search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udumalai forest area"

    • ரோட்டோரங்களில் அதிக அளவு வளர்ந்து மண் வளம், நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
    • சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை.

    உடுமலை:

    சீமை கருவேல மரங்களால் மண்ணுக்கும், நிலத்தடி நீர் மட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டு வந்தது.இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில் மண்ணுக்கு தீங்கு ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி குளம், குட்டைகள், நீர் நிலைகள் மற்றும் கிராமப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதே போல் ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம், அமராவதி மற்றும் உடுமலை வனச்சரக பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கும், வனப்பகுதி மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உடுமலை - சின்னாறு ரோடு மற்றும் உடுமலை - கல்லாபுரம் ரோடு பகுதிகளில் அதிக அளவு காணப்பட்டது.

    இம்மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் காணப்படுவதில்லை. வன எல்லை பகுதிகள் மற்றும் ரோட்டோரங்களில் அதிக அளவு வளர்ந்து மண் வளம், நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.மேலும் யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதோடு சீமைக்கருவேல மரக்காடுகளுக்கும், வழக்கமான புற்கள், செடி, கொடிகள் கூட முளைக்காமல் பசுமை இழந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.வனச்சூழல் காக்கும் வகையில் உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில் கடந்த 2020ம் ஆண்டு சிறப்பு நிதியின் கீழ் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது.

    உடுமலை - மூணாறு ரோட்டின் இரு பகுதிகளிலும் சுமார் 5 ஹெக்டர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றி சாய்க்கப்பட்டது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளதால் மரங்களை அகற்ற முடியாது. பறவைகள், நுண்ணுயிரினங்களின் பெருக்கத்திற்கு பயன் அளிக்கும் வகையில் மக்கும் வகையில் அப்படியே விடப்பட்டது. தொடர்ந்து சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில் மீண்டும் அமராவதி மற்றும் உடுமலை வனச்சரக பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. வனப்பகுதிகளை காக்கும் வகையில் சிறப்புத்திட்டமான கேம்பா திட்டத்தின் கீழ், சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதிகளில் தலா 16 ஹெக்டர் என்ற அடிப்படையில் 32 ஹெக்டர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றும் பணி துவங்கியுள்ளது.உடுமலை வனச்சரக பகுதியில் உடுமலை- சின்னாறு ரோட்டிலுள்ள மரங்களும், அமராவதி வனச்சரகத்தில் அமராவதி நகர்- கல்லாபுரம் ரோட்டில் நவால் ஓடை மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள சீமைக்கருவேல மரங்கள், கனரக எந்திரங்கள் வாயிலாக அகற்றப்படுகிறது.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    வனப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் முதல் முறையாக ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில் கடந்த 2020ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளதால் மரங்களை வெட்டி வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லக்கூடாது. அதே பகுதியில் மக்கி, மண்ணுக்கு உரமாக்கப்படுகிறது.

    பரிசோதனை அடிப்படையில் முதற்கட்டமாக சிறப்பு நிதியின் கீழ் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில் கேம்பா திட்டத்தின் கீழ் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது என்றனர்.

    வன எல்லை பகுதிகளில் வனம் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காணப்பட்ட சீமை கருவேலன் மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.இம்மரங்கள் அகற்றப்படும் பகுதியில் வனத்துறை சார்பில் மீண்டும் மலைப்பகுதிகளில் காணப்படும் மரங்கள், மண்ணின் மரபு சார்ந்த நாட்டு மரக்கன்றுகள் மற்றும் வன விலங்குகளுக்கு உகந்த மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

    ×