search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணா தண்ணீர் திறப்பு"

    • சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.
    • கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி. எம். சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது பூண்டி ஏரியில் நீர் இருப்பு வெகுவாக குறைந்தது. ஏரியில் மொத்தம் 1 டி.எம்.சி(மொத்த கொள்ளளவு3.2டி.எம்.சி) தண்ணீர் மட்டுமே உள்ளது. மேலும் கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும் படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். இதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நேற்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இந்தத் தண்ணீர் நாளை இரவு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 250 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது. இதனால் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 1068 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    ×