search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாள நிலச்சரிவு.
    X
    நேபாள நிலச்சரிவு.

    நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி- 38 பேர் மாயம்

    நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
    காத்மண்டு:

    நேபாளத்தில் பருவமழை பொழிய தொடங்கிய பின்னர் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது.

    சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மற்றொரு புறம் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன. நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த சிந்துபால்சோக் நகரில் லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராம பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி உள்ளூர்வாசிகள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. 8 பேர் காயமடைந்து இருந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது தவிர்த்து சம்பவ பகுதியை சேர்ந்த 38 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

    நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடந்த ஜூலை இறுதியில் 113 பேர் பலியாகி இருந்தனர். 67 பேர் காயமடைந்து இருந்தனர். 38 பேரை காணவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
    Next Story
    ×