search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்குடி தொழிலதிபர்"

    • தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்காக அழகப்பன் உள்ளிட்ட 3 பேரையும் பவர் ஏஜெண்டுகளாக கவுதமி நியமித்தார்.
    • வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் மூலம் நிலம் விற்ற பணம் ரூ.11 கோடி என்பது அவருக்கு தெரியவந்தது.

    சென்னை:

    பிரபல நடிகை கவுதமிக்கு சொந்தமான 8.63 ஏக்கர் நிலம், திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் இருந்தது. அந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்த அவருக்கு, காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் நிலத்தை விற்பதற்கு உதவுவதாக கூறினார்.

    பின்னர் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பலராமன், செங்கல்பட்டைச் சேர்ந்த ரகுநாதன் ஆகிய ரியல் எஸ்டேட் தரகர்களை நடிகை கவுதமிக்கு, அழகப்பன் அறிமுகம் செய்தார். பின்னர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்காக அழகப்பன் உள்ளிட்ட 3 பேரையும் பவர் ஏஜெண்டுகளாக கவுதமி நியமித்தார்.

    இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மும்பையில் உள்ள நிறுவனத்திற்கு நிலத்தை விற்று விட்டதாக கூறி, சுமார் ரூ.4 கோடியை கவுதமிக்கு அவர்கள் 3 பேரும் கொடுத்தனர். பின்னர் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் மூலம் நிலம் விற்ற பணம் ரூ.11 கோடி என்பது அவருக்கு தெரியவந்தது.

    ரூ.7 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதை அறிந்த நடிகை கவுதமி, இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான்விக்டர், இன்ஸ்பெக்டர்கள் மேனகா, பூமாரன், புஷ்பராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    வழக்கு தொடர்பாக காரைக்குடியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அழகப்பன் குடும்பத்தோடு தலைமறைவானார்.

    நடிகை கவுதமியின் புகாரின் பேரில் ரியல் எஸ்டேட் தரகர் பலராமன் (வயது 64) கைது செய்யப்பட்டார். அழகப்பன் மற்றும் ரகுநாதன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர்.

    இதனிடையே நடிகை கவுதமி இன்னொரு நில மோசடி புகாரை காஞ்சிபுரம் மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் கொடுத்துள்ளார்.

    தலைமறைவான அழகப்பனுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்தனர்.

    அழகப்பன் (63), அவருடைய மனைவி நாச்சியாள் (57), மகன் சிவ அழகப்பன் (32), மருமகள் ஆர்த்தி (28), டிரைவர் சதீஷ் (27) ஆகியோர் கேரள மாநிலம் திரிச்சூர் அருகே உள்ள கிராமத்தில் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார், அழகப்பன், அவருடைய மனைவி, மகன், மருமகள் மற்றும் டிரைவர் ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

    • சொத்துகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக 6 பேர் மீது நடிகை கவுதமி போலீசில் புகார் அளித்திருந்தார்.
    • வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அழகப்பன் உள்ளிட்ட 6 பேர், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நிலம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள சொத்து என நடிகை கவுதமிக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.

    இந்த சொத்துகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக காரைக்குடி சி.அழகப்பன், அவருடைய மனைவி நாச்சாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, உறவினர் பாஸ்கர் மற்றும் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது நடிகை கவுதமி போலீசில் புகார் அளித்திருந்தார்.

    அதன்பேரில் அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், திருவண்ணாமலை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அழகப்பன் உள்ளிட்ட 6 பேர், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களுக்கு எதிராக அடிப்படை ஆதாரமின்றி புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால் புகார்தாரரான கவுதமி தரப்பிலும், போலீசார் தரப்பிலும் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இதையடுத்து அழகப்பன் உள்ளிட்ட 6 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட அறைகளுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.
    • விரைவில் அழகப்பன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    காரைக்குடி:

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.

    இதனை விற்பனை செய்வதற்காக குடும்ப நண்பராக இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் என்பவருக்கு கவுதமி பவர் பத்திரம் மூலம் அதிகாரம் கொடுத்ததாக தெரிகிறது.

    ஆனால் அழகப்பன் கவுதமியின் சொத்துக்களை விற்று அதற்குரிய பணத்தை முழுமையாக தராமல் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கவுதமி சொத்துக்களின் ஆவணங்களை முறைகேடு செய்து வேறு பெயருக்கு மாற்றி விட்டதாகவும் புகார் எழுந்தது.

    இதன் மூலம் தன்னை ஏமாற்றி பல கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கவுதமி சென்னை மாநகர மத்திய குற்றப்புலனாய்வு போலீசில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் சொத்து மோசடி தொடர்பாக விசாரிக்க சென்னை குற்றப் புலனாய்வு பிரிவு உதவி கமிஷன் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் நேற்று காரைக்குடி வந்தனர். கோட்டையூருக்கு சென்ற அவர்கள் அழகப்பனுக்கு சொந்தமான வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த விசாரணை மற்றும் சோதனை நடந்தது. அப்போது அழகப்பனின் குடும்ப உறுப்பினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    வீட்டில் கவுதமியின் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என சல்லடை போட்டு போலீசார் சோதனை மேற்கொண்ட னர். இதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். மதியம் தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவையும் தாண்டி விடிய விடிய நடந்தது. இதில் மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    காரைக்குடியில் தொழிலதிபர் அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை காணலாம்

    காரைக்குடியில் தொழிலதிபர் அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை காணலாம்

     இன்று அதிகாலை வீட்டிலிருந்து கைப்பற்றிய சில ஆவணங்களுடன் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட அறைகளுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் பூட்டி சீல் வைத்தனர். விரைவில் அழகப்பன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பல வருடங்களாக பாரதிய ஜனதாவில் இருந்த நடிகை கவுதமி இந்த மோசடி புகார் விவகாரத்தில் அதிருப்தி அடைந்து அக்கட்சியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×