search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வளம் சேர்க்கும் வழிபாடும்.. பரிகாரமும்..
    X

    வளம் சேர்க்கும் வழிபாடும்.. பரிகாரமும்..

    எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க நம் வழிபாட்டு முறை பல பரிகாரங்களைச் சொல்லி வைத்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    மக்கள் அனைவரும் இன்பங்களாலும், துன்பங்களாலும் சூழப்பட்டவர்கள். இன்பங்களை வரவேற்கத் தெரிந்தவர்களுக்கு, துன்பங்களை தாண்டிப் போகும் மன தைரியம் இல்லாமல் போய்விடுகிறது. தங்களின் துயரங்களை துடைத்தெரிய அவர்கள் கடவுளை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க நம் வழிபாட்டு முறை பல பரிகாரங்களைச் சொல்லி வைத்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    சிவன்‬ கோவிலில் இருக்கும் தல விருட்சங்களுக்கு சக்தி அதிகம். சிவாலயத்தில் இருக்கும் வன்னி மரம் அல்லது வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது பிரச்சினைகளைத் தெரிவித்தால் நல்ல பலன் கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக அமையும். ஆலய தல விருட்சங்களுக்கு நாம் கூறுவதைக் கேட்கும் சக்தி இருப்பதாக ஐதீகம் உண்டு.

    இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை ராகு கால வேளையில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, செவ்வரளிப்பூ சூட்டி, அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் நெய் தீபம் ஏற்றி தம்பதியரின் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட தம்பதியர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட்டால் அது சரியாகும். இது ரிஷிகள் கூறிய எளிய பரிகாரமாகும்.

    அதிக கடன் பிரச்சினையில் அவதிப்படுபவர்கள், யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லை, பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, திருமணத் தடை போன்றவை விலகும். இது தவிர திருஷ்டி, செய்வினை போன்றவை நீங்குவதற்கு, ஆலயத்தில் உள்ள திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சைப் பழத்தை குத்தி வைத்து வழிபடலாம்.

    வீட்டில் ஏதாவது துர்ஷ்ட சக்திகளின் சேட்டைகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால், வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து வழிபட்டால் அந்த துர்சக்திகள் அடங்கிவிடும்.

    சக்கரத்தாழ்வார் சன்னிதியில் தொடர்ச்சியாக 48 நாட்கள், நெய் தீபம் ஏற்றிவைத்து 12 முறை வலம் வந்து வழிபாடு செய்தால், தொழில் விருத்தி ஏற்படும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வராமல் இருக்கும் கடன் தொகை வசூலாகும். கொடுத்த கடன் வசூலாக, பைரவர் சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனையும் செய்யலாம்.

    ஒருவரது ஜாதகத்தில் சனி பகவானின் பாதிப்பு அதிகமாக இருந்தால், அந்த நபர் திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் சனி பகவானின் பாதிப்பு குறையலாம். மேலும் சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றுவதும் நல்ல பலன் தரும்.

    சிவன் கோவிலில் வீற்றிருக்கும் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வந்தால் செய்வினை தோஷம் நெருங்காது.

    வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் இருக்கும் சுக்ரனுக்கு, அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன்- மனைவி இடையிலான கருத்து வேறுபாடு நீங்கும்.

    பிரதோஷ காலத்தில், ரிஷப வாகனத்தில் அருளும் அம்பாளையும் ஈசனையும் வழிபாடு செய்தவர்கள், 1000 அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். அதிலும் ஈசான்ய மூலையில் சிவபெருமானுக்கு தீபாராதனைக் காட்டும் போது தரிசனம் செய்தால் நோய்களும், வறுமையும் நீங்கும்.

    மாதந்தோறும் வரும் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு, பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும். இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக 11 மாதங்கள் செய்ய வேண்டும்.

    நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் தடையின்றி நடைபெற துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வது சிறந்தது. அதுவும் ராகு காலத்தில் கடைசி அரைமணி நேரமான அமிர்த கடிகை நேரத்தில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

    அதே போல் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலான ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டில் திரி போட்டு, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் தெய்வ குற்றம் மற்றும் குடும்பத்திற்கு ஏற்பட்ட சாபங்கள் விலகிடும். ஹஸ்தம் நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிவப்பு பட்டு துணி சாற்றி, சிவப்பு தாமரையை பாதத்தில் வைத்து, 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர, திருமண பாக்கியம் கைகூடும்.

    சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், சங்கடங்கள் தீரும். அதே போல் அந்த நாளில் எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிள்ளைகளின் கல்வியின் முன்னேற்றம் காணப்படும். இரட்டைப் பிள்ளையார் அருளும் ஆலயத்தில், ரோகிணி நட்சத்திரத்தில் சந்தனக் காப்பு செய்து வழிபட்டால் கடன் பிரச்சினை நீங்கும்.

    செவ்வாய்க்கு அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான். எனவே அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால், மூன்று மாதத்திற்குள் உத்தியோகம் கிடைக்கும். விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று, முருகனுக்கு வேலில் எலுமிச்சைப் பழம் சொருகி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    இறைவனின் அருள்கடாட்சம் உள்ள ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் ஆகியவை உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு செய்வினை அண்டாது என்று சொல்லப்படுகிறது.

    பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளித்து வந்தால், தோஷம், தீட்டு நீங்கி, வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் கலந்த கலவையே ‘பஞ்ச கவ்யம்’ ஆகும்.

    புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி நாளில், கால பைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் மகப்பேறு பாக்கியம் உண்டாகும். இது தவிர வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் உணவருந்தாமல் விரதம் இருந்து, மாலையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வந்தால் விரைவில் கருத்தரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

    பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னிதியை சுற்றி வந்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

    வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமல் இருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், ஆதரவற்று இறந்து போனவர்களின் உடல் தகனத்திற்கு உதவுதல் ஆகிய மூன்றும் செய்தால், அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும்.

    பவுர்ணமி நாட்களில் நடைபெறும் சத்திய நாராயண பூஜையில் கலந்து கொண்டால், தொழிலில் இருந்து வந்த தடை அகலும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சி கைகூடும்.

    எத்தைகய கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, அந்த நபர் சுந்தர காண்டத்தில் வரும் ஒரு அத்தியாயத்தை பாராயணம் செய்து வந்தால் நன்மை ஏற்படும். வாழைத் தண்டு திரியால் வீட்டில் தீபம் ஏற்றினால், குலதெய்வ சாபம் நீங்கும்.
    Next Story
    ×