search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bombs threatened"

    கோவை அருகே சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த வாலிபர் போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மீண்டும் கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் பீர் முகமது என்ற பச்சை மிளகாய் பீர்(வயது 35).

    இவர் கடந்த மாதம் 25-ந் தேதி சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, கோவை குனியமுத்தூரில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளேன், முடிந்தால் கண்டுபிடியுங்கள் என மிரட்டினார்.

    மிரட்டல் வந்த எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தி பீர் முகமதுவை கைது செய்தனர். அவர் குடிபோதையில் செல்போனில் பேசி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார். இந்தநிலையில் பீர்முகமது நேற்று மாலை மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகாத வார்த்தைகள் பேசியதோடு, குனியமுத்தூரில் பல இடங்களில் குண்டு வைத்துள்ளேன் என மிரட்டி உள்ளார்.

    செல்போன் எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தி பீர்முகமதுவை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 294பி-தகாத வார்த்தைகளால் திட்டுதல், 506(1)- கொலை மிரட்டல் விடுத்தல், 507- மிரட்டல் விடுத்து பீதியை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இவர் ஏற்கனவே கடந்த 1 வருடத்துக்கு முன்பும் இதே போல போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். #tamilnews
    ×