search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரோமானியர்களுடன் போருக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள்
    X

    ரோமானியர்களுடன் போருக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள்

    நபி (ஸல்) படையெடுத்துப் போருக்கு ஆயத்தமாக வந்து விட்டார்கள் என்ற செய்தியை ரோமர்களும் அவர்களது நண்பர்களும் கேட்டவுடன் திடுக்கிட்டனர்.
    இஸ்லாமியப் படை, ரோமர்களைச் சந்திக்க மதீனாவிலிருந்து போருக்குப் புறப்பட்ட காலம் கடுமையான வெயில் காலம். மக்கள் மிகுந்த சிரமத்திலும், பஞ்சத்திலும், வாகனப் பற்றாக்குறையிலும் இருந்தனர். செல்ல வேண்டிய இடம் மிகத் தொலைவில் இருந்ததுடன், அந்தப் பாதையும் கரடுமுரடானதாக இருந்தது. இருப்பினும், முஸ்லிம்கள் நபியவர்களின் கட்டளைக்கிணங்க விரைவாகப் போருக்குத் தயாராகினர். 

    படைக்காக மக்கள் எவ்வளவுதான் செலவு செய்திருந்தாலும் வீரர்கள் பெரும்படையாக -  கிட்டத்தட்ட முப்பதாயிரம் இருந்ததால் - அதற்கேற்ப வாகன வசதியும், உணவும் இல்லாமலிருந்தது. உணவுப் பற்றாக்குறையால் இலை தழைகளைச் சாப்பிட்டதால் வாய் புண்ணாகி விட்டன. அதனால் இப்படைக்கு ‘ஜய்ஷுல் உஸ்ரா (வறுமைப் படை) என்று பெயர் வந்தது. 

    முன்பொரு காலத்தில் ஸமூது கூட்டத்தினர் வசித்திருந்த இடத்திற்கு வந்தடைந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் ஸாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகம் தண்ணீர் குடித்த கிணற்றிலிருந்து மட்டும் நீரை சேமித்துக் கொள்ளும்படி சொன்னதோடு, சபிக்கப்பட்ட இடத்தில் அமைந்த கிணற்றிலிருந்து தண்ணீரைக் குடிக்க வேண்டாமென்று தடுத்தார்கள். 

    படைக்குத் தண்ணீர் தேவை அதிகமாக இருந்தது. நபியவர்களிடம் வந்து முறையிட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ் நாடினால், நாளை நீங்கள் தபூக் ஊற்றுக்குச் செல்வீர்கள். முற்பகலுக்கு முன் நீங்கள் அங்கு சென்றுவிடாதீர்கள். நான் வருவதற்கு முன் உங்களில் எவரும் அங்கு சென்றுவிட்டால், அங்குள்ள தண்ணீரில் கை வைத்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள். 

    அவ்வாறே மக்கள் அங்கு சென்றனர். இருவர் முந்திக்கொண்டு அந்த ஊற்றை நோக்கிச் சென்றனர். செருப்பு வார் அளவுக்கு அந்த ஊற்றில் தண்ணீர் சிறிதளவே சுரந்துகொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் வந்துசேர்ந்தார்கள். இருவரிடமும் "அதன் தண்ணீரில் கை வைத்தீர்களா?" என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இருவரும் "ஆம்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் கண்டித்தார்கள். பிறகு மக்கள் தம் கைகளால் அந்த ஊற்றிலிருந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் அள்ளி ஓரிடத்தில் சேர்த்தனர். 

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தண்ணீரில் தமது கையையும் முகத்தையும் கழுவி அந்த ஊற்றிலேயே அந்தத் தண்ணீரை விட்டார்கள். அப்போது ஊற்றிலிருந்து ஏராளமான தண்ணீர் ‘பீறிட்டு’ நிறைந்து ஓடியது. மக்கள் அனைவரும் தண்ணீர் அருந்தினர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஆதே! எனக்குப் பிறகு நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், இவ்விடத்தில் தோட்டங்கள், குடியிருப்புகள் ஆகியவை நிறைந்திருப்பதைக் காண்பீர்கள்" என்று முன்னறிவிப்பாகக் கூறினார்கள். 

    பிறகு போர் வீரர்களிடம் நபி(ஸல்) அவர்கள், "இன்றிரவு உங்கள்மீது கடுமையான காற்று வீசும். அப்போது உங்களில் எவரும் எழுந்திருக்க வேண்டாம். உங்களில் ஒட்டகம் வைத்திருப்பவர் அதைக் கயிற்றால் கட்டிவைக்கட்டும்" என்று கூறினார்கள். அவ்வாறே அன்றிரவு கடுங்காற்று வீசியது. அப்போது ஒருவர் எழுந்தார். அக்காற்று அவரைத் தூக்கிச் சென்று, "தய்யி" குலத்தாரின் இரு மலைகளுக்கிடையே போட்டுவிட்டது. 

    இப்படியாக நபி(ஸல்) சொல்வதெல்லாம் நடந்தேறிக் கொண்டே இருந்தது. படை வீரர்களும் எதிரிகளைச் சந்திப்பதற்கு எந்நேரமும் ஆயத்தமாக இருந்தனர். நபி (ஸல்) எழுந்து நின்று வீரத்திற்கு உரமூட்டும் பேருரை நிகழ்த்தி, ஆன்மாக்களுக்கு வலிமை ஊட்டினார்கள். பொருளாதாரத்தாலும் தயாரிப்புகளாலும் பின்தங்கியுள்ளோம் என எண்ணியிருந்த முஸ்லிம்களிடமிருந்து தாழ்வு மனப்பான்மையையும் சோர்வையும் இந்தப் பிரச்சாரத்தின் மூலமாக அகற்றினார்கள். 

    நபி (ஸல்) படையெடுத்துப் போருக்கு ஆயத்தமாக வந்து விட்டார்கள் என்ற செய்தியை ரோமர்களும் அவர்களது நண்பர்களும் கேட்டவுடன் திடுக்கிட்டனர். அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்வதற்கும் இஸ்லாமியப் படையைச் சந்திப்பதற்கும் துணிவின்றித் தங்களது நாட்டுக்குள் பல திசைகளிலும் சிதறி ஓடிவிட்டனர். இஸ்லாமியப் படைக்கு அஞ்சி ரோமர்கள் ஓடிவிட்ட செய்தி முஸ்லிம்களுக்கு மேன்மேலும் புகழ் சேர்த்தது, அரபியத் தீபகற்பத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முஸ்லிம்களின் ராணுவ வலிமையை உயர்த்தியது. 

    ஸஹீஹ் புகாரி 5:64:4419, ஸஹீஹ் முஸ்லிம் 43:4582, 4583, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×