search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் வெள்ளம் சூழ்ந்ததால் மூழ்கிய கார்கள்
    X
    சாலையில் வெள்ளம் சூழ்ந்ததால் மூழ்கிய கார்கள்

    ஸ்பெயின் நாட்டில் தொடர் மழை- வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலி

    ஸ்பெயின் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.
    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் தென் கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

    தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான கார்கள் மூழ்கின. மழை வெள்ளம் காரணமாக சுமார் 3500க்கும் மேற்பட்டோர் தங்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர்.

    மழை வெள்ளம் காரணமாக இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அல்மேரியா பகுதியில் சுரங்கப்பாதை வழியாக காரில் சென்று கொண்டிருந்த ஒருவர் திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கி காரில் இருந்தபடியே உயிரிழந்தார். கிரெனடா பகுதியில் வெள்ளத்தின் போது தனது கார் சேற்றில் சிக்கியதால் வெளியேற முடியாமல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    வெள்ளத்தில் மூழ்கிய வாகனம்

    மேலும் வேலன்சியா பகுதியில் 51 வயதான பெண்ணும், 61 வயதான அவரது சகோதரரும் காரில் சென்று கொண்டிருந்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த காணாமல் போன ஒரு நபரின் உடல் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும்  பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, அவசரகால ராணுவ பிரிவு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக அல்மேரியா மற்றும் முர்சியா விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 
    Next Story
    ×