search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எம் அப்துல்லா"

    • குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார்.
    • எம்.எம்.அப்துல்லா பார்வையாளர் பகுதியில் அமருவதற்காக வந்தபோது எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது.

    புதுக்கோட்டை:

    இந்திய நாட்டில் 74-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில் பார்வையாளர்கள், அரசு நடைமுறை விதிகளின்படி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மட்டுமல்லாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது அரசின் விதியாக உள்ளது.

    ஆனால் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த அரசு நடைமுறை விதியும் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோருக்கு இருக்கைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அவர் பார்வையாளர் பகுதியில் அமருவதற்காக வந்தபோது எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது.

    இதனால் அதிருப்தி அடைந்த மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா குடியரசு தின விழாவை புறக்கணித்து விட்டு உடனடியாக தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் அங்கிருந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது ஒரு புறம் இருக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவி ஏற்ற மாநிலங்களவை உறுப்பினர் தனக்கு இருக்கை ஒதுக்கப்படாமல் இருந்தாலும், குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் விழாவை புறக்கணித்து சென்றது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

    இந்த நிலையில் இந்த பிரச்சினை எதனால் ஏற்பட்டது, இருக்கை ஒதுக்காமல் இருந்தது யார் தவறு? என்பது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி எம்.எம்.அப்துல்லா எம்.பி. கூறுகையில், இருக்கை ஒதுக்கப்படவில்லை என்பதற்காக விழாவை புறக்கணித்து செல்லவில்லை, எனக்கு வேறு வேலை இருந்ததால் உடனடியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.

    ×