search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NAMPERUMAL SEER"

    • ஆடி 28-ம் பெருக்கை முன்னிட்டு திருச்சி காவிரி தாயாருக்கு நம்பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • அது சமயம் பட்டுச்சேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விடப்பட்டது

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார்.

    அதன்படி இந்தாண்டு ஆடி 28-ம் நாளான நேற்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.

    அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணி வரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.

    அது சமயம் பட்டுச்சேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் நம்பெருமாள் அம்மாமண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×