search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன ராணுவ மந்திரி"

    • வரும் 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை டெல்லியில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம் நடக்கிறது.
    • ஜெனரல் லியின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீனாவின் ராணுவ மந்திரி ஜெனரல் லி ஷாங்ஃபு  இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சீனா இன்று வெளியிட்டுள்ளது.

    சீன ராணுவ மந்திரியின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது, இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நெருங்கிய தலைவராக கருதப்படும் ஜெனரல் லியின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதுதொடர்பாக சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏப்ரல் 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை இந்தியாவின் புதுடெல்லியில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் ராணுவ மந்திரிகள் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பின்பேரில், சீன ராணுவ மந்திரி ஜெனரல் லி ஷாங்ஃபு கலந்து கொள்கிறார்.

    இந்த கூட்டத்தின்போது, ஜெனரல் லி, மாநாட்டில் உரையாற்ற உள்ளார். மேலும், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார். சர்வதேச மற்றும் பிராந்திய நிலவரம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உள்ளார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெனரல் லீயின் வருகைக்கு முன்னதாக, கடந்த 23ம் தேதி சீன பகுதியில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லையில் சீன-இந்திய படைப்பிரிவு கமாண்டர் அளவிலான 18வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் சாதகமாக கருத்து தெரிவித்தது. எல்லைப் பகுதிகளில் அமைதியை பாதுகாப்பது மட்டுமின்றி, கிழக்கு லடாக் பகுதியில் மீதமுள்ள இடங்களில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்ப பெறும் பணிகளை விரைவுபடுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்றும் சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    ×