search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல் நிலையம்"

    • பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
    • கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

    கோபி:

    தேர்தல் நடைபெறும் போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கு உத்தரவிடப்படுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம், சிறுவலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இதுவரை 111 பேர் தங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

    • புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம்.
    • சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு.

    சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில், ஆய்வு செய்வதற்காக சுத்தம் செய்தபோது பட்டாசு வெடித்து சிதறியது.

    திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்துள்ளார். புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    பட்டாசு வெடித்ததில் காவல் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து மியாமத்துல்லா உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரத்தை தொடர்ந்து, சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 ஊராட்சிகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • பல்லடம் காவல் நிலையத்திற்கு 97 கிராமங்கள் மற்றும், பல்லடம் நகரம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.

    பல்லடம்:

    பல்லடத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் உட்கோட்ட காவல்துறையில் பல்லடம், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் என 5 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் பல்லடம் காவல் நிலையத்திற்கு 97 கிராமங்கள் மற்றும், பல்லடம் நகரம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது. இந்த நிலையில் பல்லடம் நகரம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் வேகமான வளர்ச்சி அடைந்து மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதில் ஆறுமுத்தாம் பாளையம், கரைப்புதூர், கணபதிபாளையம், ஆகிய 3 ஊராட்சிகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    மேலும் இங்கு பனியன் நிறுவனங்கள், சாய ஆலைகள் அமைந்துள்ளதால் வட மாநிலத் தொழிலாளர்கள், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றால் பல்லடம் காவல் நிலையத்தில் இருந்து அங்கு செல்வதற்கு தாமதமாகிறது.

    இதனால் குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுகின்றனர். மேலும் பல்லடம் காவல் நிலையத்தில் தினமும் சுமார் 10க்கும் குறையாமல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் போலீசாருக்கு வேலை பளு அதிகரித்துள்ளது. பணிச்சுமையால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. இதனால் பல்லடம் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து அருள்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது.
    • கடந்த 5 மாதமாக இந்த உணவுப்படி போலீசாருக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    திருநின்றவூர்:

    ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது. சட்ட ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை என பல்வேறு பிரிவுகளில் 4623 போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    போலீசார் அனைவருக்கும் தினமும் ரூ.300 வீதம் 26 நாட்களுக்கு ரூ.7,800 உணவுப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கடந்த 5 மாதமாக இந்த உணவுப்படி போலீசாருக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    சென்னை காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் போலீசாருக்கு உணவுபடி தொடர்ந்து வழங்கப்படும் நிலையில் அருகில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு நிறுத்தப்பட்டு இருப்பது போலீசார் மத்தியில் வேதனை அடைய செய்து உள்ளது.

    எனவே கடந்த 5 மாதமாக நிறுத்தப்பட்ட உள்ள உணவுப்படி நிலுவைத்ததொகைய முழுவதுமாக உடனடியாக வழங்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
    • இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமேதி:

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பாஜக தலைவரின் கணவரை, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அமேதி மாவட்டம் கவுரிகஞ்ச் கோத்வாலி காவல் நிலையத்தில் போலீசாரின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் மற்றும் அவரது ஆதவாளர்கள், பாஜகவைச் சேர்ந்த நகராட்சி தேர்தல் வேட்பாளர் ராஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போலீசார் திணறினர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் கூறுகையில், 'நானும் எனது ஆதரவாளர்களும் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, தீபக் சிங் வந்து தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது ஆதரவாளர்கள் சிலரை தாக்கினார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பிரச்சனை ஏற்பட்டது' என்றார்.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரிகார்டுகளை உடைத்து, காவல் நிலையத்தின் மீது கல்வீசி தாக்கினர்.
    • போராட்டக்காரர்கள் அத்துமீறி காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலையத்தை தீ வைத்து எரித்தனர்.

    மேற்கு வங்க மாநிலத்தின் தினஜ்பூர் மாவட்டத்தை அடுத்த கலிகஞ்ச் காவல் நிலையத்தை அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

    மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி மற்றும் ராஜ்பங்சி சமூகத்தினர் சார்பில் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரிகார்டுகளை உடைத்து, காவல் நிலையத்தின் மீது கல்வீசி தாக்கினர்.

    போராட்டக்குழுவினரை தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். எனினும், போராட்டக்காரர்கள் அத்துமீறி காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலையத்தை தீ வைத்து எரித்தனர். அந்த பகுதியில் நிலமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன், 10 ஆம் வகுப்பு மாணவியை கும்பல் ஒன்று கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது. பின் மாணவியின் உடல் குளக்கரையில் வீசப்பட்டு இருந்தது. மேலும் உயிரிழந்த மாணவியின் உடலை காவல்துறை அதிகாரிகள் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் மாணவியை ஜாவித் அக்தர் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும் தேசிய குழந்தைகள் நல ஆணையம் இந்த வழக்கில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

    • நங்கவரம் பகுதியில் ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் பெற்றுத்தந்த எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கபட்டது
    • குளித்தலை நங்கவரம் பகுதியில், ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

    குளித்தலை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி போட்டியிட்ட முதல் தொகுதியான குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை நங்கவரம் பகுதியில், ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

    கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி பரிந்துரைப்படி, குளித்தலை சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான நங்கவரம் பகுதிக்கு புதிய காவல் நிலையம் வேண்டி குளித்தலை நகர தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான குளித்தலை இரா.மாணிக்கம் சட்டமன்றத்தில் எடுத்துரைத்து நங்கவரம் பகுதியில் ஒன்றிய அளவிலான புதிய காவல் நிலையம் பெற்று தந்தமைக்கும், நங்கவரம் பேரூர் கழக செயலாளர் நங்கவரம் பேரூராட்சி மக்களின் சார்பாக முத்து (எ) சுப்பிரமணி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் எம்.எல்.ஏ. இரா.மாணிக்கத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி நச்சலூர் சங்கர், ஒன்றிய பிரதிநிதி செல்வம், விவசாய அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், தோகைமலை தி.மு.க. இளைஞரணி செயலாளர் சசிகுமார், நெய்தலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


    • புகார், மனுக்கள் மீது விரைந்து விசாரணையில் தமிழ்நாட்டில் முசிறி காவல் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது
    • டி.ஜி.பி. சைலேந்திர பாபு வாழ்த்து

    முசிறி

    திருச்சி மாவட்டம் முசிறியில் சீர்மிகு சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குழுவினர் நேரில் வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது காவல் நிலையத்தின் சுகாதாரம், பராமரிப்பு மற்றும் வரப்பெற்ற புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை, நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடித்தல் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் அணுகுமுறை, காவல் நிலையத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்குழு முசிறி காவல் நிலையத்திற்கு தகுதி சான்றிதழுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த முதல் காவல் நிலையமாக மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து சான்றிதழை சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பி வைத்திருந்தது. விருதுக்கான சான்றிதழை சென்னை சென்று நேரில் பெற்றுக் கொண்ட முசிறி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமை காவலர் மகாமணி, காவலர் ஆனந்தராஜ், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது காவல்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு சங்கர் உடனிருந்தார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், டி.ஐ.ஜி. சரவணசுந்தர், எஸ்.பி. சுர்ஜித்குமார், முசிறி போலீஸ் டி.எஸ்.பி. யாஸ்மின் ஆகியோர் முசிறி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் முசிறி காவல் நிலையம் முதலிடம் பெற்றுள்ள நிகழ்வு முசிறி நகர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • கஞ்சா மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினர்.
    • நகர் மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி தலைமையில் கஞ்சா ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்ட் பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கஞ்சா மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினர்.

    அப்போது காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் கூறியதாவது:- தமிழக அரசு கஞ்சா இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதனால் கஞ்சா மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய குட்கா புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனே எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.கஞ்சா புகையிலை போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவோர் பயமின்றி திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதனால் நாம் கஞ்சா, புகையிலை இல்லா மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது தமிழ்நாட்டில் கஞ்சா பயிர் செய்வதில்லை. ஆந்திரா மாநிலங்களில் மலைப்பிரதேசங்களில் தான் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆந்திராவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு ஆயுதம் வாங்க கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அதற்காக ஆந்திராவில் மலைப்பகுதியில் இதை பயிரிட்டு கஞ்சா விற்பனை செய்கின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆந்திரா சென்று வாங்கி வருகின்றனர். அப்படி வாங்கி வரும் கஞ்சாவை சிகரெட் மூலம் பயன்படுத்துகின்றனர். ஆகவே இதை முதலில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்காக வெள்ளகோவிலில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தனியாக ஒரு காவலர் நியமிக்கப்படும். அவரிடம் தங்களது பகுதியில் உள்ள குற்றச்சம்பவங்கள் பற்றி தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டார்.

    அது மட்டுமின்றி வீட்டை பூட்டிவிட்டு பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது விலை மதிப்பு மிக்க நகை மற்றும் பணத்தை பீரோவில் வைத்து விட்டு செல்ல வேண்டாம். வங்கியிலோ அல்லது பாதுகாப்பான மறைவான இடத்திலேயே வைத்துச் செல்ல வேண்டும். அப்படி வெளியில் செல்லும்போது வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லிவிட்டு சென்றால் நாங்கள் கண்காணிக்க ஏதுவாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.

    நகர் மன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் தங்களது வார்டுகளில் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை செய்தாலோ யாரேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டாலோ புகார் தெரிவிக்கலாம். வீடு மற்றும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கே. ஆர். முத்துக்குமார், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • க.பரமத்தியில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட்டது.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

    கரூர்:

    பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டி தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற திட்டத்தின் கீழ் கரூர் ஊரக உட்கோட்டத்தில் க.பரமத்தியில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

    இதையொட்டி க.பரமத்தியில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. இ.சுந்தரவதனம் ரிப்பன் வெட்டி புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்து, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார். அரவக்கு றிச்சி டிஎஸ்பி முத்தமிழ்செல்வன், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரூபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரூபி பொறுப்பு இன்ஸ்பெக்டராக செயல்படுவார். கரூர் ஊரக உட்கோட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை, வேலாயுதம்பாளையம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணை இங்கு மேற்கொள்ளப்படும்.

    • மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திருநெல்வேலியில் நர்சிங் படித்து வருகிறார்.

    விடுமுறை நாட்களில் அந்த மாணவி மேடைகளில் நடனமாட செல்வது வழக்கம்.இந்த நிலையில் இரணியலை சேர்ந்த ஆபினேஷ் என்ற வாலிபர் மாணவியுடன் நடன கலை நிகழ்ச்சிகளில் செண்டை வாத்தியங்கள் அடிப்பது வழக்கம்.

    அவர் மாணவியிடம் தொடர்ந்து காதல் வசனங்களை பேசி காதலிப்பதாகவும், உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை மாணவியும் நம்பி உள்ளார்.

    இதனை சாதகமான பயன்படுத்திக் கொண்ட ஆபினேஷ் குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதன்பின்னர் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். மாணவி அந்த வாலிபரை தேடி சென்று தன்னிடம் ஏன் பேசவில்லை என காரணம் கேட்டுள்ளார். அதற்கு உன்னை எனக்கு பிடிக்கவில்லை என அந்த ஆபினேஷ் தெரிவித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்து போன மாணவி மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்
    • ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார் என தகவல்

    சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளார்.

    குற்ற வழக்குகளில் தொடர்புடையே ராஜசேகரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கைது ராஜசேகர் மரணம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே தலைமை செயலக காலனி காவல்நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    ராஜசேகர் மீது ஏற்கனவே 27 குற்ற வழக்குகள் உள்ளன. விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார்.

    ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவது காவல்துறையினரின் கடமை. ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×