search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery River Flood"

    இன்று காலை வரை காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 18 மாடுகள் மீட்கப்பட்டன. மீதி உள்ள 42 மாடுகளை மீட்கும் பணி 2-வது நாளாக நடந்து வருகிறது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் ஆறு பாய்கிறது.

    கடந்த ஒரு மாத காலமாக கர்நாடக பகுதியில் இருந்து மழை அதிகம் பெய்து வினாடிக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு மேலே கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குட்பட்ட ராசி மணல் பகுதியில் காவிரி ஆற்றின் நடுவே இயற்கையான மணல் திட்டு உள்ளது. ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு காவிரிக்கு நடுவே தீவு போல இந்த மணல் திட்டு அமைந்து உள்ளது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும்போது இந்த தீவு பகுதியிலும், காவிரி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் நாட்டு மாடுகள் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம்.

    தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பலரும், பட்டி மாடுகள் என்ற பெயரில் குறைந்தது 100 மாடுகளைக் கொண்ட கூட்டங்களை வனப் பகுதிக்குள் மாதக் கணக்கில் மேய்ப்பார்கள்.

    தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது மாடுகளை வனப் பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்பவில்லை. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி ஊராட்சிக்குட்பட்ட பாண்டிரங்கன்கொட்டி உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த மாரிமுத்து உள்பட சிலர் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை இந்த ராசிமணல் திட்டு பகுதியில் மேய்த்து வந்தனர். நேற்று 60 மாடுகள் இந்தப் பகுதியில் சிக்கிக் கொண்டன.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி ஜானகிராமன் தலைமையில் 10 வீரர்கள் ராசிமணல் பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் 10 மாடுகளை மீட்டனர்.

    2 மாடுகள் வீதம் அந்த மாடுகளின் காலில் கயிற்றை கட்டி பரிசலில் ஏற்றி மறு கரைக்கு கொண்டு வந்தனர். இதேபோல விவசாயிகள் 8 மாடுகளை மீட்டனர். இன்று காலை வரை மொத்தம் 18 மாடுகள் மீட்கப்பட்டன.

    மீதி உள்ள 42 மாடுகளை மீட்கும் பணி இன்று 2-வது நாளாக நடந்து வருகிறது. ராசிமணல் திட்டு பகுதியின் நாலாபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த மாடுகளை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் 2 லட்சத்து 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருவதால் அஞ்செட்டியில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக ஒகேனக்கல்லுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. அஞ்செட்டி, ஒகேனக்கல் சாலையில் பஸ், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ×