search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீருடைகள் எரித்து சேதம்"

    • முதற்கட்ட விசாரணையில் எரிந்த பள்ளி சீருடைகள், நடுநிலை பள்ளி மாணவிகள் அணியும் அளவிற்கு தைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
    • பள்ளி மாணவிகளின் சீருடைகள் விநியோகிக்கப்படாமல் எரித்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கல்வித்துறை அலுவலர்களிடம் வற்புறுத்தி உள்ளனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் உள்ள தஞ்சை சாலையில், பொது மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு பின்புறம் அங்கமுத்து என்கிறவரின் விவசாய நிலம் உள்ளது.

    இதற்கு அருகில் பாசனத்திற்கான கிணறு ஒன்று உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததன் காரணமாக இந்த கிணறு வறண்டு உள்ளது.

    இந்த கிணற்றில் இருந்து திடீரென புகை எழுந்து உள்ளது. புகை மண்டலம் குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் வந்து கிணற்றுக்குள் என்ன எரிகிறது என்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் உள்ளே ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகளுக்கான, பள்ளி சீருடைகள் எரிந்து கொண்டிருந்தன.

    உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் தீயை போராடி அணைத்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் இலவச சீருடைகள் எரிந்தது குறித்து காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தகவல் அளித்தனர்.

    அங்கு வந்த காவல்துறையினரும், பள்ளி மற்றும் அரசு அலுவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் எரிந்த பள்ளி சீருடைகள், நடுநிலை பள்ளி மாணவிகள் அணியும் அளவிற்கு தைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான சீருடைகளை இங்கு வந்து கொட்டி எரித்தது யார்? இந்த சீருடைகள் திருடப்பட்டதா? அல்லது மாணவிகளுக்கு வழங்காமல் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் இங்கு கொண்டு வந்து எரித்தனரா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    பள்ளி இடை நில்லாமல் இருக்க வேண்டும், கல்வி கற்றோரின் சதவீதத்தை ஆண்டுக்கு ஆண்டு உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழக அரசு இலவச சீருடை, புத்தகம், மதிய உணவு, காலை உணவு திட்டம் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கல்வியை வளர்த்து வரும் நிலையில், இவ்வாறு பள்ளி மாணவிகளின் சீருடைகள் விநியோகிக்கப்படாமல் எரித்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கல்வித்துறை அலுவலர்களிடம் வற்புறுத்தி உள்ளனர்.

    ×