search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆங்கிலேயர்"

    • ஆங்கிலேயர்கள் வைத்த மைல் கற்கள் இன்றும் காணக் கிடைக்கிறது.
    • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ் சொற்றொடரில், தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

    திருப்பூர்,

    நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட தங்கள் ஆட்சியின் போது தமிழுக்கும் இடம் கொடுத்து மைல் கற்கள் மற்றும் கைகாட்டி பலகைகளில் தமிழ் எண்களில் தொலைவை குறிக்க பயன்படுத்தி தமிழை காத்துள்ளனர். மேலும் தமிழில் பகுதிகளை குறிக்க கல்வெட்டுகளை தமிழில் வைத்துள்ளனர் என்பதை திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காண முடிகிறது.

    இதற்கான சான்றாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பிற‌ பகுதிகளில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில்,ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்லும் வழி குறித்தும்,அதற்கான தொலைவு பற்றியும் ஆங்கிலேயர்கள் வைத்த மைல் கற்கள் இன்றும் காணக் கிடைக்கிறது.சில இடங்களை தவிர மற்ற இடங்களில் உடைந்தும், சாலையோர குழிகளில் தூக்கி வீசப்பட்டும், கட்டுமானங்களுக்கு அடிக்கல்லாகவும் கிடப்பதை காண முடிகிறது.இவற்றில் ஊர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், தொலைவுகள் மைல் கணக்கில் எண்களால் குறிக்கப்பட்டும்,தமிழ் எண்களாலும் குறித்து அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த அமைப்புகள் வாயிலாக ஆங்கிலேயர்கள் தமிழ் எண்களை பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரமாக திருப்பூர் அருகே 200 ஆண்டு பழமையான தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழ் எழுத்துக்கள் மட்டுமன்றி ய,க,உ,கூ என தமிழ் எண்களும் நடைமுறையில் இருந்துள்ளன.தற்போது நடைமுறையில் உள்ள எண்களை பின்பற்ற துவங்கியதும்,தமிழ் எண்களை எழுதும் வழக்கம் குறைந்து அழிந்து,பலருக்கும் அது தெரியாத சூழலே ஏற்பட்டுள்ளது.

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ் சொற்றொடரில், தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தி வந்துள்ளனர். சாலைகளில் ஊரின் தொலைவை தமிழ் எண்களிலேயே குறிப்பிட்டு வந்துள்ளனர்.இது தொடர்பாக 200 ஆண்டு பழமையான மைல் கற்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம், அவிநாசி,பெருமாநல்லூர்,செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ளது .

    இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில்,மைல் கற்கள் வைக்கும் நடைமுறை தமிழகத்தில் கி.பி.10 ம் நூற்றாண்டில் துவங்கியது.இதில் ரோமன்,அராபிக் மற்றும் தமிழ் எண்களில் எழுதப்பட்ட மைல் கல் கிடைத்துள்ளது . இக்கல்லில்இன்றைய அரபி மற்றும் தமிழ் எண்கள் காணப்படுகின்றன.இதில் பல்லடம் 11 மைல் என்பது பல்லடம் "கக" என்றும்,பல்லடம் 4 மைல் என்பது பல்லடம் ' ச ' எனவும் எழுதப்பட்டுள்ளது.

    இதே போல் அவிநாசி காவல் நிலையம் அருகே உள்ள மைல் கல்லில் அவிநாசியில் இருந்து செங்கப்பள்ளி 11 மைல் என்பதை தமிழில் "கக" எனவும்,கருமத்தம்பட்டி 9 மைல் என்பதை "கூ" என தமிழ் எண்ணிலும் குறிப்பிட்டுள்ளனர்.இதே போல் அன்னூர் 12 மைல் என்பதை "கஉ" என பொறிக்கப் பட்டுள்ளது. மைல் கற்கள் பல்வேறு அளவுகளில் காணப்பட்டாலும்,அவை பெரும்பாலும் 70 செ.மீ உயரம்,50 செ.மீ. , அகலம் கொண்டுள்ளன.

    தற்போது கிலோ மீட்டரில் குறிக்கப்படும் அளவு,அன்று மைல் கணக்கில் நடைமுறையில் இருந்தது . ஆங்கிலேயர் கூட , தமிழ் எண்களை பயன்படுத்திய நிலையில்,தற்போது இந்நடைமுறை பின்பற்றப்படாதது வருத்தமளிக்கும் செயலாக இருந்தாலும், இது போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய ஆவணங்களை பாதுகாக்க வழியின்றி அழிந்து வருவது பெரும் துயரமானது என அவர்கள் தெரிவித்தனர்.

    ×