என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கல்வியில் மட்டுமல்ல ஏற்கனவே ஒன்றிய அரசின் பட்ஜெட்டிலும் தமிழ் நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.
- இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒன்றியம்தான் இந்தியா.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவல்லிக்கேணி எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில் மினி ஸ்டேடியம் கட்டும் பணியையும், கோபாலபுரத்தில் கட்டப்பட்டு வரும் குத்துச்சண்டை மைதானத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்க மாட்டோம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
கல்வியில் மட்டுமல்ல ஏற்கனவே ஒன்றிய அரசின் பட்ஜெட்டிலும் தமிழ் நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.
ஒரு திட்டத்தை கூட ஒதுக்கவில்லை. ஆனால் வாய்க்கூசாமல் வரி கொடுத்துவிட்டு ஒவ்வொரு மாநிலமும் திருப்பி கேட்பது அநியாயம் என்று சொல்லி இருக்கிறார். இது கண்டிக் கத்தக்கது. முதலமைச்சர் இதை கண்டித்துள்ளார்.
எப்போதுமே தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான். பேரறிஞர் அண்ணா சொன்னது. நாங்கள் எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை குறுக்கு வழியில் திணிக்க முயன்றாலும், அதை எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசு அனுமதிக்காது. தமிழ்நாட்டு மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள்.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக கூறினாலும் நாங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒன்றியம்தான் இந்தியா. ஆகவே ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. புரிதல் இருக்கிறது.
இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு. இங்கு இரு மொழி கொள்கைதான். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்து தமிழில் பல விஞ்ஞானிகள், டாக்டர்கள் உலக சாதனை படைத்து கொண்டு இருக்கிறார்கள். எனவே அேதாடு இதை ஒப்பிட்டு கூறக் கூடாது. நிச்சயமாக மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
எனவே தமிழகத்திற்கு இருமொழி கொள்கையை பின்பற்றுவதற்கு தேவை யான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது
- இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது
ஈக்வடாரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தவளை இனதிற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தி டெலிகிராஃப் இதழ் கூற்றுப்படி, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தவளைக்கு 'ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம், ஈக்வடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்வடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஏழு புதிய இனங்களை கண்டறிந்துள்ளனர். அதில் ஒன்றுக்கு தான் தற்போது நடிகரின் பெயர் சூட்டப்பட்டது
புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் காணப்படுகின்றன.
இவை கருமையான புள்ளிகளால் மூடப்பட்ட பழுப்பு நிற தோல் கொண்டவை. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை உள்ளவை . இந்தத் தவளை கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கார் நாயகனும் ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக வளம் வருபவருமான லியோனார்டோ டிகாப்ரியோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபாடு கொண்டவர்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1998 ஆம் ஆண்டு 'லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை'யை நிறுவினார்.
ஈக்வடாரின் யசுனி தேசிய பூங்காவில் எண்ணெய் தோண்டும் திட்டத்தை நிறுத்த இவரது அறக்கட்டளை குரல் கொடுத்தது. எனவே அவரது முயற்சிகளை கவுரவிக்கும் வகையில் தவளைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டில், இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
'ஆங்குகுலஸ் டிகாப்ரியோய்' என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பாம்பு இனம் மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்திற்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டது.
- துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கினார்.
- வெங்கி அட்லூரி நடிகர் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் வெங்கி அட்லூரி. சில மாதங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் மேல் வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.
இதை தொடர்ந்து வெங்கி அட்லூரி நடிகர் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார். தனுஷ் நடிப்பில் ஹானஸ்ட் ராஜ் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் தயாரிக்க படப்பிடிப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளது. இப்படம் ஒரு ஆட்டோ மொபைல் இஞ்சினை கண்டுபிடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சூர்யா தற்பொழுது ஆர்.ஜே பாலாஜி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார் . திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்றது.
- டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்தது.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முதலமைச்சர் ஆக பதவியேற்க போவது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதலமைச்சர் வருகிற வியாழக்கிழமை (பிப்ரவரி 20) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 20-ம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. முதல்வரோடு எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மேலும், டெல்லியின் அடுத்த முதல்வர் பதவியேற்பு குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
- இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டி மிகப்பெரிய பரபரப்பாக இருக்காது.
- சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும்.
புதுடெல்லி:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்றும், இந்த ஆட்டம் ஒரு தலைபட்சமாக இருக்கும் என்றும் இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தில் இந்தியா மிகவும் பலமான அணியாக உள்ளது. பாகிஸ்தான் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி தழுவி 3 நாடுகள் போட்டி தொடரை இழந்தது.
மேலும் புள்ளி விவரங்களை பார்க்கும்போது அதில் தெளிவாக இந்திய அணியே மேலோங்கி இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பையில் மோதிய பழைய போட்டிகளை வைத்து கூறுகிறோம் என்பது உண்மை தான். கிரிக்கெட்டை பொறுத்தவரையில் எதிர் காலத்தில் குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் வெளிப்படையாகவே இந்திய அணி பாகிஸ்தானை விட பெரிய அணியாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோரை தவிர வேறு யாரும் இல்லை. கேப்டன் பதவியில் ரிஸ்வான் சிறப்பாக செயல்படுகிறார். மேலும் அவருடைய எண்ணங்களும் நன்றாக இருக்கிறது. ஆனால் சக வீரர்களிடம் இருந்து அவருக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. முன்னாள் வீரர்களிடம் கேட்டாலே இந்திய அணி கொஞ்சம் மேலே இருப்பதை கூறுவார்கள்.
எனவே எல்லா வகையிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும். இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட போட்டியாகும். ஒரு தலைப்பட்சமான இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும். வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர்.
இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அதிகமான விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த போட்டி மிகப்பெரிய பரபரப்பாக இருக்காது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
- தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது.
- முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள் எக்ஸ் தள பதிவில்,
சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டுமொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.
தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தி.மு.க. அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? என்று தெரிவித்துள்ளார்.
- நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பொது தரிசன வரிசை வளாகம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
- முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மெகா திட்ட வளாக பணிகள் நடை பெற்று வருகிறது.
இதில் தனியார் பங்களிப்பான எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பிலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பிலான மெகா திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட பணிகளான யாத்திரிகர் நிவாஸ் பயணிகள் தங்கும் விடுதி பணிகள் முடிவுற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து 2-ம் கட்ட பணி நிறைவு பெற்று ரூ.20½ கோடி மதிப்பீட்டில் பணிகள் நிறைவு பெற்ற நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பொது தரிசன வரிசை வளாகம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், தாசில்தார் பாலசுந்தரம், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி துணை சேர்மன் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராம ஜெயம், பில்லா ஜெகன், தி.மு.க. நகர செயலாளர் வாள் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அப்புக்குட்டி படத்தில் நடித்துள்ளார்.
- "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" படத்தின் First Look போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் சிவபாலன் என்கிற அப்புகுட்டி. அதைத்தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தற்பொழுது படத்தில் நடித்துள்ளார்.
ராஜூ சந்திரா இயக்கத்தில் நடித்துள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் First Look போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
ராஜு சந்திரா எழுதி இயக்கி, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரித்துள்ளனர்.
மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்ரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார். படம் விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டவுன்லோட் செய்ய முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு எதிர்ப்புக்குரல் வலுத்தது. மேலும், பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பதில் அளித்த சீன ஏ.ஐ. நிறுவனமான டீப்சீக், "உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவில் தான் பரிசீலனை செய்யப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது," என்று தரவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் தனியுரிமைச் சட்டங்களுடன் இணைந்து செயலியைக் கொண்டுவருவது "தவிர்க்க முடியாமல் கணிசமான அளவு நேரம் எடுக்கும்" என்று மதிப்பிட்டுள்ளது, சியோல் தரவு பாதுகாப்பு நிறுவனம் மேலும் கூறியது.
டவுன்லோட் செய்ய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டீப்சீக் செயலி தென் கொரியாவின் உள்ளூர் ஆப் ஸ்டோர்களில் கிடைக்காமல் போனது. எனினும், செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
- கத்தியால் குத்திவிட்டு இருவரும் சாவகாசமாக சாலையை கடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்து நின்றனர்.
- இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராகேஷ், உறவினர் லக்ஷ்மணன் உடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட பதறவைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்று பிப்ரவரி பிப்ரவரி 16 (ஞாயிற்றுக்கிழமை) ஐதராபாத்தின் மேட்சல் (medchal) பகுதியில் உள்ள பரபரப்பான NH 44 தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. அவ்வழியாக பல வானங்கள் அவ்வேளையில் சென்றும் யாரும் கொலையை தடுக்க முன்வரவில்லை. கத்தியால் குத்திவிட்டு இருவரும் கத்தியுடன் சாவகாசமாக சாலையை கடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்து நின்றனர்.
போலீசார் கூற்றுப்படி உயிரிழந்தவர் 25 வயதான உமேஷ். கத்தியால் குத்தியவர்கள் உமேஷின் சொந்த தம்பி ராகேஷ், மற்றும் உறவினர் லக்ஷ்மணன் என்று தெரியவந்துள்ளது. உமேஷ் குடித்துவிட்டு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சண்டை பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தம்பி ராகேஷ் அண்ணனிடம் கேட்டுள்ளார். இதனால் சம்பவம் நடந்த நேற்று, உமேஷ் குடித்துவிட்டு தம்பியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். கட்டை ஒன்றை எடுத்து தம்பியை உமேஷ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராகேஷ், உறவினர் லக்ஷ்மணன் உடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றார்.
அச்சமடைந்த உமேஷ் அவர்களிடம் இருந்து தப்பி வீட்டை விட்டு ஓடியுள்ளார். உமேஷை துரத்திச் சென்ற இருவரும் வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் வைத்து அவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய தம்பியையும் உறவினரையும் தேடி வருகின்றனர்.
- அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சர்களில் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் மூத்தவரான அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் துரைமுருகனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
- தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்காக முயற்சிகளையும் ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.
- தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்க குரல் எழுப்புவோம்.
சென்னை:
`சமக்ரசிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,158 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் தாமதம் செய்கிறது.
இதுதொடர்பாக வாரணாசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், "தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை இதுவரை ஏற்காமல் உள்ளனர். மும்மொழி கொள்கையை ஏற்காத வரை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க இயலாது" என்று கூறினார்.
மத்திய மந்திரியின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மொழி கொள்கை விசயத்தில் மத்திய மந்திரி திமிராக பேசினால் தமிழர்கள் தனி குணத்தை காட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி தராமல் பாரபட்சம் காட்டுவதாக அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வி வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய கல்வி மந்திரி பேசி இருப்பது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
'சமக்ரசிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு நிதி பெற சட்ட நடவடிக் கைகளில் ஈடுபடலாமா? அல்லது அரசியல் ரீதியான போராட்டத்தை மேற்கொள்ளலாமா? என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் அடிப்படையில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கான நிதியை தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்.
பதவிக்காலம் முடிந்து போன கவர்னரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யு.ஜி.சி. மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட-தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.
தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது.
அது, அரசியல் ரீதியாகப் பா.ஜ.க.,வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.
வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்! எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்!
அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.
தமிழ்நாட்டிடம் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்க குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என் பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம்! உரக்கக் குரல் எழுப்புவோம்!! உரிமைகளை மீட்போம்!!
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.






