search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake rupees arrest"

    கொளத்தூரில் கள்ளநோட்டு தயாரித்த 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FakeCurrency #arrest

    சென்னை:

    2016-ம் ஆண்டு பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து புதிதாக ரூ.2000, ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

    இந்த புதிய ரூபாய் நோட்டுகளை யாரும் கள்ள நோட்டுகளாக தயாரிக்க முடியாதபடி அதில் ரகசிய குறியீடுகளும், விசே‌ஷமாக தயாரிக்கப்பட்ட பேப்பர்களும் பயன்படுத்தப்படுகிறது.

    ஆனால் அதையும் மீறி புதிய ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தி கள்ள நோட்டுகள் தயாரிக்கப்படுவதை போலீசார் அவ்வப்போது கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சமீபத்தில் கோவையை அடுத்த பேரூரைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.500 கள்ள நோட்டு கொடுத்து சிகரெட் வாங்கிய போது பிடிபட்டார். இந்த நோட்டுக்கள் சிவகாசியில் அச்சடிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கேரளா- தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கள்ள நோட்டு கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டு சிக்கியது.

    நேற்று மாலை சென்னையிலும் கள்ள நோட்டுகள் தயாரித்து மாற்ற முயன்ற 2 பெண்கள் போலீசில் சிக்கியுள்ளனர். சென்னை அமைந்தகரையில் மேத்தா நகர் ரெயில்வே காலனி 3-வது தெருவில் கன்னிமரியாள் என்பவர் மருந்துக் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை 6 மணி அளவில் ஒரு பெண் இரு சக்கர வாகனத்தில் அவரது கடைக்கு வந்து மருந்து வாங்கினார். அதற்கு ரூ.2000 பணம் கொடுத்தார்.


    அந்த நோட்டை வாங்கிய கன்னிமரியாளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரூபாய் நோட்டு தாள் போல் இல்லாமல் சாதாரண தாள் போல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மருந்து கடை ஊழியர்கள் அருகில் இருந்தவர்கள் துணையுடன் அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.

    உடனடியாக அமைந்தகரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் அந்தப் பெண்ணை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் வைத்திருந்தது கள்ள நோட்டு என்பதை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்தனர். அவரது பெயர் வனிதா (30) சைதாப்பேட்டை யைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.

    இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன் மேற்பார்வையில் அண்ணா நகர் துணை கமி‌ஷனர் சுதாகர், உதவி கமி‌ஷனர் குணசேகரன் ஆகியோர் பிடிபட்ட வனிதாவிடம் கள்ள நோட்டு எங்கு, எப்படி கிடைத்தது? யார் அச்சடித்தது என்பது பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    முதலில் வனிதா தனக்கு எதுவும் தெரியாது, கொளத்தூரில் ஒருவர் கொடுத்தார் என்றும், லோகேஷ் என்பவர் கொடுத்தார் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் பெண் போலீஸ் உதவியுடன் வனிதாவை தனியாக வைத்து விசாரித்தனர்.

    அப்போது கொளத்தூரைச் சேர்ந்த சத்தியவதி என்ற பெண்ணின் பெயரை தெரிவித்தார். அவரது வீட்டில் கள்ள நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன் படுத்தி தயாரித்ததாக போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து கொளத்தூரில் உள்ள சத்தியவதி வீட்டுக்கு போலீஸ் படை விரைந்து சென்று சோதனையிட்டது. அங்கு கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் எந்திரம் இருந்தது. கள்ள நோட்டுகளும் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    அங்கு புழக்கத்தில் விடுவதற்காக வைத்திருந்த ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகளும், மீதி 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் ஆகும்.

    ஒரிஜினல் 2000 ரூபாயை பிரதி எடுத்து அதை வைத்து பல பிரதிகளாக கள்ள நோட்டு தயாரித்துள்ளனர். நல்ல நோட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு சரியாக பிரிண்ட் ஆகாத கள்ள நோட்டுகளை வீட்டிலேயே ஆங்காங்கே வீசி இருந்தனர்.

    இது தொடர்பாக சத்தியவதியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இரு பெண்களையும் நேருக்கு நேர் ஒரே இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ள நோட்டு தயாரிப்பில் இவர்கள் மட்டும்தான் ஈடுபட்டனரா? இவர்களுக்கு பின்னால் கும்பல் எதுவும் செயல்படுகிறதா? என்று விசாரணை நடக்கிறது.

    ரூ.2000 கள்ள நோட்டு சிக்கியதைத் தொடர்ந்து கடைக்காரர்களுக்கும், பொது மக்களுக்கும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டு நடமாட்டம் பற்றி தெரியவந்தால் உடனே போலீசுக்கு தெரிவிக்கு மாறும் எச்சரிக்கையுடன் கவனித்து வாங்குமாறும் தெரிவித்துள்ளனர். #FakeCurrency #arrest

    ×