் இவ்வுலகிலும், மறுவுலகிலும் அழிவைத்தரும் பாதையில் விலகி இருப்பதே இறையச்சம், இறைபக்தி.

    இறையச்சம் குடியிருக்கும் இடம் உள்ளம்

    ‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோக மிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் இங்கே உள்ளது என நபி (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று தடவை சைகை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

    ‘இறைவன் உங்களின் உடல்களையோ, தோற்றங்களையோ பார்ப்பது இல்லை. அவன் பார்ப்பதெல்லாம் உங்களின் உள்ளங்களைத்தான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்).

    ‘இறைவன் உங்களின் தோற்றங் களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை. எனினும் அவன் உங்களின் உள்ளங்களையும், செயல்பாடுகளையும் தான் பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) புகாரி, முஸ்லிம்)

    பக்தி பரவசம் என்பது தோற்றத்தில் மட்டும் கிடையாது. ஒருவரின் தோற்றத்தைக் கண்டு அதை தீர்மானித்தால் நாம்தான் ஏமாளிகள்.

    பெரிய தாடி, நீளமான உடை, தலையில் தொப்பி, தலையை சுற்றி தலைப்பாகை, கையில் (தஸ்பீஹ்) தியான மணி, பேச்சில் இறைவன், எந்த நேரமும் தொழுகை, இத்தகைய குறி யீடுகளை மட்டும் இறையச்சத்தின் அளவுகோலாக சுருக்கிவிட முடியாது.

    இரவெல்லாம் தொழுவது, பகலெல்லாம் நோன்பு நோற்பது, திருமணம் புரிந்தவர் இல்லற வாழ்வைத் துறப்பது அல்லது திருமணமே வேண்டாம் என வீட்டை விட்டு நாட்டை சுற்றுவது மட்டுமே உண்மையான பக்தி அல்ல. இவை அனைத்தும் பக்தியின் பெயரால் நடக்கும் ஆர்வக்கோளாறுகள். இஸ்லாமிய விரோதமான செயல்பாடுகள்.

    ‘நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழு வினர் வந்து, நபியவர்களின் வணக்க வழி பாடுகள் குறித்து வினாத்தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபியுடைய வணக்க வழி பாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.

    பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே?, நாம் எங்கே?’ என்று சொல்லிக் கொண்டனர்.

    அவர்களில் ஒருவர் ‘இனிமேல் நான் இரவில் எப்போதும் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன்’ என்றார். இன்னொருவர் ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்’ என்றார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன், ஒருபோதும் திரு மணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்றார்.

    அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமே. அறிந்து கொள்ளுங்கள்! உங்களை விட நான் இறைவனுக்கு அதிகம் அஞ்சுபவன்; இறைவனுக்கு பயந்து நடப்பவன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழுகவும் செய்கிறேன்; உறங்கவும் செய் கிறேன். மேலும், நான் மண முடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுபவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

    24 மணி நேரமும் தொழுகையில் ஈடுபடுவது மட்டுமல்ல இறையச்சம். அதையும் தாண்டி மக்களுடன் மக்களாக வாழும்போது யாருக்கும் எந்தத் தொந்தரவுகளையும் கொடுக்காமல், யாருடைய சொத்தின் மீதும் ஆசைப்படாமல் நன்மைகளும் புரிந்து, இறையச்சத்தின் காரணமாக பாவங்களை விட்டும் தவிர்ந்து வாழ்வதே இறையச்சம்.

    ‘நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் போது ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘இது ஸதகா (பொதுச் சொத்து) பொருளாக இல்லாமல் இருந்தால், அதை நான் சாப்பிட்டிருப்பேன்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

    பொதுச்சொத்தை சாப்பிடுவதிலிருந்து நபியவர்களை தடுத்தது இறையச்சமே. பாவம் புரிவதிலிருந்து ஒருவனை தடுக்கும் கேடயமாக இறையச்சம் இருப்பது போன்று, நடந்துவிட்ட பாவத்தை எண்ணி, அதற்குரிய தண்டனை இந்த உலகிலேயே கிடைத்தால் போதும் என நினைத்து, பரிகாரம் தேடி அலைய வைப்பதும் இறையச்சமே.

    நபித்தோழர் மாயிஸ் பின் மாலிக் (ரலி) பாவம் ெசய்ததும், குற்ற உணர்ச்சி அவரை உலுக்கியது. இறை தண்டனையை அஞ்சி நபியவர்களிடம் வந்து தான் தவறு புரிந்ததை சுயவாக்குமூலம் கூறினார். தனக்கு இவ்வுலகிலேயே மரண தண்டனை வேண்டுமென மனதார வேண்டினார்.

    மூன்று தடவை அவரின் கூற்றை மறுத்த நபி (ஸல்) அவர்கள், நான்காவது தடவை அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனை வழங்கும்படி உத்தரவிட்டார்கள். செய்துவிட்ட குற்றத்திற்கு அவரை பரிகாரம் தேடவைத்தது இறையச்சமே.

    திருக்குர்ஆனில் 258 இடங்களில் இறையச்சம் குறித்து பல்வேறு வாசக வடிவில் வருகிறது. அவற்றில் எழுபது இடங்களில் ‘நீங்கள் இறைவனை அஞ்சுங்கள்’ என இறைநம்பிக்கையாளர்களை நோக்கி நேரடி ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

    இந்த ஆணைகளின் மூலம் வணக்க வழிபாடு, சமூக, பொருளாதார, தனிமனித வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, நீதி, நிர்வாகம், அரசியல், கொடுக்கல் வாங்கல் என மனித வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட, தொடர்பில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் இறையச்சம் இடம்பெற வேண்டும் என இறைவன் ஆணை பிறப்பிக்கிறான்.

    மூன்று விஷயங்களில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும்.

    1) இறைவனை மதிப்பதில் உண்மை வேண்டும், போலித்தனம் இருக்கக்கூடாது.

    ‘எந்த மனிதருக்கும் இறைவன் எதையும் அருளவில்லை என்று அவர்கள் கூறியதால் இறைவனை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை’. (திருக்குர்ஆன் 6:91)

    2) இறைவனுக்காக அர்ப்பணிப்பதில் உண்மை இருக்க வேண்டும்.

    ‘இறைவனுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்’ (திருக்குர்ஆன் 22:78)

    3) இறையச்சத்தில் உண்மை இருக்க வேண்டும்.

    ‘நம்பிக்கை கொண்டோரே! இறைவனை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்’ (திருக்குர்ஆன் 3:102)

    “மக்களில் சங்கையானவர் யார்?” என நபியவர்களிடம் கேட்கப்பட்டது. “அவர்களில் இறைவனை மிகவும் அஞ்சுபவரே!” என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘உங்களில் இறைவனை அதிகம் அஞ்சுபவரே இறைவனிடம் அதிகம் சிறந்தவர்’. (திருக்குர்ஆன் 49:13)

    “நபி (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் ‘இறைவா! நான் உன்னிடம் நேர்வழி, இறையச்சம், பத்தினித்தனம், போதும் என்ற மனம் ஆகியவற்றை கேட்கிறேன்’ என இவ்வாறு கூறுவார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம்)

    வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவும், இறைவன் விரும்பும் செயல்களை செய்யவும், அவன் வெறுக்கும் செயல்களை விட்டு பாதுகாத்துக் கொள்ளவும், நல்லவனாக வாழவும் அவசியமான தேவை இறையச்சமே. 

    மவுலவி அ: செய்யது அலி மஸ்லதி, நெல்லை
    சோதனைகள் வந்த போது மனம் தளர்ந்து விடாமல் பொறுமையைக் கொண்டும், மன உறுதியைக் கொண்டும், பிரார்த்தனையைக் கொண்டும் அதை எதிர் கொள்ளவேண்டும்.
    எந்த ஒரு மனிதனை கேட்டாலும் ‘முழுமையான நிம்மதியோடு நான் வாழ்கிறேன்’ என்று சொல்வது மிக அரிதிலும் அரிது.

    நல்ல வேலை கிடைக்கவில்லை, எதிர்பார்த்த வருமானம் இல்லை, வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரவில்லை, நோயின் தாக்கம் தள்ளாட வைக்கிறது, குடும்ப சூழ்நிலை சரியில்லை... என்று எத்தனையோ காரணங்களைச் சொல்வார்கள்.

    அதேநேரத்தில், எத்தனையோ துன்பங் களுக்கு மத்தியில் அல்லாஹ் அருளிய மற்ற அருட்கொடைகளை எண்ணி அவனுக்கு நன்றி செலுத்தி திருப்திப்படுபவர்கள் மிகச்சிலரே.

    வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் வரும்போது அதை பொறுமையாக ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து மீளும் வழியை இறைவனிடம் தேடவேண்டும். மாறாக மனிதன் தன்னைத்தானே நொந்து கொண்டு இறைவனை நிந்திக்கத் தலைப்படுகிறான்.

    எத்தனை சோதனைகள் வந்தாலும் இறைவன் வகுத்த வழியில் இருந்து மனிதன் விலகக்கூடாது என்பதற்காகவே இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் களுக்கும் சோதனைகள் ஏற்பட்டது.

    அதுபோன்ற சோதனையான, வேதனையான நேரங்களில் அவர்கள் தங்களின் உறுதியான இறையச்சத்தின் மூலம், பிரார்த்தனையின் மூலம் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் என்பதையும் நாம் திருக்குர்ஆன் மூலம் அறியலாம்.

    இப்ராகிம் நபிகள், ‘அல்லாஹ்தான் உண்மை இறைவன்’ என்பதை அறிந்து கொண்ட பிறகு தன்னைச்சுற்றி வாழ்ந்தவர்களிடம் ‘அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்ற பெரிய பாவத்தை செய்யாதீர்கள், சிலை வணக்கத்தை கை விடுங்கள்’ என்று போதனை செய்தார். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை, மாறாக இப்ராகிம் நபிகளை நெருப்புக்குண்டத்தில் தூக்கி எறிந்தார்கள்.

    இப்ராகிம் நபி சிறிதும் கவலைப்படவில்லை. இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்தார்கள். இறைவன் அருளால் எரிக்கும் தன்மையை விட்டு குளிர்ந்த பூஞ்சோலையாக நெருப்பு மாறியது. இது குறித்து திருக்குர்ஆன் (21: 69,70) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “அவர்கள் இப்ராகிமை நெருப்பு கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி, ‘நெருப்பே நீ இப்ராகிமிற்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு’ என்று நாம் கூறினோம். அவர்கள் இப்ராகிமிற்கு தீங்கிழைக்க கருதினார்கள். எனினும் நாம் அவர்களையே நஷ்டமடையச் செய்து விட்டோம்”.

    அயூப் நபியின் வாழ்க்கையும் சோதனை நிறைந்ததாகவே இருந்தது. கொடூர நோய் தாக்கி உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இருப்பினும் அவர் இறைப்பணியை மறக்கவில்லை.

    “இறைவா, என் உடம்பெல்லாம் புழுக்கள் அரித்தாலும் என் நாவை மட்டும் காப்பாற்றி தந்துவிடு. நீ எனக்கு தந்த மற்ற அருட்கொடைகளுக்காக உன்னை புகழ்ந்து துதி செய்ய எனக்கு அருள் தா” என்று பிரார்த்தனை செய்தார்.

    அவரது பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து திருக்குர்ஆன் (21:84) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நாம் அயூப் நபியின் பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்தோம். நம் அருளால் மேலும் அதைப்போன்ற தொகையினரையும் அவருக்கு குடும்பமாக கொடுத்தோம். இது எனக்கு பயந்து என்னை வணங்குபவர் களுக்கும் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும் நல்லுணர்ச்சி ஊட்டக் கூடியதாக இருக்கிறது”.

    யூனுஸ் நபிகளுக்கு ஏற்பட்ட சோதனைப் பற்றியும் அல்லாஹ் அருள்மறையிலே விவரிக்கின்றான். தனது ஊரார்கள் தன்னுடைய போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று கோபமுற்று யூனுஸ் நபிகள் அந்த ஊரை விட்டு செல்வதற்காக கடற்கரைக்கு வந்தார்கள். அங்கு தயாராக நின்றிருந்த கப்பலில் ஏறி பயணம் செய்தார்கள்.

    ஆனால் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாமல் தன்னிச்சையாக அந்த ஊரை விட்டுச்செல்ல முயன்ற யூனுஸ் நபியின் செய்கை அல்லாஹ்விற்கு பிடிக்கவில்லை. எனவே, அந்த கப்பலிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டு திமிங்கலம் போன்ற மீன் விழுங்கும்படி செய்தான் அல்லாஹ். அது மட்டுமல்ல திமிங்கலத்திற்கு இரையாகாமல் அதன் வயிற்றிலேயே உயிர் வாழச் செய்தான்.

    யூனுஸ் நபிகள் மீன் வயிற்றிலிருந்தபடியே இறைவனை பிரார்த்தனை செய்தவர்களாக இருந்தார்கள். இதை இறைவன் ஏற்றுக்கொண்டு மீண்டும் அவரை மீன் வயிற்றில் இருந்து உயிருடன் தரைக்கு அனுப்பி வைத்தான். இதுகுறித்து திருக்குர்ஆன் (21:87) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “யூனுஸ் நபியையும் நாம் தூதராக ஆக்கினோம். அவர் கோபமாக சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். ஆதலால் அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின் இருள்களிலிருந்த அவர், நம்மை நோக்கி ‘உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, நீ பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். என்னை மன்னித்து அருள்புரிவாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்”.

    முகம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கைச் சரிதத்தை திருப்பிப்பார்த்தால் அங்கு வறுமை, கஷ்டத்தைத் தவிர வேறு எதையும் நம்மால் கண்டுகொள்ள முடியாது. சிறு வயதிலேயே அனாதையாகி பல நாட்கள் பட்டினி கிடக்க கூடிய அளவிற்கு வறுமையை அனுபவித்தார்கள்.

    அவர்களின் முன் பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டிருந்தாலும், இரவு முழுவதும் கால் வீங்கும் அளவிற்கு நின்று இறைவனை வணங்கினார்கள்.

    மனித இனம் மேம்பட இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களே இத்தனை சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், இறையச்சத்தில் மிக பலவீனமானவர்களான நாம் எம்மாத்திரம். ஒன்றை மட்டும் நினைவில்கொள்ள வேண்டும். துஆ என்ற பிரார்த்தனை மட்டுமே நம் விதியைக் கூட மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தது.

    மனிதன் தன்னிடம் பிரார்த்தனை செய்தால் அதை ஏற்று அவன் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித் திருக்கின்றான்.

    சோதனைகள் வந்த போது மனம் தளர்ந்து விடாமல் பொறுமையைக் கொண்டும், மன உறுதியைக் கொண்டும், பிரார்த்தனையைக் கொண்டும் அதை எதிர் கொள்ளவேண்டும்.

    தஹ்ஜ்ஜத், பஜ்ர் போன்ற நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தொழுகையின் போது, அல்லாஹ் கீழ்வானம் வரை வந்து, ‘என்னிடம் யாராவது பிரார்த்திப்பவர்கள் இருக்கிறார்களா? அதனை நான் தர காத்திருக்கிறேன். இந்த நேரங்களில் எனக்கும் என் அடியானுக்கும் இடையே எந்த திரையும் இருக்காது’ என்று கூறுகிறான்.

    இந்த நல்ல நேரங்களை பயன்படுத்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அல்லல்கள் அனைத்தும் நீங்கி, அக மகிழ்ந்து அகிலத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    இறைவிசுவாசியின் அன்பு, நேசம், பாசம் அனைத்தும் சுயநலமில்லாமல், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான சகோதரத்துவ அடிப்படையில் இறைவனுக்காக அமையவேண்டும்.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது அல்லது வெறுப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.

    அபூ உமாமா (ரலி) கூறுகிறார்:

    ‘யார் ஒருவரை இறைவனுக்காக நேசிக்கிறாரோ, இறைவனுக்காக வெறுக்கிறாரோ, இறைவனுக்காக கொடுக்கிறாரோ, இறைவனுக்காக தடுக்கிறாரோ அவர் இறை நம்பிக்கையை பரிபூரணமாக்கிவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அபூதாவூத்)

    ஒருவர் மற்றவரை நேசிப் பதும், வெறுப்பதும் இறை வனுக்காக வேண்டி இருந்தால் இதுவும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக தகுதி பெற்று விடுகிறது.

    இறைவனுக்காக நேசிப்பதும், வெறுப்பதும் உள்ளம் சார்ந்த செயல். கொடுப்பதும், தடுப்பதும் உடல் சார்ந்த செயல்.

    ஒட்டுமொத்தத்தில் இறைநம்பிக்கை பரிபூரணம் அடைய நமது செயல்கள் அனைத்தும் மார்க்கத்தின் அடிப்படையிலும், இறைநேசத்தின் அடிப்படையிலும் வெளிப்பட வேண்டும்.

    ‘இறைநம்பிக்கையின் சுவையை ஒருவர் அடைய ஆசைப்பட்டால் அவர் ஒருவரை நேசிக்கட்டும். அவர் அவரை இறைவனுக்காக அன்றி வேறெந்த காரணத்திற்கும் நேசிக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)

    பராஉ பின் ஆஸிப் (ரலி) தெரிவிக்கிறார்:

    “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் ‘இறைநம்பிக்கையின் பலமான பகுதி எதுவென்று தெரியுமா?’ என்று கேட்டார்கள்.

    நாங்கள் ‘தொழுகை’ என்றோம்.

    ‘தொழுகை அல்ல, அது ஒரு அழகு சாதனம்’ என நபி (ஸல்) விளக்கமளித்தார்கள்.

    பிறகு ‘நோன்பு’ என்றோம்.

    ‘அதுவும் இல்லை’ என நபி (ஸல்) தெரிவித்தார்கள்.

    பிறகு ‘அறப்போர்’ என்றோம்.

    ‘அதுவும் கிடையாது’ என பதில் கூறினார்கள்.

    பிறகு நபியவர்கள் ‘இறைநம்பிக்கையின் பலமான பகுதி இறைவன் விஷயத்தில் நேசிப்பதும், இறைவன் விஷயத்தில் வெறுப்பதும் ஆகும்’ என தெரிவித்தார்கள். (நூல்: அஹ்மது)

    தனிப்பட்ட முறையில் ஒருவர் ஒருவரை நேசிப்பதும், வெறுப்பதும் கூடாது. ஒருவரின் அழகுக்காக, அவரின் அறிவுக்காக, அவரின் செல்வாக்குக்காக, செல்வத்திற்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக என குறிப்பிட்ட குண நலன்களை பார்த்து நேசிப்பதாக அமைந்தால், அந்த நேசம் நிரந்தரமானது அல்ல. அது இருக்கும் வரைக்கும் நேசம் இருக்கும். அது இல்லாதபோது நேசமும் காணாமல் போய்விடும்.

    ஒருவரை வெறுப்பதும், அவரின் தனிப்பட்ட தீய செயல்களுக்காக மட்டுமே இருந்துவிடக்கூடாது. தீயவர்களை வெறுக்க வேண்டும். தீய செயல்களை புரிபவர்களை அல்ல, தீய செயல்களை மட்டுமே.

    இறைநம்பிக்கையாளர் மீது நமக்கு நேசம் இயற்கையாகவே வரவேண்டும். அது அவரின் இறைநம்பிக்கையை வைத்து மட்டுமே. அவர் ஏழை-பணக்காரர், சிறியவர்-பெரியவர், படித்தவர்-பாமரர் என்ற அளவுகோலை வைத்து அல்ல.

    இறைமறுப்பாளர்கள் மீது வெறுப்பு இருக்கவேண்டும். அதன் அளவுகோல் இறைமறுப்பு என்ற தன்மையில் மட்டுமே, மற்ற செயல்பாடுகளில் அல்ல.

    இறைவனுக்காக விருப்பு, வெறுப்பு கொள்ளும்போது அதனால் பிறருக்கு நன்மைகள் மட்டுமே கிடைக்கும். தனிப்பட்ட காரணங்களுக்காக அது வரும்போது அதனால் பிறருக்கு தீங்குகள் மட்டுமே விளையும்.

    “நிச்சயமாக இறைவன் நாளை மறுமைநாளில் ‘எனது வல்லமையைக் கொண்டு நேசம் கொண்டவர்கள் எங்கே?’ என்று கேட்பான். பிறகு, ‘எனது நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத இன்றைய தினத்தில் நான் அவர்களுக்கு நிழல் தருவேன்’ என இவ்வாறு இறைவன் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள்”. (நூல்: முஸ்லிம்)

    ‘எனக்காக ஒருவருக்கொருவர் பிரியமாக நடந்துகொண்ட இருவருக்கும், எனக்காக சபையில் அமர்ந்து கொண்ட இருவருக்கும், எனக்காக தரிசித்துக் கொண்ட இருவருக்கும், எனக்காக செலவளித்த இருவருக்கும் எனது நேசம் அவசியமாகிவிட்டதாக இறைவன் கூறியதை நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்: அஹ்மது)

    “இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமைநாளில் இறைவன் ஏழு பேர்களுக்கு நிழலை அளிக்கிறான். அவர்களில் ஒருவர் இறைவனுக்காகவே பிரியம் கொண்டு இணைந்து, இறைவனுக்காகவே பிரிந்து செல்கின்ற இரண்டு நண்பர்கள் ஆவர் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

    “இறைவனுக்காக நேசிக்கும் இரு சகோதரர்களில் மிகச்சிறந்தவர் யாரெனில், ‘அவர்களில் மற்றவரை மிக அதிகமாக நேசிப்பவரே’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (நூல்: அதபுல் முப்ரத்)

    ஒரு மனிதர் மற்றொரு ஊரில் உள்ள சகோதரரை சந்திக்கச் சென்றபோது, அவரது பாதையில் இறைவன் ஒரு வானவரை எதிர்பார்த்திருக்க வைத்தான்.

    அம்மனிதர் அந்த வானவரைக் கடந்தபோது, அவர் ‘எங்கே செல்கிறாய்?’ என்று கேட்டார்.

    அந்த மனிதர் ‘இந்த ஊரிலுள்ள எனது சகோதரரை சந்திக்கச் செல்கிறேன்’ என்றார்.

    அந்த வானவர், ‘அவர் உமக்கு ஏதேனும் உபகாரம் செய்ய வேண்டும் என்பதற்காகவா செல்கிறாய்?’ என்று கேட்டார்.

    அவர், ‘இல்லை, எனினும், நான் இறைவனுக்காக அவரை நேசிக்கிறேன்’ என்று பதில் கூறினார்.

    ‘நான் இறைவனால் அனுப்பப்பட்ட வானதூதர், நீ இறைவனுக்காக உமது சகோதரரை நேசித்தது போல் நிச்சயமாக இறைவனும் உம்மை நேசிக்கிறான்’ என்று கூறினார். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

    ‘என்னுடைய மகத்துவத்திற்காக ஒருவருக்கொருவர் நேசித்துக் கொண்டவர்களுக்கு ஒளியினால் தயார் செய்யப்பட்ட மேடைகள் உண்டு. அதில் அவரைக் கண்டு நபிமார்களும், வீரமரணம் அடைந்தவர்களும் ஆசை கொள்வார்கள்’ என இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: முஆத்பின் ஜபல் (ரலி), திர்மிதி)

    இறைவன் தமக்காக நேசிக்கும் தனது அடியார்களுக்கு மிகஉயரிய அருட் கொடைகளை வழங்கி கவுரவப்படுத்துகின்றான்.

    இறைவிசுவாசியின் அன்பு, நேசம், பாசம் அனைத்தும் சுயநலமில்லாமல், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான சகோதரத்துவ அடிப்படையில் இறைவனுக்காக அமையவேண்டும். இதில்தான் அவர் இறைவிசுவாசத்தின் சுவையையும், இன்பத்தையும் பெறவேண்டும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை
    மனிதன் மனிதனாக வாழ மனமாற்றம் தேவை. மனமாற்றத்திற்கான அடித்தளம் சன்மார்க்க வழிகாட்டலில் அடங்கியுள்ளது. சன்மார்க்க வழிகாட்டலோ இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது.
    சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுவதைவிட பண்பாட்டு வீழ்ச்சியால்தான் சமகால மனிதன் அதிகம் பாதிக்கப்படுகிறான். சூழல் மாசுபடுவதுகூட மனித மனங்கள் மாசு பட்டிருப்பதன் வெளிப்பாடே.

    மனிதனைத் தவிர்த்து கோடான கோடி உயிரினங்கள் இந்தப் பூமியில் உயிர் வாழ்கின்றன. அவை உயிர் வாழ்வதால் இந்தப் பூமியில் எவ்வித நாசமோ சிறு குழப்பமோ இதுவரை ஏற்பட்டதில்லை. அதேநேரம் மனித மனங்கள் நாசமாகிவிட்ட காரணத்தால் மட்டுமே சூழல் மாசுபடுகிறது.

    மனிதன் தன்னுடைய அனைத்துத் துறைகளிலும் அதர்மத்துடன் செயல்படுகின்றான். அமெரிக்காவுக்கான தூரம் குறைந்துள்ள அதேவேளை, அண்டை வீட்டுக்கான தூரத்தை மனிதன் அதிகப்படுத்திவிட்டான். இது இன்றைய மனிதன் செய்திருக்கும் மகத்தான சாதனைகளில் ஒன்று என்றும் கூறலாம். அதாவது உள்ளங்கையில் உலகைச் சுருக்கிய மனிதன் உள்ளங்களை தூரமாக்கிவிட்டான்.

    மனித உறவுகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. இனத்தின் பெயரால்.. மொழியின் பெயரால்.. தேசத்தின் பெயரால்.. மனிதன் துண்டாடப்படுவதுதான் இன்றைய மனிதன் அடைந்திருக்கும் இன்னொரு சாதனை என்றுகூட இதனைக் குறிப்பிடலாம்.

    அமெரிக்காவில் வசிப்பவரைக் குறித்தும், ஆப்ரிக்காவில் வசிப்பவரைக் குறித்தும் அறிந்து வைத்திருக்கும் நமக்கு, அண்டை வீட்டில் யார் வசிக்கின்றார் என்பதைக் குறித்து எதுவும் தெரிவதில்லை. அந்தோ பரிதாபம்.

    யானை முதல் திமிங்கலம் வரை அனைத்து உயிரினங்களையும் மனிதன் அடக்கி ஆளு கிறான். மனிதனைத் தவிர அனைத்து உயிரினங் களுக்கும் சிற்றறிவுதான். ஆனால், மனிதனுக்கு மட்டும் ஆறாம் அறிவு எனும் பகுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது.

    இப்போது ஒரு கேள்வி எழுகிறது. சன்மார்க்க வழிகாட்டுதல்களும், இறைத்தூதர்களும், வேதங்களும் பகுத்தறிவுகொண்ட மனிதர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பகுத்தறிவற்ற ஏனைய உயிரினங்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை? உண்மையில் பகுத்தறிவற்ற உயிரினங்களுக்கு அல்லவா சரியான வழிகாட்டுதல்கள் தேவைப்படும்? அவைகளுக்கு ஏன் வழங்கப்படவில்லை? காரணம் என்ன?

    ஆம், மனித வாழ்வுக்கென சில எல்லைகள் உண்டு என்பதுதான் இதற்கான காரணம். அந்த எல்லைகளை மீறும்போது மனிதத்தன்மையில் இருந்து மிருகத்தன்மை கொண்டவனாக மனிதன் மாறுவான். அவ்வாறு அவன் எல்லை மீறாமல் இருக்கவே இந்த வழிகாட்டுதல்கள். அதேவேளை மிருகங்கள் ஒருபோதும் எல்லை மீறுவதில்லை.

    ஓர் ஆடு, குட்டியை ஈனும்போது அல்லது ஒரு மாடு கன்றை பிரசவிக்கும்போது சற்று நேரத்திலேயே அந்தக் குட்டி, பால் குடிக்க தாயின் மடியை நோக்கித் தானாகச் செல்லும். இறைவன் அவ்வாறுதான் இயற்கையிலேயே அவற்றை படைத்துள்ளான்.

    ஆனால், மனிதக்குழந்தையைப் பொறுத்தவரை பிறந்த உடன் அழுவதற்கு மட்டுமே அதற்குத் தெரியும். ஓடிச் சென்று தானாகப் பால் அருந்தத் தெரியாது. பெற்றெடுத்த தாய்தான் குழந்தையை மார்போடு வாரியணைத்து அமுதூட்டுவாள். என்ன பொருள் இதற்கு? ஆரம்பம் முதலே ஓர் உறுதுணையும் வழிகாட்டுதலும் மனிதனுக்கு தேவைப்படுகிறது என்பதுதான்.

    முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவரும் ஒரு கோழிக் குஞ்சுக்கு முன்பாக, மண்ணில் கொஞ்சம் தானிய மணிகளை போட்டுப் பாருங்கள். மணல் எது தானிய மணி எது என்பதைப் பிரித்தறியும் ஆற்றல் அதற்கு இருக்கும். இயற்கையிலேயே இறைவன் அவ்வாறு அமைத்துள்ளான். நாய், பூனை, கழுதை ஆகிய அனைத்து உயிரினங்களுக்கு அவை பிறந்தது முதலே அவற்றுக்கான உணவு எது என்று நன்கு தெரியும். உடலுக்கு எது நல்லது? எது கெட்டது? என்பது குறித்தும் அவை நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன.

    ஆனால், மனித விவகாரம் அவ்வாறல்ல. தவழும் பருவத்தில் இருக்கும் ஒரு குழந்தை கவனிப்பார் எவருமின்றி தனிமையில் விடப்பட்டால் என்ன நடக்கும்? ஓடும் பாம்பையும் கையில் பிடிக்கும். சுடும் நெருப்பையில் கையில் எடுக்கும். ஏன்.. சிலபோது தான் கழித்த மலத்தைக்கூட கையில் எடுத்து தின்ன முற்படும். ஒரு நாய்குட்டி கூட செய்யாத மோசமான செயலை இங்கே மனிதக் குழந்தை செய்கிறது.

    இந்த சந்தர்ப்பத்தில் தான் இது கூடாது என்று கற்றுக்கொடுக்கும் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் எது கூடும் எது கூடாது என்று கற்றுக்கொடுக்க வேண்டிய கடமையும் கூடவே சேர்ந்து வருகிறது. ஏனெனில் கற்றுக்கொடுப்பதன் மூலமும் கற்றுக்கொள்வதன் மூலமும் மட்டுமே மனிதன் பகுத்தறிவு கொண்டவனாக மாறுகின்றான்.

    ஆக.. கட்டுப்பாடற்ற சுதந்திர வாழ்வு மனிதனை மிருகமாக மாற்றும். தனி மனித உரிமை, தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் பண்பாடு களுக்கு விலங்கு மாட்டி, ஓரத்தில் ஒதுக்கி வைக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

    உண்மையில் கட்டற்ற சுதந்திரம் மனிதனை மனிதனாக மாற்றாது. மாறாக அது அழிவிற்கே இட்டுச் செல்லும். மனிதனே அதற்கு முன்னுதாரணமாக இருக்கின்றான். எய்ட்ஸ் நோய்களின் தோற்றம் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தின் வெளிப்பாடு அன்றி வேறென்ன?

    எனவே மனிதனுக்கு சில வழிகாட்டுதல்கள் எப்போதும் தேவைப்படுகின்றது. ஒரு சில எல்லைகளை அவன் மீறாமல் இருக்க சன்மார்க்க வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இதற்காகத்தான் படைப்பாளனாகிய அல்லாஹ் இறைத் தூதர்களையும் இறை வேதங்களையும் அனுப்பி வைத்தான்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தி இது:

    இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் கத்தர்நியாகட் வனப்பகுதியில் குரங்குகளால் வளர்க்கப்பட்ட எட்டு வயது பெண் சிறுமி ஒருவரை வன அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பின்னர் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

    “இந்தக் குழந்தைக்கு ஒரு வார்த்தைகூட பேச வரவில்லை. மனிதர்கள் அவளுக்கு அருகே சென்றால் அந்தக் குழந்தை அவர்கள் மீது பாய்ந்து தாக்க முற்படுகிறது. அந்தச் சிறுமிக்கு மனிதர்களைப் போன்று நடக்கவோ சாப்பிடவோ தெரியவில்லை. நடப்பதற்கு எவ்வளவோ பயிற்சிகள் கொடுத்த பின்பும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி குரங்குகளைப் போன்றுதான் அவள் நடக்கின்றாள். கால்களிலும் கைகளிலும் பெரிதாக நகம் வளர்ந்துள்ளது”.

    இந்தச் செய்தி நமக்குத் தரும் பாடம் என்ன? மனிதன் பூனை வளர்க்கிறான், ஆடு வளர்க் கிறான். மாடு வளர்க்கிறான். ஏன் நாயைக் கூட வளர்க்கிறான். மனிதன் வளர்த்த காரணத்தால் எந்த விலங்கினமும் மனித குணாதிசயங்களை பெறுவதில்லை. எத்தனை வருடங்கள் சென்றாலும் மனிதனால் வளர்க்கப்படும் ஆடும், மாடும் ஏனைய கால்நடைகளும் விலங்குகளாகவே வளர்கின்றன. அவை மனிதக் குணங்களைப் பெறுவதில்லை. அல்லாஹ் அவற்றை அவ்வாறு படைக்கவும் இல்லை.

    ஆனால் மனிதன் அவ்வாறல்ல. எட்டு வருட காலத்திலேயே குரங்குகளால் வளர்க்கப்பட்ட ஒரு குழந்தை குரங்கின் குணாதிசயங்களைப் பெறுகின்றது என்றால் என்ன பொருள்?

    மனிதன் மனிதனாகவும், பகுத்தறிவு மிக்கவனாகவும் மாறவேண்டுமெனில் அவனுக்கு வழிகாட்டுதல்களும் பண்பாட்டுப் பயிற்சியும் தேவை. இல்லையெனில் விண்ணில் உயர்வதற்குப் பதிலாக மண்ணில் அழிந்து போவான். மிருகக் குணங்களைப் பெறுவான். ஆகவேதான் இறைத்தூதர்கள் வாயிலாகவும் இறைவேதங்கள் மூலமாகவும் மனிதனுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

    மனிதன் மனிதனாக வாழ மனமாற்றம் தேவை. மனமாற்றத்திற்கான அடித்தளம் சன்மார்க்க வழிகாட்டலில் அடங்கியுள்ளது. சன்மார்க்க வழிகாட்டலோ இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது.

    நூஹ் மஹ்ழரி, குளச்சல்

    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘மனத்தூய்மை’ குறித்த தகவல்களை காண்போம்.
    மனத்தூய்மை என்றால் எந்த ஒரு செயலை செய்தாலும் அது வணக்கமாக இருந்தாலும் சரி, அல்லது நற்கருமங்களாக இருந்தாலும் சரி, அதை உலக ஆதாயத்திற்காகவும், மக்களின் வரவேற்பிற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும், பெருமைக்காகவும் செய்யாமல் இறைவனுக்காக மட்டுமே செய்வது தான் மனத்தூய்மை ஆகும்.

    இப்படி நடந்து கொள்ளும்படிதான் இறைவனும் திருக்குர்ஆன் மூலம் இவ்வாறு உத்தரவு போடுகின்றான்:

    ‘இறைவனுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக இறைவனை அவர்கள் வணங்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்’. (திருக்குர்ஆன் 98:5)

    “செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ‘ஒருவரின் ‘ஹிஜ்ரத்’ (மக்காவை துறந்து மதீனாவிற்குச் செல்லுதல்), அவர் அடைய இருக்கும் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அல்லது அவர் மணக்க இருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால் அவரது ‘ஹிஜ்ரத்’ எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உமர் (ரலி), புகாரி).

    மனிதன் செய்கின்ற எந்த ஒரு செயலும் அவனது எண்ணத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. ‘எண்ணம் போல் வாழ்வு’ என்றும் சொல்லப்படுகிறது. அந்த எண்ணம் தூய்மையானதாகவும், மாசற்றதாகவும், இறைவனுக்கு மட்டுமே உரித்தானதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அமைந்திருப்பதுதான் உண்மையான இறைநம்பிக்கை ஆகும்.

    அஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்த அபூபராஸ் தெரிவிப்பதாவது: “ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மனத்தூய்மை’ என பதில் அளித்தார்கள்”. (நூல்: பைஹகீ)

    மனத்தூய்மை என்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பது நிரூபணமாகிவிட்டது. மனத்தூய்மை இல்லாத எந்த ஒரு செயலையும் இறைவன் ஏற்பதும் இல்லை; விரும்புவதும் இல்லை.

    ‘(பலியிடப்படும்) மாமிசங்களோ, அவற்றின் ரத்தங்களோ இறைவனை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்’. (திருக்குர்ஆன் 22:37)

    ‘உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ, வெளிப்படுத்தினாலோ அதை இறைவன் அறிகிறான்’. (திருக்குர்ஆன் 3:29)

    ‘இறைவனுக்காக வேண்டி மனத்தூய்மையாக செய்யப்படக்கூடிய, அவனின் திருப்பொருத்தத்திற்காக செய்யப்படக்கூடிய செயல்களைத் தவிர வேறெந்த செயலையும் இறைவன் பொருந்திக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஉமாமா அல்பாஹிலி (ரலி), நூல்: நஸயீ)

    பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், முகஸ்துதிக்காகவும் நிறைவேற்றப்படக்கூடிய செயல்களில் இறைவனுக்காக மட்டுமே செய்யவேண்டியதில் பிறரையும் கூட்டுச் சேர்க்கும் இணைவைப்பு செயல் அரங்கேற்றப்படுகிறது. இணைவைப்பு இறைநம்பிக்கையின் எதிர்நிலையாகும். இந்த செயல் மனத்தூய்மையில் மாசு ஏற்படுத்தி, அதை பாழாக்கி விடுகிறது.

    ‘எவர் பிறருக்கு காட்டவேண்டும் என்பதற்காக தொழுகிறாரோ, நோன்பு நோற்கிறாரோ, தர்மம் வழங்குகிறாரோ அவர் இறைவனுக்கு இணைவைத்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி), நூல்: அஹ்மது)

    ‘தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்’. (திருக்குர்ஆன் 107:4, 6)

    “மறுமைநாளில் முதன் முதலாக தீர்ப்புச் சொல்லப்படுகின்ற மனிதர் இறைவழியில் வீரமரணம் அடைந்த தியாகி ஆவார். அவர் இறைவன் முன்னிலையில் கொண்டுவரப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். அவரும் அதை ஏற்றுக்கொள்வார். ‘இதை வைத்து நீ என்ன செய்தாய்?’ என்று இறைவன் கேட்பான். ‘நான் வீரமரணம் அடையும் வரை போராடினேன்’ என்று அவர் பதில் அளிப்பார். அதனை இறைவன் மறுத்து, ‘இல்லை, நீ பொய் பேசுகிறாய். நீ வீரன் என்று போற்றப்பட போர் செய்தாய்’ என இறைவன் கூறுவான். பிறகு, அவன் முகங்குப்புற இழுத்துக்கொண்டு வரப்பட்டு, நரகில் வீசப்படுவான்”.

    “மேலும் கல்வியைக் கற்று, அதனை பிறருக்கு கற்றுக்கொடுத்து திருக்குர்ஆனை ஓதிய மனிதனும் கொண்டுவரப்படுவான். அவருக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். ‘உனக்கு அருளப்பட்ட இந்த அருட்கொடையை வைத்து நீ என்ன செய்தாய்?’ என்று இறைவன் கேட்பான். ‘நான் கல்வியைக் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுத்து, திருக்குர்ஆனையும் ஓதினேன்’ என்று அவன் பதிலளிப்பான். அதற்கு இறைவன் மறுப்பு தெரிவித்து ‘இல்லை, நீ பேசுவது பொய். நீ அறிவாளி என்று மக்கள் போற்றவேண்டும். நீ அழகாக குர்ஆனை ஓதுபவர் என்று மக்கள் அழைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தாய்’ என்று கூறுவான். அவனும் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துக் கொண்டுவரப்பட்டு, அதில் வீசப்படுவான்”.

    “மேலும், செல்வந்தன் ஒருவன் கொண்டுவரப் படுவான். அவனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். அவனும் அதை ஏற்றுக்கொள்வான். ‘இதை வைத்து நீ என்ன செய்தாய்?’ என்று அவனும் விசாரிக்கப்படுவான். அதற்கு அவன் ‘இறைவா! நீ எந்த வழியில் செலவு செய்ய வேண்டுமென விரும்பினாயோ அத்தனை வழிகளிலும் அதனை செலவு செய்தேன்’ என்பான். ‘இல்லை, நீ பேசுவதெல்லாம் பொய். நீ ஒரு கொடை வள்ளல் என்று மக்கள் போற்ற வேண்டும் என்பதற்காக செலவு செய்தாய்’ என்று இறைவன் கூறுவான். அவனும் முகங்குப்புற இழுத்துக் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

    மூவரும் மனத்தூய்மை இல்லாமல், முகஸ்துதிக்காக மட்டும் நடந்து கொண்டதினால் இறைவன் அவர்களின் நல்லறங்களை பாழாக்கிவிட்டு, நாளை மறுமையில் அதிபயங்கரமான தண்டனைகளையும் வழங்கி, இவ்வாறு நடந்து கொள்ளும் மற்றவருக்கும் இறைவன் எச்சரிக்கை விடுகின்றான்.

    ‘நிச்சயமாக இறைவன் உங்களின் தோற்றத்தையோ, உங்களின் பொருளாதாரத்தையோ பார்ப்பது கிடையாது. எனினும், உங்களின் உள்ளங்களையும், உங்களின் (மனத்தூய்மையான) செயல்களையும் தான் பார்க்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    பேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசடி செய்வான்” இவைதான் ஒரு நயவஞ்சகனின் அசல் அடையாளங்களில் சில என நபிகள் நாயகம் பட்டியலிட்டு கூறியிருக்கிறார்கள்.
    கடவுளின் படைப்பில் இந்த மனிதப்படைப்பு மிகவும் வித்தியாசமானது. எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு முகம் தான். அதுவும் என்றும் மாறா முகம். ஆனால் இந்த மனிதனுக்குத் தான் எத்தனை எத்தனை முகங்கள்?

    வீட்டில் ஒரு முகம், வேலை செய்யும் இடத்தில் ஒரு முகம், உறவினர்களிடத்தில் ஒரு முகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், ஏழைகளிடத்தில் ஒரு முகம், பணக்காரர்களிடத்தில் ஒரு முகம்... என ஒரே முகத்தில் வெவ்வேறு வகையான முகமூடிகளை அணிந்த மனிதர்களை, மனித முகங்களை அன்றாடம் நாம் கண்டு கொண்டிருக்கிறோம், காட்டிக்கொண்டும் இருக்கிறோம்.

    உண்மையில் மனிதனின் நிஜமான முகம் எது?

    அன்பான முகம் தான் மனிதனின் உண்மையான முகம்.

    ‘நண்பனை புன்முறுவலுடன் சந்திப்பது(ம் கூட) தர்மமாகும்’ என்றார்கள் நபிகள் நாயகம்.

    இன்று எங்கு பார்த்தாலும் மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கவேண்டிய அந்த அன்பும், அரவணைப்பும், பற்றும், பாசமும், நேசமும், நேயமும் இருக்கிறதா?

    எங்கு பார்த்தாலும் மனிதநேயத்திற்கு முற்றிலும் மாற்றமான செயல்களே நடக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் எப்படி நற்செயல்கள் என்று ஏற்றுக்கொள்ளமுடியும்? மனிதனை மனிதனே அழிப்பதற்கு முயற்சிப்பது என்றைக்கும் ஏற்க முடியாத ஒன்று. இதுகுறித்த நபிமொழி வருமாறு:-

    “எவர், சிலரிடம் ஒரு முகத்துடனும், வேறு சிலரிடம் ஒரு முகத்துடனும் இருந்தாரோ அவர்தான் மறுமையில் கடும் வேதனைக்கு உரியவர், எவர் இம்மையில் இருமுகத்துடன் இருந்தாரோ அவர் மறுமையில் நெருப்பினால் ஆன இருநாக்குகளுடன் இருப்பார்” என்று நபிகளார் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், தாரமி)

    எனவே, ஆளுக்கு தகுந்தாற்போல் வேஷம் போடுவதும், நடிப்பதும், கள்ளத்தனம் செய்வதும் கூடாது. உண்மையான முகம் தான் என்றைக்கும் வெற்றிபெறும். மனிதர்களை வேண்டுமானால் எளிதில் ஏமாற்றி விடலாம், ஆனால் நம்மைப் படைத்துப் பாதுகாக்கும் அந்த இறைவனை நாம் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றி விட முடியுமா என்ன?

    ‘கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப்பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்’. (திருக்குர்ஆன் 2:115)

    ‘மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்’. (திருக்குர்ஆன் 55:27)

    இறைவன் எத்தகைய முகம் உள்ளவன் என்பதை நாம் அறிவதற்கு இந்த இரண்டு வசனங்கள் மட்டுமே போதும். எனவே அவனது திருமுகத்தை விட்டும். நாம் நம் முகத்தை வேறொரு திசைப்பக்கம் திருப்பிக்கொள்ள முடியாது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன..

    நாம் இறைவனின் திருமுகத்தை முன்னோக்குகிற அதே வேளையில் மனிதர்களின் முகத்தையும் நாம் முன்னோக்க மறந்து விடக்கூடாது என்பதை பின்வரும் வான்மறை வசனம் மிகத்துல்லியமாக சொல்லி எச்சரிக்கிறது:

    ‘புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவைகள் தான் புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்)’. (திருக்குர்ஆன் 2:177)

    இறைபக்தியுள்ளோர்களின் முகம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை இவ்வசனம் தெள்ளத்தௌிவாகக் கூறுகிறதல்லவா?

    நாம் பெருஞ்செலவு செய்து பூசும் அழகு சாதனங்களில் முகஅழகும், வசீகரமும் இல்லை; நாம் வௌிப்படுத்தும் நமது நற்குணங்களில் தான் இருக்கின்றது. நமது அகம் அழகு பெற்றுவிட்டால் நிச்சயம் நமது முகமும் பேரழகு பெற்றுவிடும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

    இதனால் தான் நமது நபிகள் நாயகம் இப்படிச் சொன்னார்கள்:

    “நற்குணங்களால் தம்மை அலங்கரித்துக் கொண்டவர்கள் தான் இறை நம்பிக்கையில் பரிபூரணமானவர்கள்”.

    பணத்தை எப்படியும் நாம் சம்பாதித்து விடலாம், ஆனால் குணம் என்பது அப்படியா? நம் முகம் நற்குணத்தால் பிரகாசிக்க வேண்டும் என்றால் அதற்கு கொஞ்ச காலம் பயிற்சியும், நல்ல முயற்சியும் எடுக்க வேண்டும்.

    ‘யாரைப்பற்றியும் என்னிடம் குறை சொல்லாதீர்கள்’ என்று நபிகளார் தன் தோழர்களுக்கு அவ்வப்போது சொல்லி வந்தார்கள், என்று அவர்களது வாழ்வியல் வரலாறு கூறுகிறது என்றால் நபிகளார் தம் முகத்தை, தன் சமூகத்தை எப்படி வௌிக்காட்ட வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

    முகங்களில் எத்தனையோ முகங்கள் உண்டு. அதில் இந்த பெருமை முகம் தான் பேராபத்திற்குரிய முகம் என்று அருள்மறை அறிமுகம் செய்கிறது இப்படி:

    ‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே. பூமியில் பெருமையாகவும் நடக்காதே. அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்’. (திருக்குர்ஆன் 31:18)

    நம் முகத்தில் அலங்காரம் இருக்கலாம், அகங்காரம், ஆணவம், அகம்பாவம், அடுத்தவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. குறிப்பாக, பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் அறவே கூடாது. இது குறித்து நமக்கு மன்னிப்பின் மறுமுகத்தை திருக்குர்ஆன் இவ்வாறு அடையாளப்படுத்திக் காட்டுகிறது:

    ‘எனினும், ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்’ (திருக்குர்ஆன் 5:45).

    இன்றைக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும் நயவஞ்சக முகங்களே திரும்பும் திசையெல்லாம் திகைப்பூட்டுகின்றன. அவற்றை நாம் துல்லியமாக அடையாளம் காண்பதற்குள் நமது முகமே கூட வேறொரு முகமாக மாறிப்போய்விடக்கூடும்.

    “பேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசடி செய்வான்” இவைதான் ஒரு நயவஞ்சகனின் அசல் அடையாளங்களில் சில என நபிகள் நாயகம் பட்டியலிட்டு கூறியிருக்கிறார்கள்.

    உண்மைக்கு என்றைக்கும் ஒரே ஒரு முகம் தான். பொய்களுக்குத் தான் பலமுகங்கள்; பல முகமூடிகள் தேவைப்படுகின்றன.

    எல்லோரும் ஒரே முகத்தோடு இன்முகமாய் இருக்க வேண்டும். மனித முகங்கள் மலரும் போது தானே மனித நேயமும் வளரும்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    இறைவனை நேசிப்போம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நேசிப்போம், நபி வழி நடப்போம், இறைநம்பிக்கையை வளமாக்குவோம்
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம், ‘இறைவனை நேசிப்பது’, ‘இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களை நேசிப்பது’, மற்றும் ‘நபி வழியை பின்பற்றுவது’ ஆகிய இறை நம்பிக்கைகள் குறித்த தகவல்களை காண்போம்.

    இறைவனையும், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் நேசிப்பது, நபி வழியைப் பின்பற்றுவது இறை நம்பிக்கையின் முக்கியமான அம்சங்களாகும். நாம் அவ்விருவரையும் நமது உயிரை விடவும், உடைமைகளை விடவும், பெற்றோரை விடவும், குடும்பத்தாரை விடவும், வியாபாரத்தை விடவும், உடன்பிறந்தாரை விடவும், வீட்டை விடவும், செல்வத்தை விடவும் உயர்வாக நேசிக்க வேண்டும்.

    அவர்களின் நேசத்திற்கு நிகராக வேறெந்த நேசமும் இருக்கக்கூடாது. இத்தகைய நேசமே பரிபூரண இறைநம்பிக்கையின் அடையாளம். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நஷ்டத்தை அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் இறைவனைவிட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகிவிட்டால் இறைவன் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள். குற்றம் புரியும் கூட்டத்துக்கு இறைவன் வழிகாட்டமாட்டான், என்று நபியே கூறுவீராக’ (திருக்குர்ஆன் 9: 24)

    இது குறித்த நபிமொழிகள் வருமாறு:

    ‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். அவை: 1) இறைவனும், அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவராக இருப்பது. 2) ஒருவர் மற்றொருவரை இறைவனுக்காகவே நேசிப்பது. 3) நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி).

    ‘உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரை விடவும் நான் மிக நேசமானவராகும் வரை அவர் உண்மையான இறை நம்பிக்கையாளராக மாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

    அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அறிவிப்பதாவது:-

    “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் உமர் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார். அந்நேரம் உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் ‘இறைத்தூதரே! எனது உயிரைத் தவிரவுள்ள எல்லாவற்றையும் விட நீங்களே எனக்கு நேசமானவர்கள்’ என்று கூறினார்கள்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை! என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! உமது உயிரைவிடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவராக ஆகும் வரை நீர் உண்மை இறைவிசுவாசியாக முடியாது’ என்றார்கள். உடனே உமர் (ரலி) நபியை நோக்கி ‘இப்போது இறைவனின் மீதாணை! எனது உயிரை விடவும் தாங்களே எனக்கு மிகவும் நேசமானவர்கள்’ என்றார். ‘இப்போதுதான் உமரே! சரியாகச் சொன்னீர்’ என நபி (ஸல்) கூறினார்கள்.” (புகாரி)

    இறைவன் மற்றும் இறைத்தூதரை நேசிப்பது என்பது, ஒன்று மற்றொன்றுடன் தொடர் புடையது. ஒருவரை நேசித்து, மற்றவரை நேசிக்காமல் இருக்கமுடியாது. ஒருவரை வெறுத்தாலும் மற்றவரை வெறுக்க வேண்டியது வரும்.

    இருவரின் நேசத்தையும் ஒருசேர அடைய சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அது என்ன வழி? இறைவனும், இறைத்தூதரும் கட்டளையிட்டதை முடிந்தளவு கடைப்பிடித்து வாழவேண்டும். அவ்விருவரும் தடுத்ததை முற்றிலும் தவிர்ந்து நடக்கவேண்டும். அவர்களுக்கு எது பிரியமானதோ அது நமக்கும் பிரியமானதாகவும், அவர் களுக்கு எது வெறுப்பானதோ அது நமக்கும் வெறுப்பானதாகவும் இயற்கையாகவே ஆக வேண்டும்.

    சொல்லாலும், செயலாலும், இன்பத்திலும்-துன்பத்திலும், லாபத்திலும்-நஷ்டத்திலும், செழுமையிலும்-வறுமையிலும், ஆரோக்கியத்திலும்-நோயிலும், இளமையிலும்- முதுமையிலும் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் முழுமையாக அவர்களை பின்பற்ற வேண்டும்.

    மனோ இச்சைக்கு எதிராக எதை தூண்டினார்களோ அதை தேர்ந்தெடுத்து நடக்க வேண்டும். பிரியப்படும் இருவரையும் அதிகம் நினைவு கூரவேண்டும். பிரியமான இருவரையும் நினைவு கூரப்படும் போது பணிவு, பயபக்தியுடன் கண்ணியப்படுத்திட வேண்டும்.

    இருவரும் யாரை நேசித்தார்களோ அவரையும் நாம் நேசிக்க வேண்டும். வெறுத்தோரை நாம் வெறுக்க வேண்டும். ஒட்டு மொத்தத்தில் அவ்விருவரின் எண்ணம் போன்று நமது வாழ்வு அமைந்திட வேண்டும்.

    ‘ஒன்றை நேசிப்பது அது உன்னை குருடனாகவும், செவிடனாகவும் மாற்றிவிடும்’ என்பது அரேபிய பழமொழி. நாம் இறைவனையும், இறைத்தூதரையும் உண்மையாக நேசிக்கும் போது மற்றதை காணமாட்டோம். மற்றதை கேட்க மாட்டோம். இருவரின் ஆழமான நட்பில் நாம் மூழ்கும் போது கண்முன் நடப்பது தெரியாது.

    காதுக்கு நேராக பேசுவது கேட்காது. நமது பார்வையும், செவிப்புலனும் நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களுக்காகவே மட்டும் செயல்படும். மற்றவர்களுக்காக செயல்படாது. இதுதான் உண்மையான நேசத்தின் அடையாளம். இந்தத் தன்மை இறைவனையும், இறைத்தூதரையும் நேசிப்பவர்களிடம் வெளிப்பட வேண்டும்.

    இறைவனை நேசிப்பதினால் நன்மையான காரியங்கள்தான் வெளிப்படுமே தவிர தீமைகள் அல்ல.

    ‘(நல்லவர்கள்) இறைவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்’. (திருக்குர்ஆன் 76:8)

    இறைவனை அறியாதோருக்கு, அவனின் நேசத்தை உளப்பூர்வமாக உணராதோருக்குக்தான் சாதாரண இறைக்கட்டளைகளும், இறைக்கடமைகளும் கடினமாகத் தெரியும். இறை நேசத்தை உணர்ந்தோருக்கு மலையளவு கடமை கூட மலைக்க வைக்காது.

    ‘இறைவனை அறிந்தவன் அவனை நேசிக்கின்றான். இவ்வுலகை அறிந்தவன் அதை வெறுக்கின்றான்’. (ஹஸன் பஸரீ (ரஹ்).

    உலகில் வாழும் ஒவ்வொரு இறைவிசுவாசியின் உள்ளமும் மூன்று விதங்களில் இறை வனைப் பற்றி நினைக்கிறது.

    1) இறைவனின் அச்சத்தை உணர்வது, 2) இறைவன் தனக்கு சொர்க்கத்தை தரவேண்டும் என இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது, 3) இறைவனை நேசிப்பது.

    மெய்யான அன்பு

    நபி (ஸல்) அவர்களின் மீது கொண்ட அன்பினால் ஒரு பெண் எப்படி நடந்து கொண்டார்? என்பதை அறியும் போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    ஒரு அன்ஸாரிப் பெண்மணியின் தந்தை, அவரின் சகோதரர், அவரின் கணவர் மூவரும் உஹதுப்போரில் நபியவர்களுடன் கலந்து கொண்டனர். அதில் வீரமரணமும் அடைந்தனர்.

    அந்தப்பெண் போர்க்களம் காண வந்தபோது, அந்த மூவரும் கொல்லப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ‘நபி (ஸல்) எப்படி இருக்கிறார்கள்?’ என்றுதான் முதலில் விசாரித்தார். நபியை கண்கூடாக கண்ட போதுதான் அவரின் கவலை மாயமாகிப் போனது. இதுதான் மெய்யான அன்பு.

    “ஒருவர் நபியவர்களிடம் வந்து, ‘உலகம் எப்போது அழியும்?’ என கேட்டார். ‘அதற்காக நீர் என்ன ஆயத்தப்படுத்தி வைத்துள்ளீர்?’ என நபி (ஸல்) அவர்கள் அவரிடம் திரும்பக் கேட்டார்கள். ‘நான் அதிகமான தொழுகை களையோ, நோன்புகளையோ, தானதர்மங் களையோ தயார்படுத்தி வைக்கவில்லை. எனினும் நான் இறைவனையும், இறைத்தூதரையும் நேசிக்கிறேன்’ என்று அவர் பதில் கூறினார். உடனே நபியவர்கள், ‘நீர் யாரை நேசிக்கிறீரோ அவர்களுடனேயே இருப்பீர்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி).

    இறைவனின் நேசத்தை அடைய இறைத்தூதரையும், இறைத்தூதரின் நேசத்தை அடைய நபிவழியையும் பின்பற்றினால் போதும்.

    “(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 3:32)

    இறைவனை நேசிப்போம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நேசிப்போம், நபி வழி நடப்போம், இறைநம்பிக்கையை வளமாக்குவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    நமது சின்னச்சின்ன செயல்பாடுகள்கூட தூய்மையாக அமைந்துவிட்டால், மரணத்தைத் தாண்டியும் நாம் அடையாளப்படுத்தப்படுவோம். மரணத்திற்குப் பின்னரும் அவை நம்மைக் காப்பாற்றக்கூடும்.
    ஒருவர் மரணமடைந்து விட்டால் உலகத்துடனான அவருடைய தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விடும் என்பது உண்மை. ஆயினும் அவர் விட்டுச்செல்லும் சுவடுகள், அவருடைய மறைவுக்குப் பின்னரும் உலகில் இருந்துகொண்டே இருக்கும். அவை நல்ல சுவடுகளாக இருக்கலாம், அல்லது தீயவையாக இருக்கலாம்.

    எனவே, வாழும் காலத்திலேயே நல்ல அடையாளங்களை விட்டுச்செல்லும் வண்ணம் வாழ்வை அமைத்துக்கொள்ளல் வேண்டும்.

    அனைத்துச்செயல்களையும் இறைவன் பதிவு செய்துகொண்டே இருக்கின்றான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆயினும் நாம் விட்டுச்செல்லும் சுவடுகளைக்கூட இம்மி பிசகாமல் பதிவு செய்கிறான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இறைவன் கூறுகின்றான்: “திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக்கொண்டே இருக்கின்றோம். அவர்கள் விட்டுச்சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம்”. (திருக்குர்ஆன் 36:12)

    இறைவனின் மன்னிப்பையும், மறுமை வெற்றியையும் பெறுவதற்கு சிலபோது நாம் விட்டுச்செல்லும் நல்ல சுவடுகள்கூட நமக்கு துணை நிற்கலாம்.

    ஆம், நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர் நமது தர்மத்தை உண்டவர் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். நாம் விட்டுச்செல்லும் சுவடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும்.

    நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர், நமது வார்த்தைகளால் ஆறுதல் அடைந்தவர் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். ‘நம்மை போன்று ஆறுதல் வார்த்தைகள் கூற யாரும் இல்லையே’ என்று அவர் ஆதங்கப்பட வேண்டும்.

    நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர், நம்மால் நல்வழி பெற்றவர் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும்.

    நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர், நமது நல்ல நடத்தையால் கவரப்பட்டவர்கள் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும்.

    நாம் விட்டுச்செல்லும் சுவடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த சுவடுகள்தான் நமது இறைவனை, மன்னிக்கும் இறைவனாக நமக்குப் பெற்றுத்தரும்.

    ஆயினும், நம்மில் பெரும்பாலானோர் விட்டுச்செல்லும் அடையாளங்கள் எப்படி இருக்கின்றன?

    அரண்மனை போன்ற வீடு, வசதிமிக்க வாகனம், பேர் சொல்லும் பிள்ளை, குடும்பத்தினர் சிரமம் இன்றி உண்டு கழித்து மகிழ்ந்திருக்க திரண்ட செல்வம்.

    இதைத்தானே அனேகமானவர்கள் விட்டுச்செல்கின்றார்கள்.

    இந்த அடையாளங்களும், சுவடுகளும் நமக்கான மறுமை வெற்றியைப் பெற்றுத்தருமா?

    ஒருபோதும் இல்லை. மாறாக மறுமை வெற்றியை சிலபோது இவை கேள்விக்குறியாக மாற்றிவிடக்கூடும்.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “மனிதன் மரணித்துவிட்டால் மூன்றே மூன்று விஷயங்களைத் தவிர அவனது அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டுவிடும். அவை: நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, அவனுக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை”. (முஸ்லிம், திர்மிதி)

    இவைதான் உண்மையான சுவடுகள். இதுபோன்ற சுவடுகள்தான் மன்னிக்கும் இறைவனை மறுமையில் பெற்றுத்தரும்.

    அபூபக்கர் (ரலி) அவர்கள் பார்வையற்ற மூதாட்டி ஒருவரைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். அபூபக்கர் (ரலி) அவர்கள் மரணித்த பிற்பாடு, அந்த மூதாட்டியைப் பராமரிக்கும் பொறுப்பை உமர் (ரலி) ஏற்றுக்கொண்டார். ஒருநாள் அந்த மூதாட்டியைச் சந்திக்கச் செல்கின்றார் உமர் (ரலி) அவர்கள்.

    உமர் (ரலி) அவர்களிடம் அந்த மூதாட்டி கேட்டார்: “உமது நண்பர் மரணித்துவிட்டாரா?”

    உமர் (ரலி) சற்று நேரம் திகைத்துவிட்டார். காரணம் அபூபக்கர் (ரலி) அவர்கள் மரணித்த செய்தி அந்த மூதாட்டிக்குத் தெரிய வாய்ப்பு குறைவு. அந்த மூதாட்டியிடம் கேட்டார்கள், “உங்களுக்கு எப்படி அது தெரியும்?”

    மூதாட்டி: “உமது நண்பர், பேரீத்தம் பழங்களை எனக்கு உண்ணத் தரும்போது அதன் விதைகளை அகற்றிவிட்டுத்தான் எனக்குத் தருவார். ஆனால் நீர் விதைகளுடன் தருகின்றீரே”.

    உமர் (ரலி) அவர்களால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

    அலி (ரலி) அவர்களின் பேரர் ஜஅபர் (ரலி) அவர்கள், கோதுமையையும் உணவுகளையும் கோணிப்பையில் அடைத்து, மதீனாவில் வசிக்கும் ஏழைகளின் வீட்டுவாசல்களில் அதிகாலைப் புலர்வதற்கும் முன்னரே ஒவ்வொரு நாளும் வைப்பார்கள். யார் இந்த உணவை வைக்கின்றார்கள் என்று எவ்வளவுதான் முயன்றும் எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருநாள் ஜஅபர் (ரலி) மரணமடைகின்றார். அன்றைய தினத்தின் அதிகாலையில் ஏழைகளின் வீட்டு வாசல்களில் உணவுப் பொட்டலங்கள் எதுவும் வைக்கப்படவில்லை.

    அவரது உடலைக் குளிப்பாட்டும்போது இடது தோளில் ஒரு வடு இருப்பதை மக்கள் கவனிக்கின்றார்கள். ஆம்... நாளெல்லாம் ஏழைகளுக்காக உணவுகளை சுமந்த வடுதான் அது.

    இக்கட்டான சந்தர்ப்பங்களில் உதவியவர்களை மனிதர்கள் ஒருபோதும் மறப்பதில்லை.

    பொதுப்போக்குவரத்து வாகனங்களில் வயது முதிர்ந்தவர்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுப்பது, சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் தாம் போகும் பாதையில் இருப்பவர்களை ஏற்றிச்சென்று உதவுவது, பாரமான பொருட்களை வாகனங்களில் ஏற்றவும், இறக்கவும் உதவுவது, அவசரத் தேவைகளின்போது கை கொடுத்து உதவுவது.. போன்றவைதான் நல்ல சுவடுகள்.

    ஆம், அடுத்தவர்களை மகிழ்விப்பதற்கும், அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பெரும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்பதல்ல.

    மாறாக, நமது சின்னச்சின்ன செயல்பாடுகள்கூட தூய்மையாக அமைந்துவிட்டால், மரணத்தைத் தாண்டியும் நாம் அடையாளப்படுத்தப்படுவோம். மரணத்திற்குப் பின்னரும் அவை நம்மைக் காப்பாற்றக்கூடும்.

    இவ்வுலகில் சிலர் விட்டுச்செல்லும் அடையாளங்கள், காற்றில் கரைந்து காற்றோடு காற்றாக மறைந்துவிடுகிறது. இன்னும் சிலர் விட்டுச்செல்லும் அடையாளங்களோ பசுமரத்தாணி போன்று மனித மனங்களில் அப்படியே பதிந்துவிடுகிறது. எனவே நாம் விட்டுச்செல்லும் சுவடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டிய நேரம் இதுதான்.

    நூஹ் மஹ்ளரி, குளச்சல்
    நடந்து போனதை எல்லாம் ‘அவன் செயல்’ என்று கூறி, விதி என நம்பி கடந்து போக வேண்டும். கடக்க வேண்டியதை கதி என்று நினைத்து முயற்சி செய்து முன்னேற வேண்டும். விதியை நம்புவதிலும் நன்மைகள் பல இருக்கத்தான் செய்கிறது.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான விதியை நம்புவது மற்றும் விதியின் வினையை ஏற்பது குறித்த தகவல்களை காண்போம்.

    உலகில் நடக்கும் அனைத்தும் இறைவன் விதித்த விதிப்படியும், அளவுப்படியுமே நடக்கிறது என்று நம்பிக்கை கொள்வதுதான், ‘விதியை நம்புவது’ ஆகும்.

    நன்மை-தீமை, லாபம்-நஷ்டம், செல்வம்-வறுமை, இன்பம்-துன்பம், பிறப்பு-இறப்பு... இவை அனைத்தும் இறைவனால் உண்டாக்கப்பட்டவை. இவை அனைத்தும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் நடக்கிறது.

    மனிதன் செய்யும் நன்மையான காரியங்களுக்கு நற் கூலியையும், தீமையான காரியங்களுக்கு தண்டனையையும் இறைவன் வழங்குவான்.

    நன்மையும், தீமையும் இறைவன் நாட்டப்படி அரங்கேறினாலும், அவன் நன்மையை பொருந்திக்கொள்வான். தீமையைப் பொருந்தமாட்டான் என்றும் நம்பவேண்டும்.

    ‘அவன் தனது அடியார்களிடம் மறுப்பைப் பொருந்திக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக்கொள்வான்’. (திருக்குர்ஆன் 39:7)

    ‘நன்மை-தீமை இரண்டும் இறைவன் நாட்டமில்லாமல் நடக்காது’ என்று கூறும் பொழுது, நன்மை புரிந்தவருக்கு நல்ல பிரதி பலனும், தீமை செய்தவருக்கு தண்டனையும் கொடுப்பது நியாயமா? என்ற ஒரு நியாயமான கேள்வி எழுகிறது அல்லவா?.

    ஆம், பின்னாளில் நடக்க இருக்கிற காரியங்களை அவன் இன்னதென நமக்கு தெரிவிக்கவில்லையே. அவன் நமக்கு வெளிப்படையாக அறிவித்ததெல்லாம் ஏவல்களும், விலக்கல்களும் தான். எனவே, அறிவித்தபடி ஏவலை ஏற்றும், விலக்கியதை விட்டும் தவிர்ந்து நடந்திட வேண்டும். இது ஒரு சாத்தியமான நடவடிக்கையே. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடு கிறது:

    ‘உள்ளத்தின் மீதும், அதை வடிவமைத்தவன் மீதும் சத்தியமாக, அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்’. (திருக்குர்ஆன் 91:7-10).

    விதி ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வாறு கூறியதிலிருந்து நன்மை-தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து செயல்களில் ஈடுபடுவதற்குரிய தகுதியை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

    விதி அடிப்படையில் எதுவும் நடக்கும் என்று எப்படியும் இருந்து விடக்கூடாது. நடந்ததை விதியின் மீது சுமத்தி, நடக்க இருப்பதை முழுமுயற்சியால் அடைய முற்பட வேண்டும்.

    “ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்?, நரகவாசிகள் யார்? என்று (முன்பே இறைவனுக்குத்) தெரியுமா?’ என முகம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.

    ‘ஆம்! தெரியும்’ என்றார்கள் நபிகளார்.

    ‘அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரிய வேண்டும்?’ என்று அந்த நபர் கேட்டார்.

    அதற்கு நபியவர்கள், ‘ஒவ்வொருவரும் எதை அடைவதற்காகப் படைக்கப்பட்டார்களோ அல்லது எதை அடைவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ அதற்காகச் செயல் படுகிறார்கள்’ என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூஸைன் (ரலி), புகாரி)

    ஒவ்வொருவரின் விதியும் அவர் படைக்கப்படுவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.

    ‘இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது இறைவனுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்)’. (திருக்குர்ஆன் 57: 22,23)

    ‘ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்’. (திருக்குர்ஆன் 54:49)

    ‘அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தான்; அதைத் திட்டமிட்டு அமைத்தான்’. (திருக்குர்ஆன் 25:2)

    ‘அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது’. (திருக்குர்ஆன் 33:38)

    ‘இறைவன் வானங்களையும், பூமியையும் அமைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து படைப்பினங் களின் விதிகளையும் தீர்க்கமாக எழுதிவிட்டான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), முஸ்லிம்)

    எது நடந்தாலும், அது விதியின் அடிப்படையிலேயே நடக்கிறது. நடந்துவிட்ட ஒன்றுக்கு யாரும் யாரையும் குறைகூறக்கூடாது. நடந்துவிட்டதை நினைத்து வாழ்க்கையே முடங்கிவிட்டது என்று ஊனமாகி விடவும் கூடாது. வாழ்வின் அடுத்தகட்ட நகர்வுக்கு நம்மை தயார்படுத்திட வேண்டும்.

    ‘(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதமிடம் மூஸா (அலை) அவர்கள், ‘ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்களின் பாவத்தின் காரணமாக) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்’ என்றார்கள்.

    அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘மூஸாவே! இறைவன் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் வேதத்தை) வரைந்தான். இப்படிப்பட்ட நீங்கள், இறைவன் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்து விட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?’ என்று கேட்டார்கள்.

    (இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டதாக மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    தாயின் கருவறையில் கருவாக உருவானதிலிருந்து கல்லறை வரைக்கும் நடக்கும் ஒவ்வொரு செயலும் இறைவன் விதித்த விதியின் அடிப்படையிலேயே நடக்கிறது என்பதை நபிகள் நாயகம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

    இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) தெரிவிப்பதாவது:

    ‘உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு, அதைப் போன்றே (40 நாட்கள்) அந்த கரு (அட்டை போன்று கருப்பையின் கவரைப் பற்றிப் பிடித்துத்தொங்கும்) ஒரு கட்டியாக மாறுகிறது. பிறகு, அதைப்போன்ற (மேலும் 40 நாட்கள்) மெல்லப்பட்ட சக்கை போன்ற ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது’.

    ‘பிறகு (அதனிடம்) இறைவன் ஒரு வானவரை அனுப்பு கிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப் படுகிறார். 1) அந்த மனிதனின் வாழ்வாதாரம், 2) வாழ்நாள் (செயல்பாடு), 3) அவன் துர்பாக்கியசாலியா? 4) அல்லது நற்பாக்கியசாலியா? (ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள் உயிர் ஊதப்படும்’.

    “இதனால்தான் இறைவன் மேல் ஆணை, ‘உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே விரிந்த இரண்டு கைகளின் நீட்டளவு, அல்லது ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்ய, அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்து விடுவார். இதைப் போன்றே ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும், சொர்க்கத்திற்கும் இடையே ஒரு முழம் அல்லது இரண்டு முழங்கள் இடைவெளிதான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள அவர் நரகவாசி களின் செயலைச்செய்து, அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்து விடுவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (புகாரி)

    ‘இயலாமை, மற்றும் புத்துணர்ச்சி உட்பட யாவும் விதியின் பிரகாரமே நடக்கிறது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), முஸ்லிம்)

    விதியை நம்பவேண்டும். அதிலே தர்க்கம் செய்யக் கூடாது. விதி குறித்து விவாதம் செய்ய ஆரம்பித்தால் அது எல்லை தாண்டி போய்விடும். அதனால் இறைநம்பிக்கையும் பாழாகிவிடும்.

    ஷைத்தான் தான் விதியைப் பற்றி தர்க்கம் செய்பவன். அவன் இறைவனிடம் ‘உன்னுடைய விதியில் நான் ஆதம் (அலை) அவர்களுக்கு சிரசை தாழ்த்துவேன் என்றிருந்தால், அவ்வாறு நான் செய்யாமல் போனதற்கு எனக்கு சக்தி இருக்குமோ?’ என விவாதம் செய்தான். இதனால் இறைவனின் நிரந்தரமான சாபத்திற்கு அவன் ஆளாகி விட்டான்.

    கூபா நகரப் பள்ளிவாசலில் ஒருவர் விதியைப் பற்றி மக் களுக்கு உரை நிகழ்த்தினார். அதனைக் கேள்விப்பட்ட அலி (ரலி) அவர்கள் அவரை அழைத்து, ‘இனிமேல் நமது இறைஇல்லங்களில் விதி குறித்து பேசக்கூடாது’ என எச்சரிக்கை செய்தார்கள்.

    விதியைப் பற்றி வீணாக விவாதித்து, வழிகெட்டுப் போனவர்கள் ஜப்ரிய்யா, கத்ரிய்யா கூட்டத்தினர் ஆவர். அவர்களைப் போன்று நாமும் வழிகெட்டு போய்விடக்கூடாது.

    நடந்து போனதை எல்லாம் ‘அவன் செயல்’ என்று கூறி, விதி என நம்பி கடந்து போக வேண்டும். கடக்க வேண்டியதை கதி என்று நினைத்து முயற்சி செய்து முன்னேற வேண்டும். விதியை நம்புவதிலும் நன்மைகள் பல இருக்கத்தான் செய்கிறது.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை
    உண்மையாளர்களை, உண்மையாகவே நேசித்தால் உயர்வான இடம் நிச்சயம் கிடைக்கும் என்பதை ஸைத் (ரலி)யின் வாழ்வு நமக்கு வலியுறுத்தும் நற்பாடமாகும்.
    திருக்குர்ஆனில் மொத்தம் 25 நபிமார்களின் திருப்பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. அதில் நபி இப்ராகிம் (அலை), நபி மூஸா (அலை), நபி ஈஸா (அலை) போன்ற நபிமார்களின் பெயர்கள் பல முறை இடம் பெற்றுள்ளது. முகம்மது நபி (ஸல்) அவர்களின் திருப்பெயர் 4 முறை இடம் பெற்றுள்ளது.

    அதுபோல நபிகளாருக்கு ஆயிரமாயிரம் உயிர்த்தோழர்கள் (சஹாபாக்கள்) இருந்த போதிலும், அவர்களில் ‘ஸைத்’ என்ற ஒரு நபித்தோழரின் பெயர் மட்டுமே திருக்குர்ஆனில் பதிவாகி உள்ளது.

    அத்தகைய சிறப்பு மிக்க நபித்தோழர் ஸைத் குறித்த வரலாற்று பின்னணியை பார்ப்போம்.

    பாரம்பரியமிக்க கல்ப் குலத்தை சார்ந்த ஹாரிதாவின் மகன் ஸைத். அவரது தாய் புகழ்பெற்ற வள்ளலான ஹாதிம் தாயின் பரம்பரையை சார்ந்தவர்.

    ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாயி என்ற கிராமத்திற்கு தனது தாயாருடன் ஸைத் சென்றிருந்தார். அப்போது ஒரு கொள்ளைக்கும்பல் குதிரையில் வந்து அக்கிராமத்தை சூறையாடியது.

    அப்போது அக்கொள்ளையர்கள் ஆண்கள் பலரையும் சிறைபிடித்து சென்றார்கள். அவர்களில் இளைஞரான ஸைதும் கைதாகி இருந்தார். பின்னர் கைதிகளாக பிடிபட்டவர்களை எல்லாம் உக்காஸ் என்ற அரேபிய சந்தையில் அடிமைகளாக விற்று விட்டார்கள்.

    அந்த சந்தைக்கு கதீஜா (ரலி) அவர்களின் சகோதரரின் மகனான ஹிஷாம் என்பவர் சென்று சில அடிமைகளை விலைக்கு வாங்கினார். அதில் ஸைதும் ஒருவராய் வாங்கப்பட்டு இருந்தார்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அவர்களை திருமணம் முடித்திருந்த காலகட்டம் அது. மணமகளாக இருந்த கதீஜா அவர்கள் தனது மருமகனான ஹிஷாமை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்கள்.

    அது சமயம் ஹிஷாம் சில அடிமைகளை கதீஜா (ரலி) அவர்களிடம் காட்டி, அவர்களில் ஒருவரை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொண்டார். கதீஜா (ரலி) அவர்கள், அந்த அடிமைகளில் ஸைதையே தேர்வு செய்தார்கள்.

    அச்சமயம் பராகா என்ற அடிமைப்பெண் நபிகளாருக்கு பணிவிடை செய்துவந்தார். ஆனால் அவரை நபிகளார் அடிமைத்தளையில் இருந்து விடுவித்து சுதந்திரமாக செல்ல அனுமதித்து இருந்தார்.

    எனவே, கதீஜா (ரலி) அவர்கள் தனது கணவருக்கு உதவியாக இருக்க, ஸைதை அனுப்பினார்கள்.

    நபிகளார், ஸைதிடம் அன்பாகவும், பரிவாகவும் ஒரு தந்தையை போன்றே நடந்து கொண்டார்கள். நாட்கள் செல்லச்செல்ல ஸைத் நபிகளாரின் உற்ற நேசராகவே மாறிப்போனார்.

    இந்த நிலையில் ஸைதை அவரது பெற்றோர்கள் தேடிஅலைந்தனர். எவ்வளவோ அலைந்து திரிந்தும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் தவியாய் தவித்தனர்.

    கஅபாவின் புனித யாத்திரை காலம் தொடங்கியபோது, கல்ப் குலத்தவர்கள் பலரையும் மக்காவின் வீதிகளில் நடமாடுவதை ஸைது கண்டார்.

    ஸைத் அவர்களை அணுகி தான் மக்காவில் இருப்பதை தனது பெற்றோரிடம் தெரிவிக்க கேட்டுக்கொண்டார். அப்போது அவர்களிடம் இவ்வாறு கூறி அனுப்பினார்:

    ‘எனது குடும்பம் எனக்காக துயரப்படுவதை நான் நன்கறிவேன். இறைவனின் அருள் நிறைந்த தலங்களில் (மக்காவில்), புனிதமானதோர் (நபிகளாரின்) இல்லம் தான் எனது உறைவிடமாகும். உயர் குலங்களில் அனைத்திலும் உயர்ந்த இடத்தில் நான் உறைந்திருக்கின்றேன். என்னை தேடி அலைவதினால் ஒட்டகங்களை களைப்படையச் செய்யாதீர்கள். எனக்கெனச் சுமந்த துயரங்களை எல்லாம் உடனே விட்டு விடுங்கள்’.

    இவ்வாறு தன்பெற்றோரிடம் கூறுமாறு ஸைத் தகவல் அனுப்பினார்.

    இச்செய்தி கிடைத்தவுடன் ஸைதின் தந்தையான ஹாரிதா தனது தம்பியை உடன் அழைத்துக் கொண்டு மக்காவுக்கு விரைந்து சென்றார்.

    மக்காவை வந்தடைந்ததும் அவர் நபிகளாரை நேரில் சந்தித்தார். தனது மகன் ஸைதை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென வேண்டியதோடு, அதற்கு ஈட்டுத்தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாக நபிகளார் முன் பணிவுடன் கூறி நின்றார்.

    ஸைத் யாருடன் இருக்க வேண்டும் என்பதை ஸைதே முடிவு செய்யட்டும் என்றார்கள் நபிகளார்.

    ‘ஸைத், உங்களோடு வர சம்மதித்தால், எனக்கு எந்த ஈட்டு தொகையும் தராமல் தாராளமாக உங்களது மகனை நீங்கள் அழைத்துச்செல்லலாம். ஆனால் அவர் என்னுடன் இருக்க விரும்பினால், என்னை தேர்வு செய்யும் எவரையும் நான் நிராகரித்து நிற்பவன் அல்ல’ என்று நபிகளார் உறுதியுடன் கூறினார்கள்.

    அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் ஸைத் அங்கு வந்தார்.

    அவரை அழைத்த நபிகளார், ‘ஸைதே இவர்களை உமக்கு தெரியுமா?’ எனக்கேட்டார்கள்.

    ‘ஆம்’ என்ற ஸைத், ‘ஒருவர் தனது தந்தை, மற்றவர் தனது சிறிய தந்தை’ என்று கூறினார்.

    ‘இவர்கள் உம்மை மீட்டு உமது ஊருக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார்கள். உமது விருப்பப்படி நீர் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்ற நபிகளார், முடிவெடுக்கும் பொறுப்பை ஸைதின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார்கள்.

    ஸைத் அதற்கு மிக நிதானமாகவே பதில் கூறினார்.

    ‘அண்ணலே, உலகில் உங்களுக்கு பகரமாக வேறு எவரையும் நான் தேர்வு செய்ய மாட்டேன்’ என்றார்

    இதைக் கேட்ட அவரது தந்தை ஹாரிதா இடி விழுந்ததை போல திகைத்து நின்றார். அவரது நிலை கண்டு மனம் இரங்கிய நபிகளார் ஹாரிதாவையும் அவரது தம்பியையும், புனித தலமான கஅபாவிற்கு அழைத்துச்சென்றார்கள்.

    மக்களை எல்லாம் சப்தமாக அழைத்து ஒன்றுகூட்டி, ஸைதின் கையை பிடித்துக்கொண்டு, ‘இன்று முதல் ஸைத் எனது மகனாவார், நான் அவரது தந்தை’ என பிரகடனம் செய்தார்கள்.

    இது ஸைதின் தந்தைக்கும், அவரது தம்பிக்கும் மிகுந்த ஆறுதலை தந்தது.

    தனது மகன், அருள் நிறைந்த அன்பாளரான நபிகளாரிடம் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் கருதப்படுவதை கண்டு மன நிறைவோடு தனது ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    நபிகளாரை, ஸைத் தனது பெற்றோர்களை விடவும், தன்னைவிடவும் பெரிதும் நேசித்தமையும், நபிகளாரை ஸைத் அளவு கடந்த பிரியத்தோடு தேர்வு செய்து கொண்டமையும் அவருக்கு மிக அரியதோர் வாய்பை ஏற்படுத்தி தந்தது எனலாம்.

    திருக்குர்ஆனில் அவரது பெயர் 33-வது அத்தியாயம் 37-வது திருவசனத்தில் இடம் பெற்றுள்ளது.

    நபிகளாரும் ஸைதும் தந்தை மகன் என்ற பலமான நேசமும் பாசமும் கொண்டவர்களாக இருந்த போதிலும், உலகில் வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற சொந்த மகனைப் போன்று ஆக முடியாது என்பதை வலியுறுத்தி இறைவன் தன் வசனத்தை குர்ஆனில் இவ்வாறு இறக்கி வைத்தான்:

    ‘(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 33:40).

    உண்மையாளர்களை, உண்மையாகவே நேசித்தால் உயர்வான இடம் நிச்சயம் கிடைக்கும் என்பதை ஸைத் (ரலி)யின் வாழ்வு நமக்கு வலியுறுத்தும் நற்பாடமாகும்.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை.
    முகம்மது (ஸல்) அவர்களையும், இறைவனின் இறுதித் தூதராக நம்பி, அவர் கூறும் அறிவுரைகளையும் ஏற்று அவர் வழியில் நடைபோட வேண்டும். இவ்வாறு நடப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைத்தூதர்களான நபிகளை நம்புவது’ குறித்த தகவல்களை காண்போம்.

    நபிமார்கள் என்றால் யார்?

    நபிமார்கள் என்பவர்கள் மனிதர்களில் புனிதர்கள், மாமனிதர்கள்.

    இவர்களுக்கு இறைவனிடம் இருந்து இறைச்செய்திகள் அறிவிக்கப்படுகிறது. அவற்றை, அவர்கள் நன்றாக விளங்கி, அதில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் சமுதாயத்தவர்களுக்கு போதிப் பவர்கள்.

    இவர்கள் சீரிய சிந்தனையாளர்கள், புரட்சியா ளர்கள். சமூக சீர் திருத்த கருத்துக்களை விதைத்து, சமூக முன்னேற்றத்திற்கு அயராது அல்லும் பகலும் பாடுபடக்கூடியவர்கள். சமூக தீமைகளுக்கு எதிராக போராடுபவர்கள், சமூகக்கொடுமைகளை துணிவுடன் அகற்றியவர்கள்.

    மக்களை, சத்தியத்தின் பக்கம் அழைப்பவர்கள், அசத்தியத்தை தயங்காமல் எதிர்ப்பவர்கள். இறைவனை அடைய எளியமுறையில் இறைக்கோட்பாடுகளை இனிமையாக பேசுபவர்கள். நல்லதை ஏவுபவர்கள், தீயதை தடுப்பவர்கள். சமூக ஒற்றுமைக்காக உழைத்தவர்கள். இறைவழியிலும், நேரான பாதையிலும் மக்களை அழைத்து நல்வழி காட்டுபவர்கள்.

    அவர்கள் அன்பானவர்கள்; அழகானவர்கள்; பண்பாளர்கள்; வாய்மையாளர்கள்; மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்; பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள்; இறை நேசர்கள்; சமூக சேவகர்கள். இப்படி பன்முகத்தன்மை வாய்ந்தவர்கள் தான் நபிமார்கள்.

    இவர்களையும், இவர்கள் கொண்டு வந்ததையும், செய்து வந்ததையும், சொல்லி வந்ததையும், அங்கீ கரித்து வந்ததையும் நம்பிக்கை கொள்வது இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.

    நபி-ரசூல்

    நபிமார்கள், ரசூல்மார்கள் இடையே சிறிய வேறுபாடு உள்ளது. ரசூல் என்பவருக்கு தூதுத்துவம், நபித்துவம் ஆகிய இரண்டு தன்மைகளும் உண்டு.

    நபி என்பவருக்கு நபித்துவம் மட்டுமே இருக்கும். அதாவது, மார்க்கத்தின் புதிய சட்ட திட்டங்களைக் கொண்டு இறைச்செய்தி இறக்கப்பட்டு, அதனை மக்களுக்கு எடுத்துச் சொல்பவர் இறைத்தூதர் எனப்படுவார். இவருக்கு தனிவேதமோ, சிறிய ஏடுகளோ வழங்கப்பட்டாலும், வழங்கப்படவில்லையானாலும் சரியே.

    நபி என்பவருக்கு புதிய சட்டங்களைக் கொண்டு, வேத செய்தி இறக்கப்படாது. அவருக்கு முன்பு வந்த இறைத்தூதரின் சட்டங்களையே பின்பற்றி பிரச்சாரம் செய்பவராக இருப்பார்.

    நபிமார்களை நம்புவதில் நான்கு விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது. அவற்றை விரிவாக காண்போம்...

    1) இறைவன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களிலிருந்தே ஒரு இறைத்தூதரை அனுப்பி வைத்தான். ஒரே இறைவனை மட்டுமே வணங்கிட அவர் தம் மக்களை அழைப்பார்; இறைவன் அல்லாதவற்றை வணங்குவதை மறுத்துப் பேசுவார். இறைச் செய்திகளிலிருந்து எதையும் மறைக்காமல், மாற்றாமல் உள்ளதை உள்ள படியே தெரிவிப்பார். அவற்றிலிருந்து தங்களது விருப்பப்படி ஒரு எழுத்தை கூட கூடுதலாகவோ, குறைவாகவோ கூறமாட்டார்.

    ‘தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர் களுக்கு வேறு எதுவும் உள்ளதா?’ (திருக்குர்ஆன் 16:35)

    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக, அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’ (திருக்குர்ஆன் 14:4).

    இறைத்தூதர்களின் அழைப்புப்பணி, முதல் தூதரிடமிருந்து அவர்களின் இறுதித்தூதர் வரை ஓரிறைக் கொள்கையின் அடிப்படையின் மீதே ஒன்றுபட்டிருந்தது.

    அனைத்து வகையான வணக்கங்களையும், இறைவனுக்கு மட்டுமே ஆற்றிடவேண்டும். அவற்றில் பிறரை கூட்டுச் சேர்க்கக்கூடாது என்ற கொள்கையை அனைவரும் உரக்கச் சொன்னார்கள்.

    ‘என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள், என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை’. (திருக்குர்ஆன் 21:25)

    ‘அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?’ என்று உமக்கு முன் நாம் அனுப்பிய (இறைத்) தூதர்களிடம் கேட்பீராக’. (திருக்குர்ஆன் 43:45)

    தூதர்களிடையே வணக்க வழிபாடு முறைகள் மாறுபட்டிருக்கலாம். அவரவர் மார்க்கச் சட்டத்தின்படி ஆகுமானவைகள், கூடாதவைகள், கடமைகள் போன்ற விஷயங்களில் ஒருவர் மற்றவருக்கு மாறுபட நேரிடலாம். எனினும், ஓரிறைக் கொள்கையில் அனைவரும் ஒரே கருத்து உடையவர்களாகத்தான் இருந்தார்கள்.

    ‘உங்களில் ஒவ்வொருவருக்கும், வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். இறைவன் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை)’. (திருக்குர்ஆன் 5:48)

    2) யாரின் பெயரை நாம் அறிந்திருக்கிறோமோ அவரையும், யாரின் பெயரை நாம் அறியவில்லையோ அவரையும், பெயர் இல்லாமல் எவர் குறிப்பிடப்படுகிறாரோ அவரையும் நம்புவது முஸ்லிம்கள் மீது கடமை.

    ‘உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. இறைவனின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டுவருவது எந்தத் தூதருக்கும் இல்லை’. (திருக்குர்ஆன் 40:78)

    ‘(முகம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர் களின் வரலாற்றை உமக்குக் கூறவில்லை’. (திருக்குர்ஆன் 4:164)

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரி வித்ததாக அபூதர் (ரலி) கூறுவது:

    “அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களின் எண்ணிக்கை எத்தனை?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் ஆவர். அவர்களில் முன்னூற்றி பதினைந்து பேர் ரசூல் (இறைத்தூதர்)கள் ஆவர்’ என்று கூறினார்கள்”. (நூல்:அஹ்மது, மிஷ்காத்)

    இவர்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றவர்கள் 25 நபிமார்கள். அவர்கள் பெயர் வருமாறு:-

    ஆதம் (அலை), நூஹ் (அலை), இத்ரீஸ் (அலை), இப்ராகிம் (அலை), இஸ்மாயில் (அலை), இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை), யூசுப் (அலை), லூத் (அலை), ஷீத் (அலை), ஸாலிஹ் (அலை), சுஅய்ப் (அலை), மூஸா (அலை), ஹாரூன் (அலை), தாவூத் (அலை),

    சுலைமான் (அலை), அய்யூப் (அலை), துல்கிப்லு (அலை), யூனுஸ் (அலை), இல்யாஸ் (அலை), அல்யஸஉ (அலை), ஜகரிய்யா (அலை), யஹ்யா (அலை), ஈஸா (அலை), முகம்மது (ஸல்).

    இவர்களில், ஆதம் (அலை), நூஹ் (அலை), இப்ராகிம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முகம்மது (ஸல்) ஆகியோர் உறுதிமிக்க தூதர்கள் எனும் சிறப்புப்பெயரை பெற்றவர்கள்.

    3) இறைத்தூதர்களிடம் இருந்து வந்த சரியான தகவல்களையும் நம்ப வேண்டும். மேலும் முகம்மது (ஸல்) அவர்களையும் நம்பி, அவர் காட்டிய வழியிலும் செயல்பட வேண்டும்.

    ‘(முகம்மதே) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 4:65)

    4) முகம்மது (ஸல்) அவர்களை இறை வனின் இறுதித்தூதராகவும் நம்பவேண்டும்.

    இதுகுறித்தும் திருக்குர்ஆன் இவ் வாறு ஆணித்தரமாக அறிவிக்கிறது:

    ‘முகம்மது, உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக இறைவனின் தூதராகவும், நபிமார்களில் இறுதியானவராகவும் இருக்கிறார்’. (திருக்குர்ஆன் 33:40)

    ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக்கொள்ள மதீனாவில்) அலி (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும் வரை தமக்குப் பிரதிநிதியாக) நியமித்தார்கள். அப்போது அலி (ரலி) ‘குழந்தைகளையும், பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில், என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்) எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை’ என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: புகாரி).

    மேற்கூறப்பட்டதின் அடிப்படையில் இறைத் தூதர்களான நபிமார்களை நம்பவேண்டும். இறை வனால் அருளப்பட்டது என்று அவர்கள் கூறிய தகவல்களையும் நம்பி அவர்களை பின்பற்றவேண்டும்.

    முகம்மது (ஸல்) அவர்களையும், இறைவனின் இறுதித் தூதராக நம்பி, அவர் கூறும் அறிவுரைகளையும் ஏற்று அவர் வழியில் நடைபோட வேண்டும். இவ்வாறு நடப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி. இவ்வாறு நடப்பவரே உண்மையான முஸ்லிமாக ஆவார். 
    ×