search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN Rights"

    மியான்மரில் ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்ட போர்க்குற்றத்தை இன அழிப்பாக குறிப்பிட்டுள்ள ஐ.நா. மனித உரிமை சபை அந்நாட்டின் ராணுவ தளபதி பதவி விலக வலியுறுத்தியுள்ளது. #UNrightspanel #Myanmarcommanderinchief
    ஜெனிவா:

    மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு எதிரான இன அழிப்பு முயற்சியில் ராணுவம் ஈடுபட்டது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.

    உயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மரில் இருந்தபோது ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் கற்பழித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை சேர்ந்த தூதர்கள்  ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்பாக வங்காளதேசம் நாட்டின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள மக்களை சமீபத்தில் சென்று நேர்காணல் செய்தனர்.

    மியான்மரில் உள்ள ரக்கினே மாநிலத்துக்கும் சென்று ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் நேரடியாக சந்தித்து குற்றச்சாட்டுகளையும், குறைகளையும் கேட்டறிந்தனர்.


    வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா, மியான்மர் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அந்நாட்டின் முப்படை தளபதி  மின் அவுங் ஹிலாய்ங்  ஆகியோரை அவர்கள் சந்தித்துப் பேசினர்.

    மனிதநேயம் மற்றும் மனித உரிமைகளை மீறிய வகையில் நடந்ததாக கூறப்படும் ராணுவத்தின் அத்துமீறல்கள் மற்றும் கற்பழிப்புகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை தூதர்கள் வலியுறுத்தினர்.



    இதைதொடர்ந்து, சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை துறை தலைமையகத்தின் சார்பில்  மார்ஸூக்கி டாருஸ்மான் தலைமையில் சர்வதேச நடுவர்களை கொண்ட சுதந்திரமான உண்மையறியும் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவினர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘ரோஹிங்கியா மக்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ தாக்குதல் ‘இன அழிப்பு’ நோக்கத்தில் நடைபெற்றுள்ளது.

    இதற்கு காரணமான மியான்மர் ராணுவ தளபதி மின் அவுங் ஹிலாய்ங் உடனடியாக ராஜினாமா செய்து, பதவியை விட்டு விலக வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் நகல் மியான்மர் நாட்டு அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பாக மியான்மர் அரசு சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. #UNrightspanel #Myanmarcommanderinchief #Myanmargenocide
    ×