search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமபத வாசல் திறப்பு"

      ஸ்ரீவில்லிபுத்தூர்:

      வராக சேத்திரமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து சிறப்பு வாய்ந்த தலமாகும்.

      இக்கோவிலானது பெருமாளை நினைத்து திருமொழி பாடிய பெரியாழ்வாரும், திருப்பாவை பாடிய ஆண்டாளும் பிறந்து பெருமைக்குரிய தலமாகும். கண்ணனை கரம் பற்ற நினைத்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து திருப்பாவை பாடி கண்ணனை கரம் பிடித்தார் என்பது ஐதீகம்.

      அனைத்து பெருமாள் கோவில்களிலும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவை தான் பாடப்படுகிறது. அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் மார்கழி நீராட்ட உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்கழி நீராட்ட விழாவில் நடைபெறும் பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம், கூடாரை வெல்லும் சீர் வைபவம் ஆகிய உற்சவங்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

      அதன்படி இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் கடந்த 13-ந் தேதி பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தில் வடபத்ர சயனர் சன்னதியில் உள்ள கோபால விலாசம் எனும் பகல் பத்து மண்டபத்தில் தினசரி பலவிதமான அலங்காரங்களில் ஆண்டாள் ரெங்கமன்னார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளி ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

      இந்நிலையில் நேற்றுடன் பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்றது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. 'கோவிந்தா' 'கோபாலா' கோஷம் முழங்க பெரிய பெருமாளும், அதன்பின் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாரும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினர். அவர்களை பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் வரவேற்றனர். பின்னர் மாட வீதிகள் வழியாக வீதி உலா வந்து ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய பெருமாள் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

      வைகுண்ட ஏகாதசி விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

      கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். டி.எஸ்.பி. முகேஷ் ஜெயகுமார் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

      இதேபோல் திருவண்ணாமலை சீனிவாசபெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவேங்கடமுடையான் கோவில், ராஜபாளையம் அயன்கொல்லங்கொண்டன் இடர்தவிர்த்த பெருமாள், சேத்தூர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட பெரு மாள் கோவில்களில் காலை 5.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.

      ×