search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்கள் சிகிச்சை"

    எழும்பூர் ஆஸ்பத்திரியில் 625 கிராம் எடையில் பிறந்த சிறிய குழந்தைக்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சையால் 2 கிலோ எடை அதிகரித்துள்ளது.
    சென்னை:

    காரைக்குடியை சேர்ந்த சந்தானலட்சுமி-சிவக்குமார் தம்பதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

    பேறு காலத்தில் சந்தான லட்சுமிக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 7 மாதத்தில் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால் 625 கிராம் எடை மட்டுமே இருந்தது.

    மேலும் குழந்தையின் உள் உறுப்புகளும் சரிவர வளர்ச்சி அடையவில்லை. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்த குழந்தையை பெற்றோர் சேர்த்தனர். குழந்தைக்கு சுவாசக்கோளாறு பிரச்சினை இருந்ததால் செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் உயர் சிகிச்சை காரணமாக தற்போது அந்த குழந்தையின் எடை 2 கிலோவாக உயர்ந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக இருந்து வருவதாக பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைவர் டாக்டர் கமலரத்தினம் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    பொதுவாக பிறந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எடை குறைந்த இந்த குழந்தைக்கும் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பக்க விளைவுகள், நோய் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் நுரையீரல், கருவிழி உள்பட பல்வேறு உறுப்புகள் பாதிக்கக்கூடும்.

    மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தையை பல்வேறு சிக்கல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் போராடி மருத்துவர் குழு காப்பாற்றியுள்ளது. இதனால் குழந்தையின் எடை 2 கிலோ எடை அதிகரித்துள்ளது.

    எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வரலாற்றிலேயே இவ்வளவு குறைவான எடை கொண்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்தது இதுவே முதன்முறையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது குழந்தையை தாய் சந்தானலட்சுமி கவனமாக பார்த்து கொள்கிறார். குழந்தையின் எடை படிப்படியாக உயரும் வரை குழந்தையின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

    ×