search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோங்கா"

    • டோங்காவின் நிலங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்கி, வெள்ளையருக்கு துளிநிலத்தை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றினார்.
    • பூடானுக்கு அடுத்து உலகின் மிக எளிமையான அரசவம்சம் என டோங்கா அரசவம்சத்தை சொல்லலாம்.

    எந்த நாட்டின் காலனி ஆதிக்கத்துக்கும் உள்ளாகாமல் 3000 ஆண்டுகளாக சுதந்திரமாக இருக்கும் நாடு எது? டோங்கா.

    பெங்களூர் அளவு நிலப்பரப்பு உள்ள தீவுக்கூட்டம். 1 லட்சம் மக்கள் தொகை. ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே ஐயாயிரம் கிமீ தொலைவில் தென்பசிபிக் கடலில் உள்ள நாடு டோங்கா. பக்கத்து நாடு எதற்காவது போகவேண்டுமெனில் ஆயிரம் கிமீ படகில் போகவேண்டும். அதனால் தான் யாரும் ஐரோப்பியர் வரும்வரை டோங்காவை ஆக்கிரமிக்க முயலவில்லை.

    ஆய்வுகள் அங்கே கிமு 800 வாக்கில் பாலினேசிய மக்கள் குடியேறியதாக காட்டுகின்றன. அதன்பின் மெதுவாக அதன் தீவுகூட்டங்களில் குடியேற்றங்கள் உருவாகி, பல குடிகளாக பிரிந்து, டோங்கா எனும் நாடாக அவர்கள் உருவானார்கள். கிபி 1200ம் ஆண்டுவாக்கில் டோங்கா மன்னன் ஒருவன் ஆயிரம் கிமீ தள்ளி இருக்கும் சமோவ நாடு மேல் படை எடுத்தான். அப்போதுதான் டோங்கா எனும் நாடு இருப்பதே வரலாற்றில் பதிவாகிறது.

    அதன்பின் 1616ம் ஆண்டு போர்ச்சுகீசியர்கள் டோங்காவை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அதை பிடித்து என்ன செய்ய என விட்டுவிட்டார்கள். கிபி 1770ம் ஆண்டு ப்ரிட்டிஷார் அங்கே வந்து இறங்குகிறார்கள். அவர்கள் அருகே இருந்த சமோவா, பிஜியை எல்லாம் பிடிக்க, டோங்காவையும் பிடித்து தேயிலை, கரும்பு தோட்டங்கள் அமைப்பார்கள் என்ற அச்சம் எழுந்தது.

    டோங்காவின் மன்னர் ஜார்ஜ் டுபாவு அப்போது தந்திரமாக காய் நகர்த்தினார். அவருக்கு ப்ரிட்டிஷ் மன்னர் ஜார்ஜின் பெயர்தான். அத்துடன் ப்ரிட்டிஷார் பாணியில் டோங்காவுக்கு அரசியல் சாசனம், மனித உரிமைகளை எல்லாம் இயற்றினார். கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தை கொன்டுவந்தார். ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை என்பது மக்களின் உரிமை என அரசியல் சட்டத்தில் பொறித்தார். இன்றும் டோங்காவுக்கு போனால் ஞாயிற்றுக்கிழமை எந்த கடைகளும் திறந்திருக்காது.

    அத்துடன் டோங்காவின் நிலங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்கி, வெள்ளையருக்கு துளிநிலத்தை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றினார். இதனால் இந்தியா, பிஜி, மேற்கிந்திய தீவுகளில் செய்தது போல காலனிகள் அமைக்கவும், தோட்டங்கள் அமைக்கவும் இயலாமல் போனது. மன்னரின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பல ப்ரிட்டிஷார் பரமரசிகர்களாக இருந்தார்கள். அதனால் டோங்காவை காலனிமயம் ஆக்காமல் விட்டுவிட்டார்கள்.

    இன்றும் அதே அரசவம்சம் தான் டோங்காவை ஆண்டுவருகிறது. பூடானுக்கு அடுத்து உலகின் மிக எளிமையான அரசவம்சம் என டோங்கா அரசவம்சத்தை சொல்லலாம்.

    - நியாண்டர் செல்வன்

    ×