search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "M Subramanian"

    • திராவிட மாடல் ஆட்சி பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
    • 2019-ல் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறிய தாவது-

    பஞ்சு மிட்டாயில் கலக்கப்பட்ட வண்ண கலவை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்து புதுவை அரசு தடை விதித்தது. அந்த செய்தியை பார்த்த பிறகு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

    அப்போது, அதில் புற்று நோய் பாதிப்பை உண்டாக்கும் வேதி கலவை இருப்பது கண்டறியப்பட்டது. உடனே தமிழக முதல்- அமைச்சர் அறிவுறுத்தலோடு வண்ண கலவை இருக்கிற பஞ்சு மிட்டாய்க்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிறுத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை.

    திராவிட மாடல் ஆட்சி பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அதே அமைச்சர்தான் பாராளு மன்றத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர காலதாமதம் ஏன் என்ற கேள்விக்கு தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்து தர வில்லை என தெரிவித்தார்.

    2019-ல் பிரதர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது, அடிக்கல் நாட்ட பிரதமரை அழைத்து வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. நிலஆர்ஜிதம் செய்யப்படாத யாருக்கோ சொந்தமான இடத்தில் பிரதமர் எப்படி வந்து அடிக்கல் நாட்டுவார்?. அல்லது வேறு யாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்ட பிரதமர் ஒரு மாநில முதல்வர் எப்படி அழைத்து வருவார் என அன்றே நான் கேள்வி எழுப்பினேன்.

    நில ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டி இருந்தால் முதல் குற்றவாளி எடப்படி பழனிச்சாமி. அது தெரியாமல் பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி இருந்தால் அவரும் தவறுக்கு உரியவர். நிதி பெற்று தருவதில் காலதாமதம் ஏற்பட்டது என்ற உண்மையான காரணத்தை கூறி இருக்கலாம். உண்மையான காரணத்தை கூறாமல், நில ஆர்ஜிதம் செய்யப்பட வில்லை என்றார். இதற்கான ஆதாரங்களை நான் சமர்ப்பித்துள்ளேன்.

    2019-ல் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த தகவல் எல்லாம் தெரிந்த பிறகு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள நிதி அமைச்சர் நில ஆர்ஜிதம் செய்து தராததால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அவரிடம் புதுவை எம்.பி. தொகுதியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று அவர் தெரிவித்தார்.

    • இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.
    • உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த போது மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.

    உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். பெற்றோர் விரைந்து சென்று அந்த மாணவரை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதலில் அவருக்கு சீராக சுவாசிக்க ஏதுவாக ஆக்சிஜன் நாசி மாஸ்க் பொருத்தும்படி பரிந்துரைத்துள்ளார்கள்.

    உடனே வார்டில் அந்த மாணவரை அனுமதித்து மாஸ்க் பொருத்த முடிவு செய்துள்ளார்கள். இந்த மாஸ்கை பொருத்துவவதன் மூலம் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசித்து இன்னொரு துவாரத்தின் வழியாக கார்பன்டை ஆக்சைடை வெளியேற்ற முடியும்.

    இந்த மாஸ்கை பொருத்தும் போது அதில் உள்ள எலாஸ்டிக் கயிறை தலையின் பின்பக்கம் மாட்டி விடுவார்கள். இதனால் மூக்கு மட்டும் வாய் பகுதியை விட்டு நகராமல் அப்படியே இருக்கும்.

    ஆனால் இந்த மாணவருக்கு மாஸ்க் இல்லாததால் டீ கப்பில் துவாரம் போட்டு அதை ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் டியூபுடன் இணைத்து அதை மாணவர் கையில் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்து கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள். அந்த மாணவரும் அப்படியே பிடித்து சிரமப்பட்டு சமாளித்துள்ளார்.

    இதை பார்த்த நோயாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். வீடியோ எடுத்தவர் கூறும்போது, இதே போல் டீ கப்பை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த வாரமும் ஒருவருக்கு பொருத்தி இருந்ததை பார்த்தாக கூறி உள்ளார். மாஸ்க்குக்கு பதில் டீ கப்பை பயன்படுத்தியது ஏன்? மாஸ்க் இல்லையா? என்பதற்கு மருத்துவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.

    ஒரு பக்கம் இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவசரத்துக்கு சமயோசிதமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்களை பாராட்டுவதை தவிர வழியில்லை.

    இந்த விவகாரம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார். 

    • ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார்.
    • வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது மாநாடு 'வணிகர் உரிமை முழக்க மாநாடு' என்ற பெயரில் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

    மாநாட்டில் வணிகர்களுக்கான 'வி.வி.டி.', 'மைசாட்டோ' ஆகிய செயலிகள் மற்றும் பேரமைப்பு வலைதளம் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், வி.செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார். வணிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் காவல் உதவி செயலி கொண்டு வரப்பட்டது. எனவே வணிகர்களுக்கு உறுதுணையாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, வணிகர்கள் விடுக்கும் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி வருகிறார். 2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரைமுறை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் கட்டிடம் வரைமுறை தொடர்பாக முடிவு எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மனுக்களை பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்து விட்டது. வேண்டுமென்றால் மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம். முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று காலஅவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது கூறியதாவது:-

    வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியே காரணம்.

    இந்த மாநாட்டில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, மின் கட்டணம் உயர்வு தொடா்பாக போராட்டம் நடத்தப்படுமா? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதாக தெரிவித்தார். அந்த கேள்வி கேட்டவர்களை பார்த்து கேட்கிறேன், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.410-ல் இருந்து ரூ.1,200 உயர்த்தப்பட்டதற்கும் ஏன் போராட்டம் நடத்தவில்லை. பேரமைப்பு தலைவரை தூண்டிவிடும் வகையில் செயல்படுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்போது, அதை அவர் உடனடியாக நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.

    இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

    அமைச்சர் பி.மூா்த்தி பேசியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சி வணிகர்களுக்கு முழுஆதரவு அளித்து வருகிறது. நேர்மையாக தொழில் நடத்தி வரும் உங்களை போன்ற வணிகர்களுக்கு எப்போதும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வணிகர் நல வாரியத்தின் நிர்வாகிகளை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.

    இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

    • புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • மருத்துவ வல்லுநர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.

    கோவை,

    கோவை பீளமேடு அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், 2023-24 ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    இதில் மருத்துவ வல்லுநர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலர் முனைவர்.ப. செந்தில்குமார், தேசிய நலவாழ்வு இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஸ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் உமா, தமிழ்நாடு மருத்துவ சேவை கழக இயக்குனர் அரவிந்த், மருத்துவ பணியாளர் தேர்வு கழக தலைவர் கிலாட்ஸன் புஷ்பராஜ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் (பொறுப்பு) மோகன் குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் சாந்தி மலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர்.ஹரி சுந்தரி மற்றும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தொண்டு நிறுவனத்தினர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைவதை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.
    • அன்பை, நட்பை, காதலை வெளிபடுத்துவதற்கு ஏராளமான வழிகள் உள்ளது.

    திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:

    தற்பொழுது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரு புதிய கலாச்சாரம் ஒன்று தலை தூக்கியுள்ளது. ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைந்து விரும்புவர்களுக்கு அனுப்புவது. குறிப்பாக காதலன் காதலிக்கு அனுப்புவது, காதலி காதலனுக்கு அனுப்புவது போன்ற பழக்கம் புதியதாக வந்துக் கொண்டிருக்கிறது. அதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.

    இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ரத்ததானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. எனவே அந்த ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறையல்ல. உடலில் உள்ள இரத்தத்தை எடுக்கும் போது மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின், அதற்கு தேவையான ஊசியினை முறையாக பயன்படுத்தி ரத்தத்தை எடுத்து, பாதுகாப்பார்கள்.

    ஆனால், ஓவியத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் என்பது முறையாக பாதுகாப்பு இல்லாத ஒன்றாகும். அதோடுமட்டுமல்லாமல் ரத்தம் எடுக்க பயன்படுத்துகின்ற ஊசி எத்தனை பேருக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது.

    எனவே விதிமுறைகளின்படி இந்த ரத்தம் எடுக்காத நிலையில் அந்த ரத்தத்தை படம் வரைவதற்கு கையாளும்பொழுது, அந்த ரத்தம் எச்.ஐ.வி போன்ற நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் அது பலரை தாக்கி, பாதிப்பிற்குள்ளாக்கும்.

    எனவே இந்த தகவல் தெரிந்தவுடன் சென்னை வடபழனி மற்றும் தியாகராயநகர் பகுதியில் இருக்கின்ற ரத்த ஓவிய நிறுவனங்களை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். அங்கிருந்து அதற்காக பயன்படுத்தப்படுகின்ற ரத்த குப்பிகள், ஊசி, வரைந்து வைத்திருந்த படங்களை எல்லாம் பறிமுதல் செய்து, அவர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது.

    இதோடு இந்த தொழிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் நிறுவனம் அல்லது கடைகளுக்கு சீல் வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓவியத்தை வரைவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றது, ரத்தத்தை எடுத்துதான் வரைய வேண்டும் என்றில்லை.

    ரத்தம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. எனவே இந்த ரத்த ஓவிய நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப் படுகிறது. இதை யாராவது மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இளைஞர்கள் ரத்த ஒவியத்தின் மீது ஆர்வம் காட்டக்கூடாது, மேலும் இதை வரையும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அன்பை பரிமாறிக்கொள்வதற்கு, நட்பை வெளிப்படுத்திக்கொள்வதற்கு, காதலை வெளிபடுத்துவதற்கு ஏராளமான வழிகள் உள்ளது, ரத்த ஓவியம் வரைந்துதான் அதனை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
    • மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    நாகர்கோவில்:

    பழையாற்றை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி இன்று கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது.

    கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தானில் பங்கேற்றனர்.

    மணக்குடி, புத்தளம், தெங்கம்புதூர், கோட்டார், சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம் வழியாக நாகர் கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிகிரண் பிரசாத், சரவணன் ஆகியோர் 21 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடி வந்தனர். 21 கிலோமீட்டர் தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பரசப்பா கலிடா 1 மணி நேரம் 9 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார். முதல் பரிசாக இவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    கேரளாவைச் சேர்ந்த ஜெகநாதன் 1 மணி நேரம் 9 நிமிடம் 59 வினாடிகளில் கடந்து இரண்டாவது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த வினோத் 1 மணி நேரம் 13 நிமிடம் 53 வினாடிகளில் கடந்து மூன்றாம் பரிசை பெற்றார்.

    இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும், மெட்டலும் வழங்கப்பட்டது. 21 கிலோ மீட்டர் பெண்களுக்கான பிரிவில் சமீதா முதல் பரிசு பெற்றார். இவர் 2 மணி நேரம் 37 நிமிடம் 42 வினாடிகளில் 21 கிலோ மீட்டரை கடந்தார். இவருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-வது பரிசை அஸ்வினி தட்டி சென்றார். இவர் 2 மணி நேரம் 50 நிமிடம் 43 வினாடிகளில் கடந்தார். இவருக்கு ரூ. 15,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 3-வது பரிசை தீபா பெற்றார். இவர் 3 மணி நேரம் 7 நிமிடம் 11 வினாடிகளில் கடந்தார். இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. ஆண்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பிரிவில் ராமசாமி 1 மணி நேரம் 42 நிமிடம் 42 வினாடிகளில் கடந்து முதல் பரிசு பெற்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மாரப்பன் 1 மணி நேரம் 44 நிமிடம் 26 வினாடிகள் கடந்து 2-வது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. டிக்ஸன் 1மணி நேரம் 47 நிமிடம் 11 வினாடிகள் கடந்து மூன்றாம் பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங் கப்பட்டது.

    10 கிலோமீட்டர் ஆண்களுக்கான மினி மாரத்தான் போட்டியில் தினேஷ் முதல் பரிசும், ஆனந்த அசோக் 2-ம் பரிசும், நிதீஷ்குமார் 3-ம் பரிசும் பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் போட்டியில் கிரிஸ்டல் முதல் பரிசும், கவுசிகா 2-வது பரிசும், அடினா ஆர்தார் 3-வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் சான்றிதழ்களும், மெட்டல்களும் வழங்கப்பட் டது.

    இதை தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாரத்தான் ஒருங்கிணைப்புச் செயலாளர் டாக்டர் தேவா பிரசாத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி அவரது 138- வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

    ×