search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் படுகொலை"

    ஐ.டி.ஐ.யில் சேர்ந்ததற்கு நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்த மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி கே.கே.நகரை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் சக்திவேல் (வயது 22). 10-ம் வகுப்பு வரை படித்திருந்த இவர் இந்த ஆண்டு ஐ.டி.ஐ.யில் சேர்ந்துள்ளார்.

    இவருடைய நண்பர்கள் ஜீவாநகரை சேர்ந்த வெற்றிவேல் (18), கே.கே.நகரை சேர்ந்த நவீன்குமார் (19). வெற்றிவேல் வேலூரில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டும், நவீன்குமார் 2-ம் ஆண்டும் படித்து வருகிறார்கள். ஐ.டி.ஐ.யில் சேர்ந்ததற்காக சக்திவேல் அவரது நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பதாக கூறியுள்ளார்.

    நேற்று இரவு 7 மணி அளவில் சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் மற்றும் 3 பேர் என மொத்தம் 6 பேர் வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றனர். அங்குள்ள பாரில் அவர்கள் மதுகுடித்தனர்.

    அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான அந்த பாரில் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (38) என்பவர் சிக்கன், முட்டை விற்பனை செய்து வந்தார்.

    நேற்று அவரது நண்பர் சதுப்பேரியை சேர்ந்த சதீஷ்குமார் (29) வந்து மது குடித்தார். அப்போது சக்திவேலின் நண்பர்களுக்கும் சதீஷ் குமாருக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர்.

    பின்னர் சக்திவேல் அவரது நண்பர்கள் 6 பேரும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். 3 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் முதலில் சென்றுவிட்டனர். சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    அப்போது மீண்டும் சதீஷ்குமாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், ஆறுமுகம் ஆகியோர் சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் ஆகிய 3 பேரையும் மதுபாட்டில் மற்றும் கத்தியால் சரமாரியாக குத்தினர்.

    இதில் 3 பேருக்கும் வயிற்றில் குத்து விழுந்து சக்திவேலுக்கு குடல் வெளியே வந்துவிட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    மற்ற 2 பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பார் தொழிலாளி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர் சதீஷ்குமாருக்கு மது பாட்டில்களை எடுத்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

    சதீஷ்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×