என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது.
    • புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருவரின் காம்போவும், இவர்கள் நடித்த காதல் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

    இதனிடையே, இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்களும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதற்கு இருதரப்பில் இருந்து பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து, இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளியாகியது. மேலும், இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற திருமண நிச்சயதார்த்ததில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்  திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்களின் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • ஒரே நாளில் விலை மாற்றம் கடந்த 2 தினங்களாக நீடிக்கிறது.
    • தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (செப்டம்பர்) முழுவதும் பெரும்பாலான நாட்களில் ஏற்றத்துடனேயே காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் இருந்தும் விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.

    அதிலும் ஒரே நாளில் விலை மாற்றம் கடந்த 2 தினங்களாக நீடிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் காலையில் கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்து, மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து இருந்தது.

    மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில் வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 10,950 ரூபாய்க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200

    02-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600

    30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880

    29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-10-2025- ஒரு கிராம் ரூ.162

    02-10-2025- ஒரு கிராம் ரூ.164

    01-10-2025- ஒரு கிராம் ரூ.161

    30-09-2025- ஒரு கிராம் ரூ.161

    29-09-2025- ஒரு கிராம் ரூ.160

    • 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது.
    • புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலும் கேங்ஸ்டர் கதைக்கு என்று என்றுமே தனி மவுசு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதை பீக்கி 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). இணைய தொடராக வெளிவந்து வரவேற்பை பெற்ற இதன் 6வது சீசன் 2022 இல் வெளியானது.

    இந்த க்ரைம் டிராமா தொடர், 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது. தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி (Cillian Murphy) டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    இந்நிலையில் 'பீக்கி பிளைண்டர்ஸ்' மேலும் இரண்டு புதிய சீசன்களுடன் நெட்ஃபிக்ஸ் தளத்தில் மீண்டும் வரவுள்ளது. இந்த அறிவிப்பை அத்தொடரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    வரவிருக்கும் ஒவ்வொரு புதிய சீசனிலும் ஆறு எபிசோடுகள் இடம்பெறும். ஒவ்வொரு எபிசோடும் சுமார் 60 நிமிடங்கள் ஓடும்.

    உலகளவில் நெட்ஃபிக்ஸ் தளத்திலும், இங்கிலாந்தில் மட்டும் பிபிசி தொலைக்காட்சியிலும் இந்தத் தொடர் வெளியாகும்.

    புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

    'பீக்கி பிளைண்டர்ஸ்' ஃபிரான்சைஸின் ஒரு பகுதியாக, 'தி இம்மோர்டல் மேன்' (The Immortal Man) என்ற புதிய திரைப்படமும் 2026 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதிலும் கில்லியன் மர்ஃபி, ரெபேக்கா பெர்குசன், டிம் ரோத், சோஃபி ரண்டில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  

    • இரு வேரியண்ட்களில் VX வேரியண்ட்டில் எல்சிடி டிஸ்பிளே உள்ளது.
    • VX மற்றும் ZX என ஹீரோ டெஸ்டினி 110, 2 வேரியண்ட்களில் கிடைக்கும்.

    ஹீரோ நிறுவனம், புதிய டெஸ்டினி 110 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 110 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8.1 ஹெச்பி பவர், 8.8 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.

    இந்த ஸ்கூட்டரில் புரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட், எச் வடிவ எல்இடி டெயில் லைட்கள் என வடிவமைப்புகள் பெரும்பாலும் டெஸ்டினி 125 ஸ்கூட்டரை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் VX மற்றும் ZX என ஹீரோ டெஸ்டினி 110, 2 வேரியண்ட்களில் கிடைக்கும்.

    இரு வேரியண்ட்களில் VX வேரியண்ட்டில் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இதன் விலை ரூ.72 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் மூன்று நிறங்களில் வருகின்றன. ZX வேரியண்டிலும் 3 நிறங்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள்.
    • உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம்.

    இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை. அனைவரும் பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1-வது, 5-வது சனிக்கிழமையில் போடுவாங்க. பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

    புரட்டாசி சனியன்று 'ஓம் நாராயணாய நம' என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம்.

    ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவது உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம்.

    கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

    • புரட்டாசி மாதம் வரும், 3-வது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடைபெறுகிறது.
    • பகல் 10 மணிக்கு மேல் இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.

    குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள பெண்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி மாதவனையும் மகாலட்சுமியையும் வழிபடுவர். ஆனால் ஸ்ரீ மகாலட்சுமியே நாம் நன்றாக இருக்க வேண்டுமென்று மாவிளக்கு ஏற்றி மகா விஷ்ணுவை வழிபடுவதை நீங்கள் எங்காவது பார்த்ததுண்டா?

    சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீ அஷ்டலட்சுமி கோவிலில் தான் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் வரும், 3-வது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று காலை வழக்கம் போல் தினசரி பூஜைகள் நடந்து முடிந்த பிறகு சுமார் 9 மணிக்கு மேல் இந்த வழிபாடுகள் துவங்கும். பகல் 10 மணிக்கு மேல் இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.

    அதன் பிறகு இங்குள்ள அஷ்ட லட்சுமிகளின் சன்னதிகளில் ஒரு சன்னதிக்கு ஒரு மாவிளக்கு என்ற விகிதத்தில் எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படும். (இவற்றை ஸ்ரீ மகா லட்சுமியே ஏற்றுவதாக ஐதீகம்) பிறகு அவை அனைத்தும் ஒவ்வொன்றாக உற்சவர் ஸ்ரீ நிவாசப் பெருமாள் முன்பு கொண்டு செல்லப்பட்டு அந்த எட்டு மாவிளக்கின் தீபச் சுடர்களாலும் பெருமாளின் முன்பு ஒரு பெரிய அகண்ட தீபம் ஏற்றப்படும்.

    மாலை சுமார் 5 மணியளவில் சஹஸ்ரநாம அகண்ட பாராயணம் பூஜைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி பகவானை சேவித்தலும் வரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மகாலட்சுமியே மாவிளக்கேற்றி மாதவனை வழிபடும் இந்த ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெருமாளின் திவ்ய கருணையை பெறலாம்.

    • டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    • சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.

    கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

    இதன் பின் ஹமாஸ் இதில் விரைந்து முடிவெடுக்க வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு விதித்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது.

    மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், அரபு, இஸ்லாமிய நாடுகள் மற்றும் டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் திட்டத்தின் பிற விவரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தைநடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது.

    டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியலில் இருந்து வெளியேறுவது மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

    ஆயுதத்தை கைவிடுவது உள்ளிட்ட அம்சங்களை ஹமாஸ் ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது.

    • இஸ்ரேல் ராணுவத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த விழாவில், இஸ்ரேலிய போலீசார் இந்திய தேசிய கீதத்தை இசைக்கச் செய்தனர்.
    • இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், நிகழ்வின் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    இஸ்ரேலில் ஓட்டமன் சாம்ராஜ்யத்தியில் இருந்து விடுதலை கிடைத்த ஹைஃபா போரின் 107 ஆவது நினைவு நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

    இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங், இஸ்ரேல் ராணுவத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த விழாவில், இஸ்ரேலிய போலீசார் இந்திய தேசிய கீதத்தை இசைக்கச் செய்தனர். 

    இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், நிகழ்வின் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, "1918-ல் ஹைஃபாவை விடுவித்த ஜோத்பூர், மைசூர் மற்றும் முன்னாள் ஹைதராபாத் பகுதிகளைச் சேர்ந்த இந்திய குதிரைப் படை வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தை பெருமையுடன் நினைவுகூர்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    மேலும் இதுகுறித்து பேசிய இந்திய தூதர் ஜே.பி. சிங், "முதலாம் உலகப் போர் காலத்தில் 74,000-க்கும் அதிகமான இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்றும் இஸ்ரேலில் ஐ.நா. அமைதி படைகளில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். 

    • ஒவ்வொரு கூட்டத்திலும் எம்.ஜி.ஆர். கூட்ட நெரிசலை குறைக்கும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி உள்ளார்.
    • 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகோ பேசிய ஒரு வீடியோவும் தற்போது வைரலாகிறது.

    கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், திட்டமிடுதலில் பிழை ஏற்பட்டதே இதற்கான பிரதான காரணம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    எந்தவொரு கூட்டத்திலும் மக்கள் பங்கேற்றாலும் அதில் அவர்களின் உயிர்களுக்கு பொறுப்பு அரசு என்றாலும், அதில் சரியான ஏற்பாடுகளை செய்யாவிட்டால் அதற்கு பொறுப்பு கூட்டம் நடத்துபவர்கள்தான் என்று கோர்ட்டு பல்வேறு தீர்ப்புகளில் கூறியிருக்கிறது.

    போலீசார் தரப்பில், விஜய் கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதைவிட பல மடங்கு மக்கள் கூடிய எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டங்களில், அசம்பாவிதம் நிகழாமல் நடந்திருக்கிறது என்பதுதான் முக்கியமானது.

    அந்தக் காலத்தில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் இருந்தாலும், மக்கள் எம்.ஜி.ஆரை பார்க்க ஒரு நாள் முன்பே கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து கூடிவிடுவார்கள். அவர் மேடைக்கு வரும்போது கூட்டம் ஆவலுடன் முன்னே அலைமோதி வந்தாலும், அதில் ஒரு ஒழுங்கு இருந்தது. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். கையாண்ட நுணுக்கமான தந்திரங்கள்தான்.

    ஒரு கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் இருந்தால், கூட்டம் முடிந்ததும் எம்.ஜி.ஆர். ''முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேறட்டும். ஆண்கள் அப்படியே நிற்கவும். உங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது'' என்று அறிவித்தார். பெண்கள் வெளியேறியதும், ''உங்களிடம் சொல்ல எதுவும் இல்லை. பெண்களும் குழந்தைகளும் நெரிசலில் சிக்காமல் இருக்கத்தான் அப்படி சொன்னேன்'' என்று சிரித்தபடி கூட்டத்தை நிறைவு செய்தார். இதுபோன்று ஒவ்வொரு கூட்டத்திலும் எம்.ஜி.ஆர். கூட்ட நெரிசலை குறைக்கும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி உள்ளார்.

    அதுபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகோ பேசிய ஒரு வீடியோவும் தற்போது வைரலாகிறது. அதில் அவர், "50 ஆயிரம் பேர் கூடிய இடத்தில் ஒருவன் விழுந்தாலே, 20 பேருக்கு உயிரிழப்பு நேரலாம். அதனால்தான் நான் கூட்டத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கச் சொல்கிறேன்'' என்று எச்சரித்துள்ளார். அவர் சொன்னதுபோல், சிறிய தவறே பெரும் விபத்துக்கு வழிவகுக்கும் என்பதை விஜய் கூட்டம் அரங்கேற்றி இருக்கிறது.

    அதேபோல் கூட்டத்தினர் பாதுகாப்பு குறித்து விஜயகாந்த் பேசிய ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. இன்று அரசியல் கூட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு என்பது மிக அவசியமானது. தொழில்நுட்ப வசதிகள், காவல்துறை கண்காணிப்பு, டிரோன் கேமரா, இரும்பு தடுப்புகள் என அனைத்தும் இருந்தாலும், தலைவரின் செயல்திறன், தந்திரம், மக்களிடம் நேரடியாக கூறும் கட்டுப்பாட்டு அறிவுறுத்தலே கூட்டத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

    மக்களை ஈர்ப்பதற்கும் மேலாக, அவர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் தலைவர் மட்டுமே உண்மையான மக்கள் தலைவராக இருப்பார் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரிமாற்றப்பட்டு வருகிறது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, அரியலூர், கரூர், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • ஆஷிஷ் குமார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆபரேஷன் அலர்ட் நடவடிக்கையின்போது வீரமரணமடைந்தார்.
    • பாரம்பரியமாக ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் வீரர்கள் செய்தனர்.

    இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த ஒரு பெண்ணின் திருமணம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள பர்லி கிராமத்தில் ஆராதனா என்ற அந்த பெண்ணின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.

    அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக பணியில் இருந்த ஆராதனாவின் அண்ணன் ஆஷிஷ் குமார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆபரேஷன் அலர்ட் நடவடிக்கையின்போது வீரமரணமடைந்தார்.

    இந்நிலையில் அண்ணன் இன்றி ஆராதனா திருமணம் நடக்கக்கூடாது என்று கருதிய ஆஷிஷ் குமார் பணியாற்றிய படைப்பிரிவில் உடன் பணியாற்றிய வீரர்கள் இமாசலப் பிரதேசம் புறப்பட்டனர்.

    ஆராதனாவுக்கு அண்ணனாக முன்னின்று அவர்கள் அனைத்துக் கடமைகளையும் செய்தனர். மணமகனை திருமண மேடைக்கு அழைத்துச் செல்வது, சடங்குகள் முடியும் வரை அருகில் நிற்பது, பின்னர் புகுந்த வீட்டுக்குச் செல்லும் போதும் கூடச் செல்வது வரை, பாரம்பரியமாக ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் வீரர்கள் செய்தனர்.

    இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சகோதரனின் பாசத்தையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் விதமாக, வீரர்கள் ஆராதனாவிற்கு திருமணப் பரிசாக நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit) இருப்பை வழங்கினர்.

    வீரர்களின் இந்த செயல், திருமணத்துக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    இதுபற்றி வீரர்களிடம் கேட்கையில், "ஆராதனாவிற்கு அண்ணனாக நின்று ஆஷிஷின் நினைவைப் போற்றுவது எங்களது தார்மீகக் கடமை" என்று பதிலளித்தனர்.

    ×