search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் பிரதமர் காதிமி
    X
    ஈரான் பிரதமர் காதிமி

    ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஈராக் பிரதமர்

    வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 2 டிரோன்கள் மூலம் பிரதமர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதிகளும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அரசு அலுவலகங்கள், தூதரகங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள் ஆகியவற்றை குறிவைத்து ராக்கெட் வீசி தாக்குதல் நடத்துகிறார்கள்.

    இந்த நிலையில் ஈராக் பிரதமர் வீடு மீது ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் ஈராக் பிரதமர் முஸ்தபா- அல்-காதிமியின் வீடு உள்ளது. மேலும் இங்கு அமெரிக்க தூதரகம், முக்கிய தலைவர்களின் வீடுகள் உள்ளன. 

    இதற்கிடையே இன்று அதிகாலை ஈராக் பிரதமர் முஸ்தபா - அல்- காதிமியின் வீடு மீது டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் காயம் அடைந்தனர்.

    பிரதமர் முஸ்தபா- அல்- காதிமியை கொல்ல வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை ஈரான் ஆதரவு போராளிகள் ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் பிரதமர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தாக்குதல் நடந்த சிறிது நேரத்துக்கு பிறகு பிரதமர் முஸ்தபா -அல்- காதிமி டுவிட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். அதில், தான் நலமாக இருப்பதாகவும் கடவுளுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். பின்னர் அவர் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, கோழைத்தனமான ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்கள் தாயகத்தை உருவாக்காது மற்றும் எதிர் காலத்தை உருவாக்காது என்றார்.

    தாக்குதல் குறித்து அரசு தரப்பில் கூறும்போது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 2 டிரோன்கள் மூலம் பிரதமர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நாசவேலை முறியடிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தது.

    ஈராக் பிரதமர் வீடு மீது டிரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×