என் மலர்
உலகம்
- கடந்த 23 மாதங்களாக, இஸ்ரேல் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு குழந்தையைக் கொன்றுள்ளது.
- இரண்டு, மூன்று வயது குழந்தைகள் மயக்க மருந்து இல்லாமல் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபையில் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆவேசமாக உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, "நம்மில் ஒவ்வொருவரின் கண் முன்னேயும், காசாவில் 700 நாட்களுக்கும் மேலாக இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த 23 மாதங்களாக, இஸ்ரேல் ஒவ்வொரு மணிநேரமும் ஒரு குழந்தையைக் கொன்றுள்ளது. இவை வெறும் எண்கள் அல்ல; ஒவ்வொன்றும் ஒரு அப்பாவியான உயிர்.
காசாவில் உள்ள மனிதாபிமான பேரழிவு நவீன வரலாற்றில் மிகப்பெரியது. இரண்டு, மூன்று வயது குழந்தைகள் மயக்க மருந்து இல்லாமல் குண்டுவெடிப்புகளால் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர்.
குழந்தைகள் பசி மற்றும் மருந்து பற்றாக்குறையால் இறக்கும் உலகில் அமைதி இருக்க முடியுமா?. கடந்த நூற்றாண்டில் கூட மனிதகுலம் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டதில்லை.
இது மனிதகுலத்தின் மிக மோசமான நிலை. காசாவில் நடப்பது போர் இல்லை. இது ஒரு படையெடுப்பு, ஒரு இனப்படுகொலை, ஒரு மிகப்பெரிய படுகொலை கொள்கை" என்று தெரிவித்தார்.
பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த எர்டோகன் மற்ற நாடுகளும் தாமதமின்றி செயல்பட வலியுறுத்தினார்.
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம், தடையற்ற மனிதாபிமான அணுகல் மற்றும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை எர்டோகன் கோரினார்.
மேலும் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை காசா மற்றும் மேற்குக் கரைக்கு அப்பால் சிரியா, ஈரான், யேமன், லெபனான் மற்றும் கத்தாருக்கு விரிவுபடுத்தி, பரந்த பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக எர்டோகன் குற்றம்சாட்டினார்.
- ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.
- சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.
தொடர்ந்து மோதலைத் தூண்டுவது போல, இந்த அமைப்பில் சிலர் ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முற்படுகிறார்கள்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும். இது அக்டோபர் 7 உட்பட இந்த பயங்கரமான அட்டூழியங்களுக்கான வெகுமதியாக இருக்கும்.
அமைதியை விரும்புபவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய குரல் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அண்மையில் அறிவித்த நிலையில் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
தொடர்ந்து சட்டவிரோத குடியேற்றம் குறித்து பேசிய டிரம்ப்,சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கிறது.
அவர்களை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது" என்று தெரிவித்தார்.
- 1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
- ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.
பாலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது, "தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது அவர்களின் உரிமை.
காசா பிரச்சினையைத் தீர்க்க இரு நாடுகள் தீர்வுதான் ஒரே வழி. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பர ஒத்துழைப்புடன் அண்டை நாடுகளாக வாழ வேண்டும்.
1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு நாடுகள் தீர்வு இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி இருக்காது" என்று தெரிவித்தார்.
நடப்பு ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
முன்னதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா,போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தன.
இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
இது காசாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது இராஜதந்திர அழுத்தத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அவர்கள் தங்களுக்கு எதிராகவே போருக்கு நிதியளிக்கிறார்கள்.
- அமெரிக்கா மிகவும் கடுமையான வரிகளை விதிக்க முழுமையாக தயாராக உள்ளது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.
இதில் உக்ரைன் போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், " ரஷிய எண்ணெய் வாங்குவதை தொடர்ந்து செய்வதன் மூலம் சீனா மற்றும் இந்தியா தான் நடந்து வரும் போருக்கு முக்கிய நிதியுதவி அளிக்கின்றன.
ஆனால் நியாயமற்ற வகையில், நேட்டோ நாடுகளும் ரஷ்ய எரிசக்தி பொருட்களை அதிகம் துண்டிக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு எதிராகவே போருக்கு நிதியளிக்கிறார்கள்.
ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு ஒப்பந்தம் செய்ய தயாராக இல்லை என்றால், அமெரிக்கா மிகவும் கடுமையான வரிகளை விதிக்க முழுமையாக தயாராக உள்ளது. என்று அவர் கூறினார்.
அந்த வரிகள் பயனுள்ளதாக இருக்க, ஐரோப்பிய நாடுகள், இங்கு கூடியிருக்கும் நீங்கள் அனைவரும், அதே நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எங்களுடன் இணைய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ரஷிய எண்ணெய் வாங்குவதற்கான தண்டனை நடவடிக்கையாக இந்திய ஏற்றுமதிகளுக்கான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொருவரும் நான் இந்த சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் நோபல் அமைதிப் பரிசு பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
- ஐக்கிய நாடுகள் சபை இதைச் செய்யாததால் நான் இந்த விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தது மிகவும் வருத்தமானது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "வெறும் ஏழு மாத காலப்பகுதியில், நான் ஏழு முடிவற்ற போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
இதில் கம்போடியா மற்றும் தாய்லாந்து, கொசோவோ மற்றும் செர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, மற்றும் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவை அடங்கும்.
எந்த அதிபரும், பிரதமரும், அல்லது வேறு எந்த நாடும் இதைப் போல் எதையும் செய்ததில்லை. நான் இதை வெறும் ஏழு மாதங்களில் செய்தேன். இது இதற்கு முன் நடந்ததில்லை.
இதைச் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஐக்கிய நாடுகள் சபை இதைச் செய்யாததால் நான் இந்த விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தது மிகவும் வருத்தமானது.
ஒவ்வொருவரும் நான் இந்த சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் நோபல் அமைதிப் பரிசு பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் எனக்கு, உண்மையான பரிசு, முடிவில்லாத போர்களில் கொல்லப்படுவதற்கு பதிலாக தங்கள் தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுடன் வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் தான்"என்று தெரிவித்தார்.
- ஐ.நா. பொது சபையில் பேசிய முடித்து திரும்பியபோது, சாலையில் மேக்ரான் வாகனம் நிறுத்தப்பட்டது.
- டிரம்ப் கான்வே செல்ல வேண்டியதிருந்ததால், சாலைகளில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. போது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சபையில் பிரான்ஸ் அதிபர் நீண்ட நேரம் உரையாற்றினார். பின்னர், ஓய்வு எடுப்பதற்காக பிரான்ஸ் தூதரகம் வந்து கொண்டிருந்தார். அப்போது, டொனால்டு டிரம்ப் கான்வே பாஸ் வந்து கொண்டிருந்தது. இதனால் போலீசார் உடனடியாக அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை நிறுத்தினர்.
இதனால் மேக்ரான் நடுரோட்டில் நிற்க வேண்டியதாயிற்று. சிறிது நேரம் காரில் அமர்ந்திருந்த மேக்ரான், பின்னர் காரில் இருந்து இறங்கி வந்து நேராக தடுப்பு கம்பி அருகே நின்று கொண்டிருந்து போலீஸ் அதிகாரிடம், ஏன் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அதிகாரி "மன்னிக்கவும் மிஸ்டர் பிரசிடென்ட். எல்லாமே தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதனால் மேக்ரான் சாலையில் நின்று கொண்டே, டொனால்டு டிரம்பிற்கு போன் செய்துள்ளார். டொனால்டு டிரம்ப் போனை எடுத்து எப்படி இக்கிறீர்கள்?. என்ன நிகழ்ந்தது? என்று கேட்டுள்ளார். நான் தெருவில் நின்று கொண்டிருக்கிறேன். ஏனென்றால், எல்லாமே உங்களுக்கான தடைசெய்யப்பட்டுள்ளது என மேக்ரான் பதில் அளித்துள்ளார்.
எனினும், டிரம்ப் கான்வே கடந்த சென்ற பிறகு, சாலைகள் திறந்து விடப்பட்டுள்ளது. சாலை வழியாக நடந்து சென்றவர்கள், பிரான்ஸ் தலைவர் மேக்ரானை அருகில் பாதுகாப்பின்றி நிற்பதை மகிழ்ச்சியாகவும், அதேவேளையில் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
மேக்ரான் உடனடியாக காருக்கு செல்லவில்லை. டிரம்பிடம் போனில் பேசியவாறு சாலையில் நடந்து சென்றார். பொதுமக்கள் அவரிடம் ஒரேயொரு செல்பி எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர். ஒருவர் அவருடைய நெற்றியில் முத்தமிட்டதாக உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
- பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ தவிர்க்க வேண்டும்.
- மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம்.
பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ தவிர்க்க வேண்டும். மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அல்லது அதிக கவன சிதறல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரது குற்றச்சாட்டை உலக சுகாதார மையம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள விளக்க அறிக்கயைில் "அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை" எனத் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பான சில மருந்துகளில் பாராசிட்டமால் முக்கியமானது. காய்ச்சல் மற்றும் வலி குறைக்க இது அவசியம். உலகளவில் கர்ப்பிணிப் பெண்களில் சுமார் 50% பேர் பாராசிட்டமால் பயன்படுத்துவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பல நாடுகளில் இது பல பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
காய்ச்சல் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். அதனால், டாக்டர்கள் பாராசிட்டமாலை பாதுகாப்பான தேர்வாகக் கருதுகின்றனர்.
- டிரம்பின் அமெரிக்க குடியரசு கட்சி பிரமுகர் அனுமன் குறித்து வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அமெரிக்காவை சேர்ந்த ஹிந்து அமைப்பினர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், சுகர்லேண்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோவிலில் 90 அடி உயர அனுமன் சிலை அமைந்துள்ளது. கடந்தாண்டு திறக்கப்பட்ட இந்தச் சிலை வட அமெரிக்காவின் மிக உயரமான கடவுள் சிலைகளில் ஒன்று என்றும், அமெரிக்காவின் ஒற்றுமை சிலை என்றும், நாட்டின் 3வது உயரமான சிலை என்றும் போற்றப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் டங்கன். இவர் டெக்சாஸ் மாகாண குடியரசு கட்சி தலைவராக இருந்து வருகிறார்.
அலெக்சாண்டர் டங்கன் எக்ஸ் வலைதளத்தில் கடவுள் அனுமன் பற்றி ஒரு சர்ச்சை பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
டெக்சாஸில் ஒரு பொய்யான இந்து கடவுள் சிலையை ஏன் அனுமதிக்கிறோம். இது ஒரு கிறிஸ்தவ நாடு என பதிவிட்ட அவர், பைபிளில் இடம்பெற்றுள்ள சில வாசகங்களையும் அதில் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் அவர், அஷ்டலட்சுமி கோவிலில் உள்ள அனுமன் சிலை வீடியோவையும் அந்தப் பதிவில் இணைத்துள்ளார்.
இந்நிலையில், அலெக்சாண்டர் டங்கனின் கருத்துக்கு அமெரிக்க இந்து பவுண்டேஷன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புகார் ஒன்றை டெக்சாஸில் உள்ள குடியரசு கட்சி அலுவலகத்துக்கு எக்ஸ் வலைதள பதிவு மூலம் அனுப்பியுள்ளது.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் 6 என சைகை காட்டினார்.
- ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் இந்திய விமானங்களை வீழ்த்தியதை அவர் அவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. பிரிவு லீக் ஆட்டம் முடிந்த பின்னர், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மீண்டும் மோதின.
இந்த போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர். அதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் கைவிரல்களை உயர்த்தி 6 போன்று சைகை காட்டினார். மேலும், பறக்கும் விமானம் கீழே விழுவதுபோல் சைகை காட்டினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் நாட்டில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சண்டையின்போது இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. ஆனால் இந்தியா இதை மறுத்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரரின் சைகைக்கு, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் "ஹரிஷ் ராஃப் இந்தியாவை சரியான முறையில் நடத்தியுள்ளார். தொடருங்கள். கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன. நீதிக்கான நாள் வரை 6-0 என்பதை இந்தியா மறக்காது. உலகமும் அதை மனதில் வைத்திருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை
- எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு H-1B விசா வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்ச மாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இது எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து உள்ளது.
இதற்கிடையே ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க பரீசிலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு பல்வேறு துறை நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவின் மருத்துவத்துறை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று கருத்துக்கள் எழுந்தன. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மிகப்பெரிய மருத்துவ அமைப்புகள் கவலைகளை தெரிவித்தன.
இதையடுத்து விசா கட்டண உயர்வில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறும் போது, "அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளன. அதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவார்கள் என்று தெரிவித்தார்.
- ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது.
- இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் நாடும் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இதனை அறிவித்தார்.
உலக நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பலத்த மழை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் ககாயன் மாகாணம் அருகே "ரகசா" என்ற புதிய புயல் உருவாகி உள்ளது.
இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் இன்று மதியம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் காற்று வீசி மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பள்ளிகள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த மழை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் காரணமாக, மணிலா மற்றும் 29 மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கைகள் காரணமாக, உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு 4,00,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 500-க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.
புயல் செல்லும் வழியில் உள்ள தைவான் நாட்டிலும் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர்.






