search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Agriculture Student"

    திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரியில் படித்து வரும் சென்னை மாணவி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக கல்லூரி முதல்வர் உள்பட 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த கிரிஜா என்ற மாணவி பி.எஸ்.சி. 3-ம் ஆண்டுபடித்து வந்தார்.

    மாணவி கிரிஜாவுக்கு உதவி பேராசிரியர் தங்க பாண்டியன், 7 மாதங்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    மாவட்ட நீதிபதி மகிழேந்தியிடம் மாணவி கிரிஜா இது தொடர்பாக புகார் அளித்தார். இதனையடுத்து பேராசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மாணவி தங்கி இருந்த விடுதியில் வார்டனர்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்டது.



    இது தொடர்பாக, ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளுக்கு சாதகமாக செயல்பட்டது தெரிய வந்தது.

    மாணவிகள் விடுதிக்குள் பேராசிரியர்கள், ஆண்கள் செல்ல அனுமதி கிடையாது. வேளாண்மை பல்கலைக்கழக விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. பேராசிரியரின் அத்துமீறல்கள் குறித்து மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் தான் முதலில் புகார் கூறியுள்ளார்.

    அப்போது, மாணவியை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி முதல்வர் ஈடுபட்டார். கல்லூரி பெயர் கெட்டு போய்விடும் என்பதால், கல்லூரி நிர்வாகம் மாணவியின் புகாரை மூடிமறைக்க திட்டமிட்டது.

    கல்லூரி நிர்வாகத்தின் சமரசத்தை ஏற்று கொள்ளாத மாணவி, வெளிப்படையாக பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவிக்க போவதாக கூறினார். இதையடுத்து பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் மாணவியை சமரசப்படுத்த அனுப்பப்பட்டனர்.

    மாணவி அடிப்பணியாததால், ஆத்திரமடைந்த பேராசிரியைகள் 2 பேரும், மிரட்டியுள்ளனர். மாணவிக்கு எதிராக ஆதாரங்களை ஜோடித்தனர். இதற்காக, விடுதியில் உள்ள மாணவிகள் 2 பேர் மூலம் மாணவியிடம் ‘ராகிங்’ செய்து இடையூறுகளை ஏற்படுத்தினர்.

    இப்படி செய்வதால், உதவி பேராசிரியர் மீது புகார் அளிக்கவிடாமல் மாணவியை தடுக்க முடியும் என பேராசிரியைகள் நினைத்தனர். ஆனால், மாணவி ‘ராகிங்’ கொடுமைக்கு அஞ்சவில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

    அதன்பிறகு, மாணவி கிரிஜாவை அதிகமாக தொந்தரவு செய்தனர். மாணவி தங்கியிருந்த அறையின் உள் தாழ்ப்பாள், வெளித் தாழ்பாள் உடைக்கப்பட்டது. மாணவியுடன் தங்கியிருந்த மற்ற மாணவிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    தனிமைப்படுத்தப்பட்ட மாணவி இரவில் அறையை பூட்டிக்கொண்டு தூங்க முடியாமல் தவித்தார். நள்ளிரவில் மாணவி தூங்கி கொண்டிருக்கும் வேளையில் தங்களுக்கு ஆதரவாக இருந்த 2 மாணவிகள் மூலம் பேராசிரியைகள் மாணவியை பல்வேறு கோணங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.

    மாணவி வெளியிட்ட ஆடியோவில் பேராசிரியைகள் தங்களிடம் உன்னை பற்றிய ரகசியங்கள் உள்ளன. அதை வெளியிடுவோம் என்று மிரட்டியதும் இந்த போட்டோ, வீடியோக்களை வைத்து தான் என்று தெரிய வந்தது.

    இதையடுத்து, பாலியல் புகார் கூறிய மாணவி கிரிஜா திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த பேராசிரியைகள் 2 பேர் வெவ்வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

    திருச்சி கல்லூரிக்கு தன்னை மாற்றிய கோவை வேளாண் பல்கலைக்கழக ஆணையை மாணவி ஏற்கவில்லை. பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கிடைக்கும் வேண்டும். அதுவரை திருவண்ணாமலை கல்லூரியில் தான் படிப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து, பாலியல் புகார் கூறிய மாணவி கிரிஜா கல்லூரியில் இருந்து கடந்த 1-ந்தேதி அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மாணவி கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், 2 உதவி பேராசிரியைகள் மற்றும் 2 மாணவிகள் என 6 பேர் மீதும் மானபங்கம், கொலைமிரட்டல், அவதூறாக பேசியது உள்பட 10 பிரிவுகளின் கீழ் திருவண்ணாமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
     
    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege

    ×