search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உகாண்டா விமான நிலையம்
    X
    உகாண்டா விமான நிலையம்

    இருக்கும் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனாவிடம் இழக்கும் உகாண்டா

    கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாததால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவிகளை உகாண்டா கோர முடியாத நிலை உள்ளது.
    கம்பாலா:

    ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள உகாண்டா நாடு ஏழ்மையான நிலையில் உள்ளது. அந்த நாடு சீனாவிடம் கடந்த 2015-ம் ஆண்டு கடன் வாங்கியது. கடனுக்கு ஈடாக உகாண்டாவில் உள்ள எண்டெபெ விமான நிலையம் உள்ளிட்ட சொத்துக்கள் சீனாவிடம் அடமானம் வைக்கப்பட்டது. 207 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் தொகை வழங்கப்பட்டது. ஆனால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் உகாண்டா அரசு திணறி வருகிறது.

    கடனை செலுத்த முடியாமல் போனால் எண்டெபெ விமான நிலையத்தை சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று கடன் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஒப்பந்தத்தில் உள்ள அந்த விதியை நீக்க வேண்டும் என்று உகாண்டா அரசு சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதனை ஏற்க சீனா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் உகாண்டாவின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் சீனா வசம் செல்வது உறுதியாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாததால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவிகளை உகாண்டா கோர முடியாத நிலை உள்ளது.

    அதேசமயம், உகாண்டா விமான நிலையத்தை சீனா கையகப்படுத்துவதாக வெளியான தகவலை உகாண்டாவின் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளரும், ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான சீன டைரக்டர் ஜெனரலும் மறுத்துள்ளனர். 
    Next Story
    ×