என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு கடந்த 24-ந்தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 3 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 1,500 பேர் வரை பங்கேற்காதது தெரியவந்துள்ளது.

    தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கும் இப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், முதற்கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளைக்கு மீண்டும் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    • கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கோவை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிங்காநல்லூரில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டராக உள்ளது. கோவை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு எல்லாம் முன்னுதாரணமாக சிறந்த மாநகராட்சியாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி விட்டது.

    கோவை என்றதுமே சிறுவாணி தண்ணீர் தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று அப்படிப்பட்ட கோவை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 20 நாளைக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒன்றும் இல்லை.

    கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பினை பெற்று வந்தனர். தற்போது சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளது.

    இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யால் பல சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தையும் மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து உயர்த்தி விட்டன. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வந்த பலரும் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன. ஆனால் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    இந்த நிலைமை எல்லாம் மாற கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுதாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

    வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்ததால் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்பு அவர் தரப்பு விளக்கங்கள் பெறப்பட்ட பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.

    ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது பெயரிலான 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

    சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தூத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, கோவையில் களம் இறங்கும் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மத்திய இணை மந்திரி எல்.முருகன், கன்னியாகுமரியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி தினம் என்பதால் அரசு விடுமுறையாகும். இதனால் வேட்பு மனுக்களை இன்று திரும்பப் பெற முடியாது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களைத் திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு சின்னம் பெறாத கட்சிகள், சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நாளை மாலை நிறைவடைந்ததும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தை ம.தி.மு.க.வும் கேட்டு உள்ளன.

    வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு மொத்தம் 18 நாட்கள் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-

    1. திருவள்ளூர் (தனி)-14

    2. வடசென்னை-49

    3. தென்சென்னை-53

    4. மத்தியசென்னை-32

    5. ஸ்ரீபெரும்புதூர்-32

    6. காஞ்சிபுரம் (தனி)-13

    7. அரக்கோணம்-29

    8. வேலூர்-37

    9. கிருஷ்ணகிரி-34

    10. தர்மபுரி-25

    11. திருவண்ணாமலை-37

    12. ஆரணி-32

    13. விழுப்புரம் (தனி)-18

    14. கள்ளக்குறிச்சி-21

    15. சேலம்-27

    16. நாமக்கல்-48

    17. ஈரோடு-47

    18. திருப்பூர்-16

    19. நீலகிரி (தனி)-16

    20. கோவை-41

    21. பொள்ளாச்சி-18

    22. திண்டுக்கல்-18

    23. கரூர்-56

    24. திருச்சி-38

    25. பெரம்பலூர்-23

    26. கடலூர்-19

    27. சிதம்பரம் (தனி)-18

    28. மயிலாடுதுறை-17

    29. நாகப்பட்டினம் (தனி)-9

    30. தஞ்சாவூர்-13

    31. சிவகங்கை-21

    32. மதுரை-21

    33. தேனி-29

    34. விருதுநகர்-27

    35. ராமநாதபுரம்-27

    36. தூத்துக்குடி-31

    37. தென்காசி (தனி)-26

    38. திருநெல்வேலி-26

    39. கன்னியாகுமரி-27.

    • தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.
    • அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.

    இதில் பங்கேற்பதற்காக அரியலூரில் இருந்து அமைச்சர் சிவசங்கர் காரில் புறப்பட்டு சென்றார். கார் ஜெயங்கொண்டம் அருகே அசினாபுரம் பகுதியில் சென்ற போது அங்கு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இந்த வேளையில் அந்த வழியாக வந்த அமைச்சர் சிவசங்கரின் காரையும் பறக்கும் படையினர் நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தினார். அதில் அமைச்சர் சிவசங்கர் இருப்பதை பார்த்த அதிகாரிகள் காரை சோதனையிட வேண்டும் என்றனர்.

    அதற்கு தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்றவாறு காரை விட்டு இறங்கினார். சிறிது நேர சோதனைக்கு பின்னர் காரில் எதுவும் இல்லாததால் அமைச்சரின் காரை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

    அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வழிவிட்டு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் சிவசங்கரை அந்த பகுதியினர் பாராட்டினார்கள்.

    • நாங்களும் அ.தி.மு.க.வை ஒரு போட்டியாக கருதவில்லை.
    • நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான எல்.முருகன், ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் யார் பெரிய கட்சி என்பது ஜூன் 4-ந்தேதி தெரிய வரும். நாங்களும் அ.தி.மு.க.வை ஒரு போட்டியாக கருதவில்லை. பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சி ஜூன் 4-ந் தேதி தெரிய வரும். அன்று எந்த கட்சி காணாமல் போகிறது என்பதும் தெரியவரும்.

    நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. களத்தில் இல்லை. பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. சமூக நீதிக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு போலி சமூக நீதி பேசுபவர் தான் மு.க. ஸ்டாலின். பா.ஜ.க. சார்பில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் துணை முதல்-மந்திரிகளாவும், முதல்-மந்திரிகளாகவும் உள்ளனர். சமூக நீதியை பிரதமர் மோடி நிலைநாட்டி வருகிறார். தி.மு.க.வில் அமைச்சர்களாக உள்ள பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 3 பேர். கடைசி இடங்களில் உள்ளனர். பெட்ரோல், விவசாய கடன் தள்ளுபடி என எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. பிரதமர் தர்மத்தின் பக்கமும், ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும் இருக்கிறார்கள். நீலகிரியில் இந்த தேர்தலை 2 ஜியா, மோடி ஜியா என்று என்ற கேள்வியுடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார்.
    • கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை காண்பித்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, குமரி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்தார். அவர் குமரி மாவட்டத்தில் அருமனை, திங்கள்சந்தை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மைக் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.

    கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார். அப்போது பேசத்தொடங்கியதில் இருந்தே, அவர் பேசிய கார்டுலெஸ் மைக்கில் கோளாறு ஏற்பட்டது. பேசிக்கொண்டிருந்தபோது அடிக்கடி கோளாறு ஏற்பட்டபடி இருந்ததால் சீமானால் தொடர்ந்து பேச முடியவில்லை.

    அவர் வேனில் நின்றபடி சவுண்ட் ஆபரேட் செய்தவரை திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தார். ஆனால் அவர் பேசிய மைக் 3 முறைக்கு மேல் கோளாறு ஆனது. இதையடுத்து வயர் இணைப்புடன் பயன்படுத்தும் மைக் சீமானிடம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சீமான் தொடர்ந்து பேசினார்.

    கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது சீமானின் பிரசாரத்தில் சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

    • பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
    • தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    கோவை:

    கோவையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து இன்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிரசாரம் செய்தார். துடியலூர் சந்தைக்கடை பகுதியில் அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க.வினர் பொய் செய்திகளை பரப்புவதற்கு என்றே ஒரு குழு வைத்துள்ளனர். அந்த குழுவினர் மூலம் பொய் செய்திகளை பரப்பி மக்களிடத்தில் மத ரீதியிலான பிரச்சனைகளை பா.ஜ.க. ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில், மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை தான் உள்ளது. குறிப்பாக மணிப்பூரில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் உயிரோடு இருந்தாலே போதும் என்று தான் நினைக்கின்றனர். அந்தளவுக்கு பா.ஜ.க. ஆட்சி உள்ளது. கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏன் இதுவரை செல்லவில்லை?.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. எம்.பி.க்களில் 44 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பா.ஜ.க. தேர்தல் பத்திரம் ஒன்றை கண்டுபிடித்து, அதனை கொண்டு வந்தது. அந்த தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    விசாரணை அமைப்புகளை அனுப்பி, ரெய்டு நடத்தி அவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரத்தை பயன்படுத்தி நிதி பெற்றுள்ளனர். தேர்தல் பத்திரத்தில் பா.ஜ.க. ஊழல் செய்துள்ளது. இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நடைபெறுகிற கடைசி தேர்தல் இதுவாக தான் இருக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாமல் போகலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிந்தது.

    தேர்தலில் போட்டியிட 39 தொகுதிகளிலும் 1,403 பேர், 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையின் போது பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்கு பிறகு அரசியல் கட்சியினர் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    வேட்புமனுவை வாபஸ் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளையே வெளியிடப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து தினமும் அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி அருகே தடங்கம் பி.எம்.பி. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதேபோல் அனைத்து கட்சி தலைவர்களுமே அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் முற்றுகையிட்டு போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 24-ந்தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவர் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை ஓட்டல் ஹைவே இன் அருகில் அவர் பிரசாரம் செய்கிறார். பின்னர் இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பல்லாவரம் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலை, அன்னை தெரேசா பள்ளி அருகில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்தார். இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் 11.30 மணிக்கு ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இன்று மாலையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு ஆலந்தூர் கோர்ட்டு அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு பல்லாவரம் சந்தை ரோடு பகுதியிலும், மாலை 6.30 மணிக்கு தாம்பரம், சண்முகம் சாலை, காந்தி மார்க்கெட் பகுதியிலும், இரவு 7.30 மணிக்கு மறைமலைநகர் பாவேந்தர் சாலை பகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் அண்ணாமலை பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் காலை 11 மணியளவில் சென்னை மாதவரம் நகராட்சி அலுவலகம் அருகில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இன்று பிற்பகல் 3 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் தேரடி சந்திப்பு பகுதியில் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானா தெருவில் அவர் ஓட்டு சேகரிக்கிறார். பின்னர் இரவு 7 மணியளவில் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இரவு 8 மணிக்கு வேளச்சேரி திருவள்ளுவர் நகரில் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் பிரசாரம் செய்கிறார். இன்று காலை 8 மணி முதல் அவர் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் தலைவர்கள் பலர் முற்றுகையிட்டுள்ளதால் தேர்தல் பிரசாரம், வேகம் எடுத்துள்ளது.

    • தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.
    • வேட்பாளர் தேர்வு, பிரசாரம் எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தேர்தல் களம் இப்போது தான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கிடையில் கள நிலவரங்களை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

    மூன்று அணிகள் களத்தில் மோதினாலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.

    4 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்ற கணக்கை தொடங்கி இருக்கும் பா.ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் சில தொகுதிகளை கைப்பற்றி பாராளுமன்ற கணக்கையும் தொடங்கியாக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

    அதற்கான செயல் திட்டங்களை ஒரு ஆண்டுக்கு முன்பே டெல்லி மேலிடம் தொடங்கி விட்டது.


    வேட்பாளர் தேர்வு, பிரசாரம் எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். 39 தொகுதிகளிலும் பரவலாக கவனம் செலுத்துவதைவிட வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையிலேயே பிரதமர் மோடியின் சுற்றுப் பயண திட்டமும் வகுக்கப்பட்டது.

    பலம் வாய்ந்த, பிரபலமான வேட்பாளர்களை களம் இறக்கி மோத வைத்துள்ளது. கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து டாக்டர் தமிழிசையை தென்சென்னை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இது தவிர அண்ணாமலை, ராதிகா சரத்குமார், பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் என்று பல பிரபலங்களை பல தொகுதியில் போட்டியிட வைத்து உள்ளது.

    மக்களிடம் அறிமுகமான முகங்களை போட்டியிட வைப்பதன் மூலம்தான் அந்த தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற கணிப்புடன் வேட்பாளர்களை தேர்வு செய்திருந்தது.

    களத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் அந்த வியூகத்தையும் அமைத்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் 10 முதல் 15 தொகுதிகளில் பா.ஜனதா 2-வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.


    இந்த தகவலை திமு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பென் நிறுவனம் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பி இருக்கிறது.

    அந்த அறிக்கையை பார்த்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து விட்டு 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எந்த தொகுதியிலும் 2-ம் இடத்தை பா.ஜனதா பிடித்து விடக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இதே போன்ற தகவல் சென்றுள்ளது.

    அவரும் அசந்து போனது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மாவட்ட செயலளர்களை தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் பிரிந்து நிற்பதால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்ற மிதப்பில் தி.மு.க.வினரிடம் தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என்பது உண்மை. இதனால் கூட தலைவர் இப்படி உசுப்பி விட்டிருக்கலாம் என்றார்கள்.

    • தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கேசிஆருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
    • போட்டியில் இருந்து விலகியதற்காக தலைவர் மற்றும் பிஆர்எஸ் ஆர்வலர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் தொகுதியில் சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) வேட்பாளராக முன்னாள் துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரியின் மகள் காவ்யா காடியம் அறிவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    சந்திரசேகரராவுக்கு எழுதிய கடிதத்தில், காவ்யா தனது முடிவின் பின்னணியில் முந்தைய பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான சமீபத்திய ஊழல் மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் கட்சியின் கவுரவத்தைக் குறைத்து விட்டன.

    தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கேசிஆருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். போட்டியில் இருந்து விலகியதற்காக தலைவர் மற்றும் பிஆர்எஸ் ஆர்வலர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

    • பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு நேற்று பரிசீலனையும் முடிந்து விட்டது. இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படுகிறது.

    கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி ஆகிய 4 கட்சி வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் 3 தொகுதிகளிலும் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

    குறிப்பாக கோவை தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி எதிர்பார்ப்பு மிக்க தொகுதியாக உள்ளது. இங்கும் போட்டி கடுமையாக உள்ளது.

    பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கோவை வந்து ரோடுஷோவில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அவரை தொடர்ந்து வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலையும் கோவை வந்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விரைவில் இந்த தொகுதிகளுக்கு வர உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இந்நிலையில் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று பிரசாரம் மேற்கொண்டார். காலையில் துடியலூர், சிங்காநல்லூர், சூலூர் பகுதியில் திறந்து வேனில் நின்றபடி பேசி வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து மாலையில் அவர் மலுமிச்சம்பட்டி, நெகமம், மடத்துக்குளம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    இதேபோல தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிங்காநல்லூரில் கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே திரண்டு நின்ற பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி அவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இன்று மாலை அவர் திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து நாளை அவர் ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.

    கோவையில் இன்று ஒரே நாளில் கனிமொழி எம்.பி.யும், பிரேமலதா விஜயகாந்த்தும் பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து வரும் நாட்களில் தலைவர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

    • முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    • முதலமைச்சர் பங்கேற்கும் பொதுக் கூட்டப் பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தருமபுரி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வாளகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தருமபுரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆ.மணி மற்றும் இந்தியா கூட்டணியின் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தருமபுரிக்கு வருகிறார். பின்னர் அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கூட்டத்தை முடித்து கொண்டு மீண்டும் அவர் கார் மூலம் சேலம் வருகிறார். இரவு அவர் சேலத்தில் தங்குகிறார்.

    முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தடங்கம் கிராமம் அருகே பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் நின்று பேசுவதற்கு மேடை அமைக்கும் பணியும், பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    மேலும், கூட்டத்தை சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் வசதியும், பொதுமக்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

    மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் பொதுக் கூட்டப் பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டம் நடைபெறும் பகுதியைச் சுற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அவர் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.பழனியப்பன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மேற்கு மண்டல ஐ.ஜி. பவனேஸ்வரி தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி. உமா மேற்பார்வையில் 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×