search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழிப்புத்துறை"

    • அங்கிட் திவாரி கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் உள்ளார்.
    • வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டாக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் வந்துவிட்டதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்பட்டது.

    இதனைதொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி ரூ.20 லட்சத்தை டாக்டர் சுரேஷ்பாபுவிடம் இருந்து அங்கிட் திவாரி வாங்கிக்கொண்டு தப்ப முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மதுரையில் உள்ள அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றினர்.

    இதனால் அவரை காவலில் எடுத்து விசாரித்துவிட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் கேட்டு திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட், மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அவருக்கு ஜாமீன் வழங்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே 2 முறை அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று 3-வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வருகிற 24-ந்தேதி வரை அவருக்கு காவல் நீட்டிக்கப்படுகிறது.

    அங்கிட் திவாரி கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். அவரிடம் துறைரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்றும், எனவே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறையினர் திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகனா அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ×