என் மலர்
தலைப்புச்செய்திகள்
- செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார்.
- செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எந்த போராட்டமாக இருந்தாலும் எங்களது ஆட்சியில் அனுமதி கொடுத்தோம். சிவாஜி கணேசனை விட மிகவும் சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.
தேர்தல் முடியும் வரை தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பார், தேர்தல் முடிந்த பின் எந்த கட்சியில் இருப்பார் என தெரியாது.
கரூரில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு மணல் திருட்டு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியால் அவரையே காப்பாற்றிக் கொள்ள முடியாது, அவரை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும்.
- தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன.
47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா வைத்துள்ளதாக தென்கொரியா எச்சரித்துள்ளது.
வட கொரியாவிடம் 47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் (2,000 கிலோகிராம்) அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கலாம் என தென் கொரியா எச்சரித்துள்ளது.
விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (FAS) உள்ளிட்ட நிபுணர்களின் மதிப்பீடுகளின்படி, வட கொரியா 90% அல்லது அதற்கு மேற்பட்ட சுத்தமான 2,000 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாகக் தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு விவகார (unification) அமைச்சர் சுங் டோங்-யோங் தெரிவித்தார்.
அணுசக்தி சர்வதேச முகமையின் (IAEA) கூற்றுப்படி, ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும். அந்த வகையில், வட கொரியாவிடம் உள்ள 2,000 கிலோகிராம் யுரேனியம் மூலம் சுமார் 47 அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும்.

தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன. ஏற்கனவே 50 அணு குண்டுகளை வடகொரியா வைத்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவை தடுத்து நிறுத்த பொருளாதாரத் தடைகள் பயனுள்ளதாக இருக்காது என்றும், கொரியா அமெரிக்கா இடையேயான உச்சிமாநாடு மட்டுமே ஒரே தீர்வு என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் மிரட்டலுக்காக அணு ஆயுதத்தை கைவிட முடியாது என்றும் தங்கள் இருப்பை நிலைநாட்ட அது மிகவும் முக்கியம் என்றும் வட கொரியா அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கிறார்.
- இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
நடிகர் சிலம்பரசன், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் தனது 49-வது படத்தில் நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்த ப்ரோமோவை அக்டோபர் 4-ந் தேதி வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். முதல் முறையாக சிம்பு- வெற்றிமாறன் இணைவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.
இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என வெற்றி மாறன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.
- அரசு அரசாணை வெளியிட்டது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உதரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீர் நிலைகள், வனப் பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் மரங்களை சர்வே எடுக்க வேண்டியுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்க இருப்பதால் மரங்களை கணக்கெடுப்பதற்கும், அவற்றை நீக்குவதற்கும் மேலும் 3 கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. அரசு அரசாணை வெளியிட்டது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஒவ்வொரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் அகற்றவில்லை என்றால், அதற்கான செலவினங்களை நில உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கலாம். அவர்கள் அனுமிக்காவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன், வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதை தள்ளி வைக்க முடியாது. மரங்களை அகற்றுவது தொடர்பாக திட்டங்களை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அன்று உரிய பதிலை அளிக்காவிடில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனத் தெரிவித்தனர்.
- நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
- பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், தவெக-வுக்கு 11 நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி விதித்துள்ளது.
நிபந்தனைகள் வருமாறு:
நிகழச்சி நடத்தும் இடத்தில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் பிளக்ஸ், பேனர் வைக்கக்கூடாது, அதன்மீது தொண்டர்கள் ஏற கூடாது.
நிகழ்ச்சி நடைபெறும்போது தவெக தொண்டர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பாத வண்ணம் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும், முதலுதவி சிகிச்சைக்கான முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்.
கூட்டத்தை முறையாக நடத்த தீயணைப்பு துறையினர் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக மாநகராட்சியிடமும் அனுமதி பெற வேண்டும்.
திருக்காம்புலியூர் ரவுண்டானா தேசிய நெடுஞ்சாலை என்பதால் ரோடு ரேஷ நடத்த தடை, கூட்டம் முடிந்ததும் கொடி, பேனரை அற்ற வேண்டும்.
பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மக்களின் உண்மையான நோக்கங்களை உணர்ந்து கொள்ளும் திறன் பெண்களிடம் உள்ளது.
- மோடி, அமித் ஷா, நிதிஷ் குமாரின் உண்மையான நோக்கங்களை மக்கள் உணர வேண்டும்.
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பெண்கள் சுயத்தொழில் தொடங்க, 75 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் நிதிஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில், பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பிரியங்கா காந்தி நிகழ்ச்சி ஒன்றில கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் உண்மையான நோக்கங்களை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாடம் கற்பிக்க அவர்கள் தகுதியானவர்கள்.
தேர்தல் வர இருப்பதால், 10 ஆயிரம் தர அரசு முன்வந்துள்ளது. ஆனால், இந்த 10 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளிக்கவில்லை.
மக்களின் உண்மையான நோக்கங்களை உணர்ந்து கொள்ளும் திறன் பெண்களிடம் உள்ளது. மக்கள் அவர்களுடைய மகள்களுக்கு வரன் தேடுமபோது, அதை பயன்படுத்துகிறார்கள். அதேபோல், மோடி, அமித் ஷா, நிதிஷ் குமாரின் உண்மையான நோக்கங்களை மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
- சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
- அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.
மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். ஜுபீனின் இசைக்குழுவில் டிரம்மராக சேகர் இருந்து வந்தார்.
சிங்கப்பூரில் ஜுபீனின் yacht படகு பயணத்தின்போது சேகர் அவருடன் இருந்தார். விசாரணைக்காக அழைக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக விசாரணைக் குழு சிங்கப்பூரில் ஜூபின் பங்கேற்ற விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் சுபீனின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோரின் வீடுகளில் ஆய்வு செய்தது.
- இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.
- நியூ யார்க்கில் நடக்கும் 80வது ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தை இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது
இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.
இதற்கிடையே பாலஸ்தீனம் என்று ஒரு நாடு கிடையாது என்ற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் மேற்கு கரையை இஸ்ரேல் இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இதுவரை நடந்ததுபோதும். இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
நியூ யார்க்கில் நடக்கும் 80வது ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டிரம்ப் -இன் கருத்து வந்துள்ளது.
- மார்க் ரூட்டே CNN தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
- ரூட்டேவின் கூற்று உண்மைக்கு மாறான முற்றிலும் ஆதாரமற்ற ஒன்று என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்திற்கு வந்திருந்த நேட்டோ (NATO) அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே CNN தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவின் மீதான 50% வரிகளை டிரம்ப் விதித்தது, ரஷியா மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதினை போனில் அழைத்து உக்ரைன் போர் உக்ரைன் போரில் ரஷியாவின் வியூகம் என்ன என்று கேட்க வைத்தது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இதுபோன்ற எந்த உரையாடலும் நடக்கவில்லை என்றும் ரூட்டேவின் கூற்று உண்மைக்கு மாறான முற்றிலும் ஆதாரமற்ற ஒன்று என மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
- வாகனத்திற்கான அனைத்து ஆவணங்களையும் மனுவுடன் இணைதுள்ளார் துல்கர் சல்மான்.
சொகுசு கார்களை பூடான் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி கொண்டு வரப்பட்டதாக எழுந்த புகாரின் அப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தினர்.
ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பூடான் வழியாக இந்தியாவுக்கு வரி செலுத்தாமல் காரை கொண்டு வந்ததாக குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் சுங்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு தாக்கல் செய்துள்ளா். அந்த மனுவில் "சட்டத்திற்கு உட்பட்டு சுங்க வரி செலுத்தி கார் வாங்கிய நிலையில், பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
2004 மாடல் லேண்ட் லோவர் சொகுசு வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவணங்களை மனுவுடன் இணைத்துள்ளார்.
துல்கர் சல்மான் மனு தொடர்பாக, விளக்கம் அளிக்க சுங்சுத்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வருகிற 30ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.
- நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் கூறியுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கக் கோரி சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே அவர்களுக்கு ஆதரவாக கடந்த புதன்கிழமை லே-வில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது.
அங்கு போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், லே-வில் உள்ள பாஜக அலுவலகத்தையும் தாக்கினர்.
செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த சோனம் வாங்க்சுக், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இளைஞர்கள் அமைதிக்காக வேண்டும் என்று கூறி தனது போராட்டத்தை நிறுத்திக்கொண்டார்.
வன்முறைக்குக் காரணம் வாங்க்சுக்கின் "தூண்டுதல் பேச்சுகளே" என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
அரபு வசந்தம் மற்றும் நேபாள 'ஜென் இசட்' போராட்டங்களைப் பற்றி அவர் பேசியது வன்முறையைத் தூண்டியதாக அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை வாங்க்சுக் கடுமையாக மறுத்துள்ளார். இப்பிரச்சனையின் மூல காரணிகளைத் தீர்க்காமல் பலிகடா தேடும் தந்திரமாகவே மத்திய அரசு தன்னைக் குறிவைப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று சோனம் வாங்க்சுக் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே வாங்க்சுக் நிறுவிய SECMOL என்ற அரசு சாரா நிறுவனத்தின் FCRA (வெளிநாட்டுப் பங்களிப்பு) உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.






