search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்"

    • தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை பஞ்சாப் மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது.
    • தமிழ்நாடு முதலமைச்சரும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    கருப்பூர்:

    தமிழகத்தில் 26-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் சார்பிலும், லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் குமார், பொருளாளர் செந்தில், துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஓமலூர், மேட்டூர் தாலுகா அளவிலான லாரி உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பின்னர் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தொடர்ந்து சுங்க கட்டணம் வருடத்திற்கு இரண்டு முறை உயர்த்தி வருகின்றனர். தற்போது சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல ரூ.43 ஆயிரம் சுங்க கட்டணம் செலுத்தி வந்தோம். தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தால் ரூ.47 ஆயிரத்து 300 சுங்க கட்டணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து அசாம் செல்ல சுங்க கட்டணம் பழைய கட்டணம் ரூ.40 ஆயிரம் கட்டி வந்தோம். தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தால் மேலும் 4 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சேலத்தில் இருந்து குஜராத்திற்கு செல்லும்போது சுங்க கட்டணமாக ரூ.42 ஆயிரம் கட்டி வந்தோம். தற்போது மேலும் ரூ.4 ஆயிரம் கூடுதலாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை பஞ்சாப் மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதுபோல தமிழ்நாடு முதலமைச்சரும் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்கு இடையில் உள்ள 33 சுங்கச்சாவடிகள் அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து தமிழக அமைச்சர்கள் மத்திய மந்திரியை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை அந்த சுங்கச்சாவடிகளும் அகற்றப்படவில்லை.

    எனவே உடனே 33 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும். இது போல ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் சுங்க கட்டணம் வசூலிப்போம் என மத்திய மந்திரி தெரிவித்திருக்கிறார். தற்போது ஒரு வருடத்திற்கு சுங்க கட்டணம் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது என மத்திய மந்திரி தெரிவித்திருக்கிறார்.

    ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்திவிட்டால் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வருவாய் வரும். இதனால் லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்பு அடைவார்கள். இதனால் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×