search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணி விலை வீழ்ச்சி"

    • ரயான் மற்றும் காட்டன் துணிகளின் விலையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
    • கடந்த 6 மாதங்களாக தமிழக அரசு இலவச வேட்டி சேலை உற்பத்தி மூலம் பெரும்பாலான விசைத்தறிவுகள் காக்கப்பட்டு வந்தன.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறி மற்றும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தானியங்கி தறிகளில் ரயான் மற்றும் காட்டன் துணி ஒரு நாளைக்கு 1.5 கோடி மீட்டருக்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 6 மாதங்களாக இலவச வேட்டி சேலை உற்பத்தி காரணமாக ரயான் துணி உற்பத்தி குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் ரயான் துணிக்கு பதிலாக பாலிஸ்டர், நைலான் போன்ற துணிகள் உற்பத்தி செய்து பெருநகர சந்தைகளில் விற்பனை செய்து வருவதால் ரயான் தேவை குறைந்து விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த மாதத்தில் 120 கிராம் எடை கொண்ட ரயான் துணியின் ஒரு மீட்டர் விலை ரூ.25.50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 23.25 -க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    அதேபோல் 140 கிராம் துணியின் விலை கடந்த மாதத்தில் ரூ.30.50 பைசா இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து ரூ.28.25 -க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் ரயான் உற்பத்தி செய்த விசைத்தறியாளர்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. ஆனால் அதே வேளையில் ரயான் நூல் விலையானது கிலோவுக்கு ரூ.4 முதல் 6 வரை உயர்ந்துள்ளது.

    ரயான் மற்றும் காட்டன் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளதால் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உற்பத்தியை படிப்படியாக குறைத்து வருகின்றனர். எனவே ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-

    ரயான் மற்றும் காட்டன் துணிகளின் விலையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது . ஆனால் அதே வேளையில் நூல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வேறு வழி இன்றி உற்பத்தியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாரத்திற்கு 13 ஷிப்ட் நடத்தப்படும் விசைத்தறிக்கூடங்கள் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை உற்பத்தியை குறைத்துள்ளனர். இதன் மூலம் ஒரு வாரத்திற்கு ரூ. 3 ஆயிரம் சம்பளம் வாங்கும் விசைத்தறி தொழிலாளிகள் உற்பத்தி குறைப்பு மூலம் குறைந்தபட்சம் ரூ.500 முதல் 1000 வரை சம்பளத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதங்களாக தமிழக அரசு இலவச வேட்டி சேலை உற்பத்தி மூலம் பெரும்பாலான விசைத்தறிவுகள் காக்கப்பட்டு வந்தன. தற்போது வேட்டி- சேலை உற்பத்தி முடிவு அடைந்த நிலையில் காட்டன் மற்றும் ரயான் துணி உற்பத்தி நோக்கி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

    ஆனால் தற்போது ரயான் துணியின் விலை குறைந்த காரணத்தால் நஷ்டத்திற்கு உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே விசைத்தறியாளர்களை காப்பாற்றும் வகையில் அனைத்து துறையின் சீருடைகளும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் விசைத்தறியில் உற்பத்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல மத்திய அரசு ஜவுளி ஏற்றுமதிக்கு வழிவகை செய்தால் மட்டுமே விசைத்தறி தொழிலை காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×