search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்தி வாய்ந்த ராக்கெட்"

    • ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் மாடு கட்ட குச்சி நட்டபோது ராக்கெட் வெடிகுண்டு கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • குண்டை பரிசோதித்தால் தான் அது எந்த வகையைச் சேர்ந்த குண்டு, எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது தெரியவரும்.

    பெரியபாளையம்:-

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆவாஜிப்பேட்டை கிராமம், மேட்டு தெருவில் வசித்து வருபவர் குப்பன்(50). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வரும் கூலித் தொழிலாளி ஆவார்.

    இவர் நேற்று காலை தனது மாடுகளைகட்ட வீட்டின் அருகே கடப்பாரையால் குச்சி நட்டார். அப்பொழுதே வித்தியாசமான சத்தம் கேட்டதால் அந்த இடத்தை நோண்டிப் பார்த்தார்.

    அப்போது அந்த இடத்தில் சக்தி வாய்ந்த ராக்கெட் வெடிகுண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    எனவே, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த ராக்கெட் வெடிகுண்டை மீட்டு பத்திரமாக கொண்டு சென்று ஊரில் உள்ள மைதானத்தில் மணல் மூட்டைகளை அடிக்கி அதன் நடுவில் பத்திரமாக வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து அந்த குண்டை பரிசோதித்தால் தான் அது எந்த வகையைச் சேர்ந்த குண்டு, எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது தெரியவரும்.

    கடந்த வெள்ளிக்கிழமை ஆவாஜிப்பேட்டைக்கு அருகே உள்ள மாளந்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பள்ளம் தோண்டியபோது ராக்கெட் லாஞ்சர் கிடைத்தது.

    அதனை நேற்று முன்தினம் வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பாக திருவள்ளூருக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், நேற்று ராக்கெட் வெடிகுண்டு கிடைத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×