search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல்வகாப் எம்.எல்.ஏ."

    • மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்சினை களை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபை கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன
    • நெல்லை மாநகராட்சி முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்சினை களை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபை கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    பகுதிசபா கூட்டம்

    குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில் மார்ச் 22 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

    கிராம சபை கூட்டம் போல நகர உள்ளாட்சிகளிலும் மக்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் பகுதி சபாக்களை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒவ்வொரு உள்ளாட்சி மன்றமும் வார்டு கமிட்டி என்ற குழுவை ஒவ்வொரு வார்டுக்கும் அமைத்து கொள்ள முடியும்.

    அந்த வார்டின் கவுன்சிலரையே தலைவராக வார்டு கமிட்டிக்கு நியமிக்க வேண்டும். அது போலவே வார்டில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் பகுதி சபை என்ற 'ஏரியா சபா'வையும் உள்ளாட்சி மன்றம் நிறுவிக்கொள்ளலாம்.

    அந்த வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், அந்த ஏரியா சபையின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்கள்.

    கலெக்டர், எம்.எல்.ஏ.

    இந்நிலையில் உள்ளாட்சி தினத்தையொட்டி இன்று நகராட்சி மற்றும் மாநகராட்சி களில் முதல்முறையாக பகுதிசபா கூட்டம் நடைபெற்றது.நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டு பகுதியான பாளை அன்புநகரில் நடைபெற்ற பகுதிசபா கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    24 மணி நேரமும் தண்ணீர்

    நெல்லை மாநகராட்சி முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொலை நோக்கு பார்வையில் நெல்லை மாநகரத்தை தூய்மையான நகரமாக மாற்ற முதல் கட்டமாக 5 வார்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நிலத்தடி நீரை மேம்படுத்து வதற்காக மாநகராட்சி பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நீர் நிலைகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    கால்வாய் தூர்வாரும் பணி

    மாநகரப் பகுதிகளில் உள்ள பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவை தூர்வாரப்பட்டு குடியிருப்புகளில் இருந்து குப்பைகளை கால்வாயில் கொட்டாத வண்ணம் கம்பி வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநகர பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநகரப் பகுதியில் உள்ள வார்டு மக்களின் குறைகளை நேரடியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாளைக்கு குடிநீர்

    பின்னர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கூட்டத்தில் பொது மக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் .

    இதற்காக தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடித்தண்ணீர் கொண்டு வரும் திட்டம் மாவட்ட நிர்வாகம், மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த திட்டம் வந்தால் பாளையங்கோட்டை பகுதியில் பல வார்டுகள் பயன்பெறும்.

    ரூ. 512 கோடியில் பாதாளசாக்கடை திட்டம் பகுதி- 3 விரைவில் வருகிறது. மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

    மேயர், துணை மேயர்

    அதேபோல் பழைய பேட்டையில் நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து வார்டு பகுதியிலும் நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் அப்பகுதியின் குறைகள் எடுத்துரைக்கப்பட்டு அதனை தீர்க்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×