search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஓதுவீராக நபியே ஓதுவீராக
    X

    ஓதுவீராக நபியே ஓதுவீராக

    மனித படைப்பின் உள்ளார்ந்த விஞ்ஞான செய்திகளை அன்றே சொன்ன திருக்குர்ஆன் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்பது அகிலம் அறிந்த உண்மை.
    நபியே! அனைத்தையும் படைத்த உமது இறைவனின் பெயரால் அவனது கட்டளைகள் அடங்கிய திருக்குர்ஆனை ஓதுவீராக. அவனே மனிதனை ரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான். நபியே, மேலும் நீர் ஓதுவீராக, உமது இறைவன் மாபெரும் கொடையாளி. அவன்தான் எழுதுகோலைக்கொண்டு எழுத கற்றுக்கொடுத்தான். அதன் மூலம் மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்கு கற்று கொடுக்கின்றான். (திருக்குர்ஆன் 96:1-5)

    இருண்ட காலம் மடமை இருள் உலகெங்கும் தலை விரித்தாடியது. மக்கள் விலங்கினங்களுக்கு இணையாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, தான் தோன்றித்தனமாய் வாழ்வைச் சுவைத்துக்கொண்டிருந்தார்கள். குறிகேட்டல், குடி, கும்மாளம், சூதாட்டம், கொலை, கொள்ளை, மது, மாது போன்ற கேளிக்கைகள் தான் வாழ்வியல் என்று எண்ணி மனிதர்கள் மாக்களாய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இறைத்தூதர்களை அனுப்பியும், உலகை வெள்ள பிரளயத்தால், இடி முழக்கத்தால், இயற்கை சீற்றத்தால், தலைகீழாய் கவிழ்த்துப்போட்டும் மனிதன் தன்னை திருத்தி கொள்ளாத நிலை நீடித்தது. மனித இனம் முழுவதுமாய் அழிந்துவிடலாகாது என்பதற்காக ஏற்கனவே சபூர், இன்ஜீல், தவ்ராத் போன்ற எல்லா இறைவேதங்களிலும் குறிப்பிட்டபடி இறுதி நபி முஹம்மதுவை இந்த உலகிற்கு அனுப்ப அல்லாஹ் நாடினான்.

    மக்காவில் பனூ ஹாஸிம் என்ற குலத்தில் அப்துல்லாஹ்- ஆமினா தம்பதியரின் மகனாக பிறந்தார்கள். நபி பெருமானார் (ஸல்) அவர்களை அன்னை ஆமினா கர்ப்பமுற்றிருந்த போதே நபிகளாரின் தந்தை அப்துல்லா காலமாகி விட்டார்கள். அதன்பின் பல சிரமங்களுக்கு மத்தியில் அன்னை ஆமினா அண்ணலாரை பெற்றெடுத்தார்கள். அன்னையின் மெலிந்த உடல்வாகும், ஏழ்மை நிலையும் பிள்ளைக்கு போதிய அளவு தாய்ப்பால் கொடுக்கும் சக்தியை வழங்கவில்லை. எனவே ஹலீமா என்ற செவிலித்தாய் மூலம் பாலூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

    நபி பெருமானார் (ஸல்) அவர்கள் ஆறு வயதை எட்டியபோது அன்னை ஆமினா கடும் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார்கள்.

    தன் ஆறு வயது இளம் பருவத்திலேயே நபிகளார் தாய்-தந்தை இருவரையும் இழந்து அனாதையானார்கள். தனது எட்டாம் வயதிலேயே பாட்டனார் அப்துல் முத்தலிப்யையும் இழந்து தன்சிறிய தந்தை அபூதாலிப் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்கள்.

    குழந்தைப்பருவம் முதல் ஒவ்வொரு செயலிலும் நல்லொழுக்கத்துடன் வளர்ந்தார் நபிகள் பெருமான். உலகில் உள்ள மொத்த ஞானத்தையும், இனிவரும் காலங்களில் தோன்றவிருக்கும் அறிவின் மொத்தத்தையும் சேர்த்து அன்றே இறைவன் அண்ணலாருக்கு வழங்கியதால் அவர்கள் யாரிடமும் கல்வி கற்கவில்லை. கற்றுகொடுக்கப்படவும் இல்லை. கடைசி காலம் வரை ‘உம்மி நபி’யாக வாழ்ந்தாலும் ஞானத்தின் திறவு கோலாய்த் திகழ்ந்தார்கள்.

    அண்ணல் எம்பெருமானாருக்கு 12 வயது ஆகும்போது ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். பின்னர் கடைவீதிகளுக்குச்சென்று சிறுசிறு வியாபாரங்களில் ஈடுபட்டார்கள். தான் சம்பாதித்த பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தானம் செய்தார். இரண்டாவது பகுதியை தனக்கும் குடும்பத்திற்கும் செலவுக்கு கொடுத்தார். மூன்றாவது பகுதி பணத்தை வியாபாரத்தில் மீண்டும் முதலீடு செய்ய பயன்படுத்தினார். நபிகள் பெருமான், அந்த ஏழ்மை நிலையிலும் அதிக தர்மசிந்தனை உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். மக்கா குரைஷியரிடையே ‘அல் அமீன்’ (நம்பிக்கையாளர்) என்ற பெயரை பெற்றிருந்தார்கள்.

    அந்த காலகட்டத்தில் அரேபிய இளைஞர்களை ஒன்று திரட்டி ‘ஹிஸ்புல் புலூல்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் உரிமைகள் பறிக்கப்பட்டவர்கள், அடிமைகள், அனாதைகள், ஆதரவற்றவர்கள் ஆகியோரின் பாதிப்புகளை களைய அரும்பாடுபட்டு வந்தார்கள்.

    ஏமன் நாட்டிலிருந்து வந்த ஜூஹைதி கிளையைச் சேர்ந்த ஒரு வியாபாரி தான் கொண்டு வந்த வணிகப்பொருட்கள் மொத்தத்தையும் அபூஜஹிலிடம் விற்று பணத்திற்காக காத்திருந்தார். பலமுறை முயன்றும், ஊர்த்தலைவர்களிடம் முறையிட்டும் அந்த வியாபாரிக்கு நியாயம் கிடைத்தபாடில்லை. இதனை அறிந்த அண்ணலார் ஹிஸ்புல் புலூல் இயக்கத்தோழர்களுடன் அபூஜஹில் வீடு சென்று வாதாடி அந்த வியாபாரிக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்றுத்தந்தார்.

    அண்ணலாரின் நேர்மை, நன்னடத்தை, வியாபாரத்தில் நுண்ணறிவுடன் கொண்ட ஈடுபாடு ஆகியவற்றை கேள்விப்பட்ட அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரை அழைத்து தன் வியாபாரத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் அமர்த்திக்கொண்டார்கள். ஒரு முறை பெரும் வியாபார பொருட்களுடன் சிரியா சென்ற அண்ணலார் சிறந்த ஒரு வணிகத்தை முடித்து அதிக லாபத்துடன் திரும்பி வந்தது அன்னை கதீஜா (ரலி) அவர்களை மிகவும் கவர்ந்தது.

    அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அப்போது கணவனை இழந்த கைம்பெண். பெரும் செல்வசீமாட்டி. அண்ணலை விட வயது அதிகம் கொண்டவர். அவர்களை மணம் முடிப்பதற்கு பெரும் பெரும் வணிகர்கள் எல்லாம் காத்திருந்தனர். ஆனால், அண்ணலாரிடம் கண்ட நேர்மையை மெச்சி அவரை மணமுடிக்க எண்ணினார் கதீஜா அம்மையார். நபிகளும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவே திருமணம் ஒருமனதாய் நிறைவேறியது. இல்லற வாழ்க்கையை இசைபட வாழ்ந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். அவற்றில் ஆண் குழந்தைகள் யாருமே உயிர் வாழவில்லை. பெண் பிள்ளைகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்கள்.

    அண்ணலார் தம் 40-ம் வயதில் உலக வாழ்க்கையில் ஈர்ப்பு குறைந்து தனிமையை நாடினார்கள். எதையோ தேடினார்கள். படைப்பின் நோக்கம் என்ன? படைத்தவனின் ஆற்றல் என்ன? ஏன் இந்த படைப்பு? என்று விடைதெரியாத எத்தனையோ கேள்வி களுக்கு விடை தேடி மக்காவின் அருகில் உள்ள ஹீரா மலைக்குகையை அடைந்து தனிமையில் அமர்ந்து தியானத்தில் திளைத்திருந்தார்கள்.

    அப்போது, வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்ணலார் முன்தோன்றி, “நான் தான் ‘ஜிப்ரீல்’. இறைவனால் அனுப்பப்பட்ட வானவத் தூதன். அண்ணலே அல்லாஹ்வின் கட்டளைப்படி ஓதுவீராக! இக்ரஹ்....” என்று கூறினார்கள்.

    அண்ணலோ, ‘நான் கற்றறியாதவன்! எனக்கு எப்படி ஓதத்தெரியும்’ என்றார்கள்.

    வானவத்தலைவரும் தன் உருவைச் சுருக்கி, அண்ணலின் அருகில் வந்து, குனிந்து அவர்களை நெஞ்சோடு அணைத்து, ‘இப்போது ஓதுங்கள், உம்மைப் படைத்த இறைவன் பெயரால் ஓதுவீராக’ என்றார்கள்.

    தன்னுள் உன்னத உணர்வு தோன்றுவதை நபிகளார் உணர்ந்தார்கள். தன்னை அறியாமலேயே அவர்கள் நாவு அசையத் தொடங்கியது. தங்குதடையின்றி ஓதத்தொடங்கினார்கள். வான்மறையின் வசனங்கள் இறைச்செய்தியாக இறங்கத் தொடங் கியது. அத்தனையும் நபிகளார் மனதில் ஆழமாய் பதிந்தது.

    வான்மறையின் முதல் வசனமே மனித படைப்பு குறித்த அறிவியலைச் சொல்லித்தந்தது. மனித படைப்பின் உள்ளார்ந்த விஞ்ஞான செய்திகளை அன்றே சொன்ன திருக்குர்ஆன் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்பது அகிலம் அறிந்த உண்மை.
    Next Story
    ×