search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிற்றுண்டி வழங்கும் திட்டம்"

    • உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்ய வேண்டும்
    • கதிர் ஆனந்த் எம்.பி. பேச்சு

    வேலூர்:

    வேலூர் காட்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்க விழா இன்று காலை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் கதிர் ஆனந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    வேலூர் மாநகராட்சியில் உள்ள 48 பள்ளிகளில் சிறுவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் உன்னதமான திட்டம் ஆகும். காலையில் பள்ளிக்கு வரும் சிறுவர்கள் உணவு அருந்தாமல் வருகின்றனர். இதனால் 11 மணிக்கெல்லாம் அவர்கள் மயக்கம் அடைந்து விடுகின்றனர். இதனால் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தில் கற்றல் திறன் இருக்காது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தால் மாணவர்களின் கல்வி இடை நிற்றல் தவிர்க்கப்படும்.

    தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தால் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் ரூ 1000 வழங்கும் திட்டம் சமூக சிக்கலுக்கு தீர்வு காணும் புதுமையான திட்டம்.புதுமைப்பெண் திட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல்.

    வேலூர் மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. அதனை மாற்றி தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக கொண்டு வரப்படும் இவ்வாறு பேசினார்.

    இதையடுத்து கதிர் ஆனந்த் எம்.பி பேசுகையில், ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடும் போது பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். சில கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இல்லை.

    ஆனால் தி.மு.க தேர்தல் அறிக்கையில் இல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் சிறுவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் தேர்தல் வாக்குறுதியில் கூறப்படாத ஒரு திட்டமாகும். இந்தியாவிலேயே பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் மாநிலம் தமிழகம் மட்டும்தான்.

    இந்த திட்டம் சிறப்பாக செயல்பட அந்தந்த பகுதி பிரதிநிதிகள் பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அணைக்கட்டு பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×