என் மலர்tooltip icon

    உலகம்

    • முதல் முறை அத்தகைய ஆயுதத்தை பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
    • கடந்த 2012 ஆம் ஆண்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    உக்ரைன் நாட்டின் மத்திய கிழக்கில் உள்ள நிப்ரோ நகரை குறிவைத்து ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அந்த வகையில், உக்ரைனுக்கு எதிரான தாக்குதலை தொடங்கிய ஆயிரம் நாட்களில் முதல் முறையாக ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

    இந்த தகவல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், ராணுவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலாக இது இருக்கும். பொதுவாக இத்தகைய ஏவுகணைகள் அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டவை ஆகும். ரஷியா தாக்குதல் குறித்து உக்ரைன் கூறும் போது, ரஷியா என்ன வகை ஏவுகணையை பயன்படுத்தியது என்பதை தெரிவிக்கவில்லை.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலின் பயன்பாடு குறித்து உக்ரைன் வெளியிட்ட அறிக்கை பற்றி ரஷியா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், கீவ் சார்ந்த ஊடக நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் ரஷியா பயன்படுத்திய ஏவுகணை- RS-26 ரூபெஸ் என்றும் இது 5800 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஏவுகணை கடந்த 2012 ஆம் ஆண்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது 12 மீட்டர்கள் நீளம், 36 டன் எடை கொண்டது ஆகும். இந்த ஏவுகணையால் 800 கிலோ அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது. ரஷிய ஏவுகணை தாக்குதல் மத்திய கிழக்கு நகரின் தொழில் நிறுவனங்கள் மற்றும் மிக முக்கிய உள்கட்டமைப்புகளை குறி வைத்து நடத்தப்பட்டது ஆகும். 

    • அன்மோல் குறித்து தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.
    • 2022-ம் ஆண்டு அன்மோல் உள்பட 9 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் மாநில மந்திரியுமான பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் ஈடுபட்டதாக போலீசார் அவரை தேடிவந்தனர்.

    அவர் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அமெரிக்கா அவரை கைது செய்ததாக தகவல் வெளியானது. என்.ஐ.ஏ. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.

    ஆனால் அமெரிக்கா அவரை கைது செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அன்மோல் கைது செய்யப்பட்டு அயோவா மாகாணத்தில் உள்ள பொட்டாவட்டமி கவுன்ட்டியில் (Pottawattamie County) உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டதை தவிர மற்ற விரிவான தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.

    பாலிவுட் நடிகர் வீட்டிற்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அன்மோல் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    அன்மோல் குறித்து தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.

    வாரத் தொடக்கத்தில் அன்மோலை நாடு கடுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை எந்த தகவலையும் வெளியிட மறுத்தது. இது உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் எஃப்.பி.ஐ. அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனத் தெரிவித்தது.

    இவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், நிதி சேர்த்தல் தொடர்பாக 2022-ம் ஆண்டு அன்மோல் உள்பட 9 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு கடுமையான பணியாற்றினார் எலான் மஸ்க்.
    • டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவிப்பதற்காக டொனால்டு டிரம்பிற்கு போன் செய்துள்ளார். டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த போது, அந்த போன் காலில் எலான் மஸ்க் இணைந்ததாக கூறப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்காக எலான் மஸ்க் கடுமையான பணியாற்றினார். இதனால் தன்னுடைய முதல் தோழன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இதற்கு முன்னதாக உலகத் தலைவர்கள் பலர் டொனால்டு டிரம்பிற்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தபோது, போன் காலில் எலான் மஸ்க்கும் இணைந்ததாக தகவல் வெளியானது.

    எலான் மஸ்க்கிற்று டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார்.

    தேர்தலின்போது கமலா ஹாரிஸ் என கூகுளில் தேடினாலும் கமலா ஹாரிஸ் செய்திகள் வருகிறது. டொனால்டு டிரம்ப் என தேடினாலும் கமலா ஹாரிஸ் செய்திதான் வருகிறது என எலான் மஸ்க் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2013-ம் ஆண்டு, காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.
    • மாசுக்கு எதிரான போரில் சீனா ஒரே நாளில் வெற்றியைப் பெறவில்லை.

    சீனா கடந்த சில ஆண்டுகளாக மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளாலும் மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பெருமளவில் மாசுபாட்டைச் சமாளித்து வருகிறது. CREA அறிக்கையின்படி, சீனாவின் காற்றின் தரம் 2024-ம் ஆண்டு முதல் பாதியில் மேம்பட்டது. ஏனெனில் 2023 உடன் ஒப்பிடும்போது நுண் துகள்கள் (PM2.5) 2.9 சதவீதம் குறைந்துள்ளது.

    கரடுமுரடான துகள்கள் (PM10), நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), மற்றும் சல்பர் டை ஆக்சைடு (SO2) ஆகியவற்றின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மிகப்பெரிய எண்ணெய் நுகர்வு காரணமாக சீனா கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இருந்தது. ஏறக்குறைய ஆண்டுகளுக்கு முன்பு 2013-ம் ஆண்டு, காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. PM2.5 அளவு ஒரு கன மீட்டர் காற்றில் 101.56 மைக்ரோகிராம்களை எட்டியது.

    அதே அளவுரு 10 ஆண்டுகளில் கடுமையாக மேம்பட்டது. 2023 ஆம் ஆண்டில், சீனாவில் PM2.5 காற்று மாசு அளவு ஒரு கன மீட்டர் காற்றில் 38.98 மைக்ரோகிராம் இருந்தது.

    மாசுக்கு எதிரான போரில் சீனா ஒரே நாளில் வெற்றியைப் பெறவில்லை. இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு விரிவான மூலோபாயத் திட்டங்கள் மற்றும் திட்டங்களை அது செயல்படுத்த வேண்டியிருந்தது.

    ICLEI-உள்ளாட்சிகள் நிலைத்தன்மைக்கான அறிக்கையின்படி, முக்கிய மாற்றத்தின் முக்கிய காரணிகளில் ஒன்று நகர்ப்புற ரெயில் விரிவாக்கம். நாட்டின் காரை மையமாகக் கொண்ட போக்குவரத்து அமைப்பு நிலையான இயக்கம் மாதிரியாக மாற்றப்பட்டது.

    ஒரு அதிநவீன ஒருங்கிணைந்த காற்றின் தர கண்காணிப்பு நெட்வொர்க் 2016 இல் நிறுவப்பட்டது, இது எச்டி செயற்கைக்கோள், ரிமோட் சென்சிங் மற்றும் லேசர் ரேடார் போன்ற உயர்தர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வழிவகுத்தது என்று அறிக்கை கூறுகிறது. இது மாசுபாட்டை சிறப்பாக கண்காணிக்க சீனாவுக்கு உதவியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8 நாளில் திரும்பி வரக்கூடிய சுனிதா வில்லியம்சன் 160 நாட்களுக்கு மேல் ஐஎஸ்எஸ்-ல் தவித்து வருகிறார்.
    • சுனிதா வில்லியம்சின் உடல்நில குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

    நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 8 நாட்களில் மீண்டும் பூமிக்கு திரும்புவதுதான் திட்டம். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழிலநுட்ப கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக இருவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ் எடை குறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இருவருடைய உடல்நிலை குறித்து நாசா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    அவர்களுடைய உடல்நலம் மற்றும் உணவுகள் விசயத்தில் மிகவும் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், தண்ணீர் சரியான முறையில் பயன்படுத்துதல் மற்றும் அதிக அளவிலான கழிவை குறைத்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரின் சிறுநீர் மற்றும் வியர்வை ஆகியவை மறுசுழற்சி மூலம் பிரெஷ் வாட்டராக மாற்றப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மற்றொரு பக்கம் விண்வெளி நிலையத்தில் உள்ள 530 கலோன் பிரெஷ் வாட்டர் டேங்கில் இருந்து தேவைப்படும் தண்ணீர் எடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    • அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனடா குற்றம் சாட்டியது.
    • தற்போது பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

    இதை இந்தியா திட்ட வட்டமாக மறுத்தது. இவ் விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று கனடா தெரிவித்தது. அதன்பின் இந்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனடா குற்றம் சாட்டியது.

    இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதி செயல் குறித்து இந்தியப் பிரதமர் மோடிக்கும் தெரியும் என்று கனடா ஊடகமான தி குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

    பெயர் தெரிவிக்காத கனடா மூத்த தேசிய பாது காப்பு அதிகாரியை மேற் கோள் காட்டிவெளியிடப் பட்ட அந்த செய்தியில், இந்த சதித்திட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளி விவகார அமைச்சர் ஆகியோரும் இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.


    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறிய தாவது:-

    நாங்கள் பொதுவாக ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும் கனடா அரசாங்கம் ஆதாரம் இல்லா மல் ஒரு செய்தித்தாளில் கூறப்படும் இது போன்ற கேலிக்குரிய அறிக்கைகளை நிராகரிக்க வேண்டும்.

    இதுபோன்ற அவதூறு பிரச்சாரங்கள் ஏற்கனவே சிதைந்து விட்ட இரு நாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்துகின்றன என்றார்.

    • ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை டெக்சாசின் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது.
    • ராக்கெட் சோதனையை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் நேரில் பார்வையிட்டார்.

    வாஷிங்டன்:

    உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.

    உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டின் 6-வது சோதனை தெற்கு டெக்சாசில் உள்ள ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது. ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இரண்டு நிலைகளையும் வெற்றிகரமாகப் பிரித்தது.

    சூப்பர் ஹெவி பூஸ்டர் என அழைக்கப்படும் முதல் நிலை, ஏவுதளத்திற்குத் திரும்புவதற்குப் பதிலாக மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கியது.

    ஸ்டார்ஷிப் 2-ம் நிலை அதன் பயணத்தைத் தொடர்ந்தது. ஒரு மணி நேரத்திற்குள் உலகத்தை பாதியாகச் சுற்றி ஒரு துணைப் பாதையை அடைந்தது. ஏவப்பட்ட சுமார் 65 நிமிடங்களுக்குப் பிறகு விண்கலம் இந்தியப் பெருங்கடலில் தரையிறக்கப்பட்டது. இதில் ஸ்டார்ஷிப் விண்கலத்தில் வெப்ப கவச் சோதனைகளை நடத்தியது. வளிமண்டல மறு நுழைவின் கடுமையான சூழ்நிலைகளில் வாகனத்தின் செயல்திறன் பற்றிய அத்தியாவசிய தாவுகளை சேகரித்தது.

    இந்நிலையில், இந்த ராக்கெட் சோதனையை அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் எலான் மஸ்க்கும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்தியா-காரிகாம் உச்சி மாநாடு நடைபெற்றது.
    • அப்போது டொமினிகாவின் உயர்ந்த தேசிய விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது.

    ஜார்ஜ் டவுன்:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியா, டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. அத்துடன், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.

    இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக டொமினிகா அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்தியா-காரிகாம் உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது  டொமினிகா அதிபர் சில்வானி பர்ட்டன் பிரதமர் நரேந்திர மோடிக்கு, டொமினிகா விருதை வழங்கி கவுரவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி டொமினிகாவின் உண்மையான நண்பர். கோவிட் தொற்றின்போது சரியான நேரத்தில் டொமினிகாவுக்கு உதவினார். அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்குகிறோம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என விரும்புகிறோம் என டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் தெரிவித்துள்ளார்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது.
    • தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. ரஷியாவை எதிர்த்து போரிடும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

    ரஷியாவுடன் இணைந்து வடகொரிய படைகள் தாக்க உள்ளதால், தொலைதூரத்தில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசு உக்ரைனுக்கு அனுமதி அளித்தது.

    இதனால் அதிபர் புதின், ரஷிய படைகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளதால் போர் தீவிரமடைந்துள்ளது.

    எந்நேரமும் உக்ரைனில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உக்ரைன் வாழ் அமெரிக்கர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • லாவோஸ் நாட்டில் ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது.
    • சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    வியன்ட்டியன்:

    இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் லாவோஸ் நாட்டிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக இன்று லாவோஸ் நாட்டின் தலைநகர் வியன்ட்டியனுக்கு ராஜ்நாத் சிங் சென்றடைந்தார்.

    இதேபோல், ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வியன்ட்டியன் நகருக்கு சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி டாங் ஜுன் சென்றுள்ளார். இதையடுத்து சீன பாதுகாப்புத்துறை மந்திரியை, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது ராஜ்நாத் சிங் கூறுகையில், வருங்காலங்களில் கல்வானில் ஏற்பட்ட மோதல் போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மோதலுக்கு பதில் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தவேண்டும். 2020 மோதலில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை பற்றி சிந்திக்கவும், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கவும், எல்லையில் அமைதி நிலவுவதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    சமீபத்தில் இந்தியா-சீனா படைகள் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது இருநாட்டு பாதுகாப்பு மந்திரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • பிரதமர் நரேந்திர மோடி கயானா சென்றடைந்தார்.
    • அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

    ஜார்ஜ் டவுன்:

    பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறை பயணத்தின் மூன்றாவது கட்டமாக கயானா சென்றடைந்தார்.

    கயானா நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கயானா அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் அவரது மந்திரி சபையின் மூத்த உறுப்பினர்கள் வரவேற்றனர்.

    அந்நாட்டு முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

    இந்நிலையில், கயானா அதிபர் முகமது இர்பான் அலி பிரதமர் மோடியைப் பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறுகையில், நீங்கள் இங்கே இருப்பது எங்களின் மிகப்பெரிய மரியாதை. தலைவர்கள் மத்தியில் நீங்கள் ஒரு சாம்பியன். நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு வழிநடத்தியுள்ளீர்கள். வளரும் நாடுகளுக்கு நீங்கள் வெளிச்சத்தைக் காட்டியுள்ளீர்கள். மேலும் பலர் தங்கள் சொந்த நாட்டில் பின்பற்றும் வளர்ச்சி அளவீடுகளையும் கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளீர்கள் என தெரிவித்தார்.

    56 ஆண்டுக்குப் பிறகு கயானா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

    • ஆபத்து காலத்தில் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
    • பயங்கரவாத தாக்குதல்களுக்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது.

    ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகள் தங்கள் மக்களிடம் போருக்கு தயாராக இருக்கும் படி அறிவுறுத்தி வருகிறது. சமீபத்தில் தான் ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் ஆயிரமாவது நாளை கடந்தது. இதனிடையே ஸ்வீடன், பின்லாந்து, நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் தங்களது நாட்டினருக்கு ஆபத்து காலத்தில் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

    இது தொடர்பாக ஸ்வீடன் மில்லியன் கணக்கான துண்டுப்பிரசுரங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. அவற்றில் போர், இயற்கை பேரழிவுகள் மற்றும் சைபர் அல்லது பயங்கரவாத தாக்குதல்களுக்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பது பற்றிய தகவல்கள் இடம்பெற்று இருந்துள்ளது. பின்லாந்து பல்வேறு நெருக்கடிகளுக்கான தயார்நிலை குறித்த தகவல்களை சேகரிக்கும் வலைத்தளத்தை தொடங்கியுள்ளது.

    ஸ்வீடன் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் "இராணுவ அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மோசமான சூழ்நிலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் - ஸ்வீடன் மீதான ஆயுதமேந்திய தாக்குதலுக்கு" என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    'நெருக்கடி அல்லது போர் வந்தால்' என்ற 32 பக்க சிறு புத்தகத்தில், கெட்டுப்போகாத உணவு மற்றும் தண்ணீரை சேமித்து வைப்பது, கையில் பணத்தை வைத்திருப்பது மற்றும் தோட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பது போன்ற குறிப்புகள் உள்ளன.

    "ஸ்வீடனை வேறொரு நாடு தாக்கினால், நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம். எதிர்ப்பை நிறுத்த வேண்டும் என்பதற்கான அனைத்து தகவல்களும் தவறானவை" என்று சிறு புத்தகத்தில் ஒரு வரி கூறுகிறது.

    இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஸ்வீடன் ஐந்து முறை வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். புதிய பதிப்பில் ரஷ்யா, உக்ரைன் அல்லது வேறு எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை.

    துண்டு பிரசுரம் ஸ்வீடிஷ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. இதன் டிஜிட்டல் பதிப்புகள் அரபு, ஃபார்ஸி, உக்ரைனியன், போலிஷ், சோமாலி மற்றும் ஃபின்னிஷ் உட்பட பல மொழிகளில் கிடைக்கின்றன.

    பின்லாந்தின் இணையதளம் அதிகாரிகள் "தற்காப்புக்காக நன்கு தயாராக உள்ளனர்" என்று வலியுறுத்துகிறது. பின்லாந்து நாடு ரஷியாவுடன் 1,340 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடர்ந்த பிறகு, பின்லாந்து 200-கிலோமீட்டர் எல்லைப் பகுதி வேலியை 10 அடி உயரம் மற்றும் முட்கம்பிகளால் கட்டும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டு முடிக்கப்பட உள்ளது.

    ×