search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
    X

    நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி

    நந்தி விருதுகளுக்கு நடிகர்-நடிகைகளை தேர்வு செய்ததில் ஆந்திர அரசு பாரபட்சமாக நடந்துள்ளதாகவும் பிரபாஸ், சிரஞ்சீவி குடும்பத்து நடிகர்களை ஒதுக்கி விட்டதாகவும் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
    சிறந்த படம், சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் வழங்கும் நந்தி விருதுகள் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. 2014 முதல் 2016 வரை மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து இந்த விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் உயரிய விருதான என்.டி.ஆர் தேசிய விருதுக்கு தேர்வானார்கள். நடிகர்கள் பாலகிருஷ்ணா, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் கிடைத்துள்ளன.

    சந்திரபாபு நாயுடுவின் உறவினரான பாலகிருஷ்ணா நடித்த ‘லெஜண்ட்’ படத்துக்கு 9 விருதுகள் வழங்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விருதுக்கான தேர்வு குழுவில் பாலகிருஷ்ணா, நடிகை ஜீவிதா ஆகியோரும் நடுவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    விருது வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளதாக தெலுங்கு இயக்குனர்கள் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    டைரக்டர் பன்னிவாசு கூறும்போது, “நந்தி விருதுக்கு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்படவில்லை. சிரஞ்சீவியின் சகோதரன் மகன் வருண்தேஜா நடித்த முகுந்தா சிறந்த படமாக பாராட்டப்பட்டது. அந்த படத்துக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை. சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் விருது கொடுக்காமல் ஒதுக்கி விட்டனர்” என்றார்.

    அனுஷ்காவை வைத்து ருத்ரமாதேவி என்ற சரித்திர படத்தை எடுத்த டைரக்டர் குணசேகர் கூறும்போது, “பல வருடங்கள் கஷ்டப்பட்டு அதிக பொருட் செலவில் ருத்ரமாதேவி படத்தை எடுத்தேன். இந்த படத்துக்கு வரி விலக்கு கேட்டபோது அரசு தரவில்லை. ஆனால் பால கிருஷ்ணா நடித்த கவுதமி புத்ர சாதகர்னி படத்துக்கு ஆந்திர அரசும் தெலுங்கானா அரசும் வரி விலக்கு அளித்தன.



    இதை நான் கண்டித்ததால் ருத்ரமாதேவி படத்துக்கு நந்தி விருதுகள் அளிக்காமல் ஒதுக்கி விட்டனர். இதில் கஷ்டப்பட்டு நடித்து இருந்த அனுஷ்காவுக்கும் விருது வழங்கவில்லை. பாலகிருஷ்ணாவின் லெஜன்ட் படத்துக்கு 9 விருதுகள் கொடுத்தது ஓரவஞ்னை” என்றார்.

    டைரக்டர் நாகேந்திரா கூறும்போது, “நந்தி விருதுகள் தேர்வு நியாயமாக நடக்கவில்லை. பாகுபலி படத்தில் கதாநாயகனாக கஷ்டப்பட்டு நடித்த பிரபாசுக்கு விருது கொடுக்காதது கண்டிக்கத்தக்கது” என்றார்

    டைரக்டர் கத்தி மகேஷ் கூறும்போது, “நந்தி விருது தேர்வில் அரசு பாரபட்சமாக நடந்துள்ளது. சிறந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு என்ற அவருக்கும் அவரது மகன், பேரன்களுக்கும் நந்தி விருதுகளை கொடுத்து விடலாம்” என்றார்.
    Next Story
    ×