search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்சத்திர ஆமைகள் கடத்தல்"

    • காரில் வனத்துறையினர் சோதனை செய்தபோது, அதில் அழிந்து வரும் அரியவகை உயிரினமான 2 நட்சத்திர ஆமைகள் இருந்தன.
    • சஜித் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் இருந்து காரில் சிலர் நட்சத்திர ஆமைகளை கடத்தி வருவதாக கேரள மாநில வன புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் பாலோடு சந்தவிளை அம்பல்லூர் பகுதியில் வனத்துறை நுண்ணறிவு பிரிவினர் மற்றும் சுள்ளி மானூர் வனத்துறை பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரில் 3 பேர் பயணம் செய்து வந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூர் சாவக்காடு பகுதியை சேர்ந்த சஜித்(வயது38), அவரது நண்பர் அருண்குமார்(33), சந்தோஷ்(40) என்பது தெரியவந்தது.

    அவர்களது காரில் வனத்துறையினர் சோதனை செய்தபோது, அதில் அழிந்து வரும் அரியவகை உயிரினமான 2 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அவற்றை அவர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பாலோடு வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    பாதுகாக்கப்படும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அரியவகை உயிரினமான நட்சத்திர ஆமையை வீட்டில் வளர்த்தால் அதிக செல்வம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், அதனை ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.

    இதனால் அவற்றை அதிக விலைக்கு விற்பதற்காக கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. அந்த ஆமைகளை நெல்லையில் இருந்து கேரள மாநில அரசு பஸ்சில் கேரளாவுக்கு எடுத்து வந்து, பின்பு அங்கு காரில் கடத்திச்சென்றபோது வனத்துறையினரின் சோதனையில் சிக்கினர்.

    சஜித் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சஜித் என்பவர் தைக்காடு மின்வாரிய அலுவலகத்தில் டிரைவராகவும், சந்தோஷ் அதே அலவலகத்தில் லைன்மேனாகவும் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நட்சத்திர ஆமைகள் கடத்தலில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×