search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி அலுவலர்கள்"

    • ஆண்டிமடம் ஒன்றிய குழு கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரவில்லை
    • நீண்டநேரம் காத்திருந்த தலைவர், உறுப்பினர்கள் வெளிநடப்பு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றிய குழு கூட்ட அரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா மற்றும் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து ஆகியோர் கையொப்பமிட்ட அறிவிப்பு கடந்த 15 நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு ஒன்றிய குழு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஒன்றியக்குழு தலைவர் மருதமுத்து, துணைத் தலைவர் தேன்மொழி வைத்தி உள்ளிட்ட தி.மு.க., அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, நாராயணன் உள்ளிட்ட எந்த துறையில் இருந்தும் அதிகாரியும் வரவில்லை.

    சுமார் இரண்டு மணி நேரம் கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் வராததால் அனைத்து ஒன்றியக் குழு உறுப்பினர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்து பேசினர். அப்போது தி.மு.க. உறுப்பினர் பேசுகையில், தமிழக அரசு நிதியிலிருந்து வரப்பட்டுள்ள எந்த நிதியையும் பொதுமக்களுக்கு கொண்டு போய் சேர்க்காமல் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா பல்வேறு காரணங்களை சொல்லி பதில் அளித்து வருவதாக தெரிவித்தார்.

    இதனால் பொதுமக்களுக்கு இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது என்றார். பின்னர் வருகை பதிவேடு கொண்டுவரப்பட்டு அதில் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் தங்களது வருகையை பதிவு செய்தனர். அதிகாரிகள் கூட்டத்திற்கு வராததால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் அதிகாரிகள் மீது சரமாரியாக புகார்களை தெரிவித்து பேசினர்.

    இறுதியாக பேசிய ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து ஒன்றிய குழு கூட்டத்தை அதிகாரிகள் புறக்கணித்து அவைக்கு வர மறுத்து விட்டதால் கூட்டத்தை மறு தேதிக்கு மாற்றி, அனைத்து துறை அலுவலர்களும் மறு கூட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின்பு தான் கூட்டத்தை நடத்த முடியும் என தெரிவித்தார். மேலும் ஒன்றிய குழு கூட்டத்தை ஒத்திவைத்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து கூட்ட அரங்கில் இருந்த அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு கூட்ட அரங்கத்தை விட்டு வெளியேறினர். இதனால் ஆண்டிமடம் ஒன்றிய குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து நிருபர்களிடம் கூறுகையில், கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, நாராயணன் ஆகியோர் கலந்து கொள்ளாததை கண்டித்ததோடு நிர்வாக ரீதியாக ஆண்டிமடம் ஒன்றியத்தின் வளர்ச்சி பணிகளுக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் மாவட்ட கலெக்டரும், தமிழக அரசும் ஆண்டிமடம் ஒன்றியத்தில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை செய்து வரும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் இதுபற்றி கவுன்சிலர் சண்முகம் கூறுகையில், நமக்கு நாமே திட்டத்தில் எந்த ஒரு பணியும் இல்லை என்று அதிகாரிகள் கூறி வந்த நிலையில் ரூ.32 லட்சத்து 49 ஆயிரத்துக்கு தேவனூர், சூரக்குழி, பெரியகிருஷ்ணாபுரம், பூவாணிபட்டு, அய்யூர், கொடுக்கூர், குவாகம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதமே வேலை ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதைப்பற்றிய எந்த முழு விவரமும் கவுன்சிலரிடம் தெரிவிக்கவில்லை என்றார்.

    அலுவலக கழிவறையில் பராமரிப்பு செலவு என ரூ.11 ஆயிரம் மன்ற பொருள் வைத்துள்ள நிலையில் கழிப்பறை மிகவும் மோசமாக இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டினர். ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் டெண்டரை ஒத்தி வைத்ததாகவும், கவுன்சிலர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமலும் தன்னிச்சையாக வட்டார வளர்ச்சி அலுவலர் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    கூட்டத்திற்கு அதிகாரிகள் வராதது குறித்து அலுவலகத்தில் கேட்டபோது திங்கள் தோறும் நடைபெறும் மாவட்ட கலெக்டர் கூட்டத்திற்கு சென்றதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் மேலாளர் உட்பட சென்னை சென்றுள்ளதாகவும் அதனால் கூட்டத்திற்கு கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். கூட்டத்திற்கு தேதி அறிவித்து கையப்பமிட்டு கூட்டம் நடத்த தபால் கொடுத்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளால், கவுன்சிலர்கள் மிகுந்த வேதனையும் ஆவேசமும் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×