search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை வனப்பகுதி"

    • ரோட்டோரங்களில் அதிக அளவு வளர்ந்து மண் வளம், நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
    • சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை.

    உடுமலை:

    சீமை கருவேல மரங்களால் மண்ணுக்கும், நிலத்தடி நீர் மட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டு வந்தது.இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில் மண்ணுக்கு தீங்கு ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி குளம், குட்டைகள், நீர் நிலைகள் மற்றும் கிராமப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதே போல் ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம், அமராவதி மற்றும் உடுமலை வனச்சரக பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கும், வனப்பகுதி மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உடுமலை - சின்னாறு ரோடு மற்றும் உடுமலை - கல்லாபுரம் ரோடு பகுதிகளில் அதிக அளவு காணப்பட்டது.

    இம்மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் காணப்படுவதில்லை. வன எல்லை பகுதிகள் மற்றும் ரோட்டோரங்களில் அதிக அளவு வளர்ந்து மண் வளம், நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.மேலும் யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதோடு சீமைக்கருவேல மரக்காடுகளுக்கும், வழக்கமான புற்கள், செடி, கொடிகள் கூட முளைக்காமல் பசுமை இழந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.வனச்சூழல் காக்கும் வகையில் உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில் கடந்த 2020ம் ஆண்டு சிறப்பு நிதியின் கீழ் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது.

    உடுமலை - மூணாறு ரோட்டின் இரு பகுதிகளிலும் சுமார் 5 ஹெக்டர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றி சாய்க்கப்பட்டது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளதால் மரங்களை அகற்ற முடியாது. பறவைகள், நுண்ணுயிரினங்களின் பெருக்கத்திற்கு பயன் அளிக்கும் வகையில் மக்கும் வகையில் அப்படியே விடப்பட்டது. தொடர்ந்து சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில் மீண்டும் அமராவதி மற்றும் உடுமலை வனச்சரக பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. வனப்பகுதிகளை காக்கும் வகையில் சிறப்புத்திட்டமான கேம்பா திட்டத்தின் கீழ், சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதிகளில் தலா 16 ஹெக்டர் என்ற அடிப்படையில் 32 ஹெக்டர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றும் பணி துவங்கியுள்ளது.உடுமலை வனச்சரக பகுதியில் உடுமலை- சின்னாறு ரோட்டிலுள்ள மரங்களும், அமராவதி வனச்சரகத்தில் அமராவதி நகர்- கல்லாபுரம் ரோட்டில் நவால் ஓடை மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள சீமைக்கருவேல மரங்கள், கனரக எந்திரங்கள் வாயிலாக அகற்றப்படுகிறது.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    வனப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் முதல் முறையாக ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில் கடந்த 2020ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளதால் மரங்களை வெட்டி வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லக்கூடாது. அதே பகுதியில் மக்கி, மண்ணுக்கு உரமாக்கப்படுகிறது.

    பரிசோதனை அடிப்படையில் முதற்கட்டமாக சிறப்பு நிதியின் கீழ் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில் கேம்பா திட்டத்தின் கீழ் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது என்றனர்.

    வன எல்லை பகுதிகளில் வனம் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காணப்பட்ட சீமை கருவேலன் மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.இம்மரங்கள் அகற்றப்படும் பகுதியில் வனத்துறை சார்பில் மீண்டும் மலைப்பகுதிகளில் காணப்படும் மரங்கள், மண்ணின் மரபு சார்ந்த நாட்டு மரக்கன்றுகள் மற்றும் வன விலங்குகளுக்கு உகந்த மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

    • 100 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகின்றது.
    • வனத்துறை ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள தமிழக -கேரள எல்லை பகுதியான மறையூர், காந்தலூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் என பல்வேறு வகை மரங்கள் உட்பட சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகின்றது. வனத்துறை ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் தமிழக -கேரளா எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதியில்உடுமலை வனத்துறையினர் கோடந்தூர், ஆட்டுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் வனப்பகுதியில் தீ தடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு உணவு மற்றும் உபகரணங்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளை தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
    • மூணார், மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளை தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது.

    அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும், ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்தநிலையில் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 81.04 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,062 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
    • புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, நடக்கத்துவங்கினர்.

    உடுமலை :

    உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமையான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் கேரள மாநிலம் மற்றும் மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்தும், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்காத நிலையில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, நடக்கத்துவங்கினர்.மலைமேலுள்ள தீர்த்த கிணற்றில் நீர் எடுத்து அவுல், பச்சரிசி, தேங்காய், பழம் ஆகியவற்றை, சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.

    மலையடிவாரம் முதல் கோவில் வளாகம் வரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பக்தர்கள் வசதிக்காக வரிசை தடுப்புகள், பந்தல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் மலையடிவாரத்திலேயே, வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பை மற்றும் காகித பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • கோவில் மலை அடிவாரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது.
    • சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில் மலை அடிவாரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஏழுமலை வெங்கடாசலபதியும் உற்சவராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். இது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

    இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. நோய் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்த நிலையில் இந்த ஆண்டு ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் தயாராகி வந்தனர். இந்தநிலையில் நேற்று முதல் புரட்டாசி மாதம் முழுவதும் வருகின்ற சனிக்கிழமைகளில் பக்தர்கள் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் கார், மோட்டார் சைக்கிள், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் மலை அடிவாரப்பகுதிக்கு வருகை தந்தனர்.

    பின்னர் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் எழுப்பியும் பக்தி பாடல்களை செல்போன்களில் கேட்ட படியும் பக்தி பரவசத்தோடு மலை ஏறிச்சென்று ஏழுமலையானுக்கு தேங்காய், பழம், அவல் படைத்து வழிபட்டனர். நேற்று முதல் வாரம் என்பதால் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. மலைவாழ்மக்கள் வனப்பகுதியில் இயற்கையாக விளைந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவற்றை பொதுமக்களும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.

    விழாவையொட்டி வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் வனத்துறையினருடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வருகிறவாரங்களில் பாதுகாப்பு பலப்படுத்துவதற்கும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன் கோவிலுக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு மலையடிவாரப் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வும் வனத்துறையினர் சார்பில் ஏற்படுத்தப்பட்டது.மேலும் வனவிலங்குகள் மற்றும் வனத்தின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.
    • புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில் மலை அடிவாரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஏழுமலையான் வெங்கடாசலபதியும், உற்சவராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

    இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக வெள்ளிக்கிழமை இரவே பக்தர்கள் மலை அடிவாரப் பகுதிக்கு வந்து விடுவார்கள். பின்னர் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் விடிய, விடிய மலையேறிச் சென்று தேங்காய், பழம் கலந்த அவுளை ஏழுமலையானுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள். இதில் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரையிலும் வனப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. அனைவரும் பாதுகாப்போடு வந்து செல்வதற்கு ஏதுவாக வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.இது வருடந்தோறும் நடைபெற்று வருகின்ற வழக்கமான நிகழ்வாகும்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த வருடம் கடைசி புரட்டாசி சனிக்கிழமைக்கு மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தேங்காய், பழம், அவல் உள்ளிட்ட பொருட்களுடன் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக பெய்த பலத்த மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து முழுமையான அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இயலவில்லை.

    இதனால் இந்த ஆண்டு ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் தயாராகி வருகின்றனர். அதைத்தொடர்ந்து உடுமலை - மூணாறு சாலையில் இருந்து ஏழுமலையான் கோவில் வரையிலும் செல்லும் பாதையை சீரமைக்கும் பணி வனத்துறையினரின் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாளை (சனிக்கிழமை) முதல் புரட்டாசி மாதம் முழுவதும் வருகின்ற சனிக்கிழமைகளில் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×