என் மலர்tooltip icon

    செய்திகள்

    • தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என காங்கிரசில் யார் கூறியது?

    சென்னையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எம்.பி. ஜோதிமணியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    * தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கருத்துகள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

    * உட்கட்சி விவகாரங்களை நிர்வாகிகள் பொதுவெளியில் பேசக்கூடாது.

    * கட்சியின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே நிர்வாகிகள் நடக்க வேண்டும்.

    * தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தேலைமை பேச்சு நடத்தி வருகிறது.

    * தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளது.

    * த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது என்பது வதந்தி.

    * தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என காங்கிரசில் யார் கூறியது?

    * தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே குழு அமைக்கப்பட்டுள்ளது.

    * முதலமைச்சரை ஒரு மாதத்திற்கு முன்னரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

    * கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

    * கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
    • ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப் பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியுள்ளது.

    இது தொடர்பாக பேசிய BCCI செயலாளர் தேவஜித் சைகியா, " சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு கேகேஆர் அணிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அதை அனுமதிக்கும்" என்று தெரிவித்தார்.

    முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.

    • சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும்.
    • கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி என்றாலே மதுபானத்துக்கு பெயர் பெற்றதாகும். இங்கு பலவிதமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் புதுச்சேரிக்கு வந்து மதுகுடிப்பது வழக்கம். சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும். வார இறுதி நாட்களில் அது சற்று உயரும்.

    இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த ஒருவாரமாக புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் அமோகமாக நடந்தது.

    மது விற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகரித்துள்ளது.

    • மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீரானது.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று காலை முதல் மாலை வரையில் புலியருவி தவிர்த்து மற்ற அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் மழை குறைந்ததால் இன்று காலை முதல் மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீரானது.

    இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
    • அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான தேதி அட்டவணையை அறிவித்தார்.

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் மூர்த்தி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் பங்கேற்றனர்.

    அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான தேதி அட்டவணையை அறிவித்தார்.

    மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 17-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிரியர் போராட்டம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
    • எது எப்படி இருந்தாலும் அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள்.

    சென்னை:

    சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலந்து கொண்டார்.

    அப்போது அவரிடம் நிருபர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விகளை சரமாரி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    ஆசிரியர் போராட்டம் 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. நான் அவர்களிடம் பேசி வருகிறேன். திருச்சியில் முதலமைச்சர் இதுபற்றி என்னிடம் கேட்டார். தேர்தல் வாக்குறுதியை கேட்கிறார்கள் என்றேன்.

    ஓய்வூதியம் சார்ந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் இடைநிலை ஆசிரியர்கள் சார்ந்த விவாதங்களை நிதித்துறை எங்களிடம் கேட்டுள்ளது. அதனை நாங்கள் தெளிவுபடுத்த இருக்கிறோம். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சம்பள கமிஷன்போது ஏற்பட்டது. நிதித்துறை அமைச்சர், செயலாளரிடம் பேசி நல்ல முடிவை எடுப்போம்.

    ஆசிரியர் போராட்டம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. கட்டாயம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவோம். இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்ட இருக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.

    அவர்களின் உணர்வுகளை அந்த துறையின் அமைச்சர் என்ற அடிப்படையில் புரிந்து கொள்கிறேன். நல்ல முடிவை ஏற்படுத்தும் என்பது தான் ஆசை. கண்டிப்பாக பொறுமையாக இருந்தால் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    ஆசிரியர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறார்கள். நாங்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.

    ஆசிரியர்களின் போராட்டம் உணர்வின் வெளிப்பாடு. அதனை ஆர்ப்பாட்டமாக, போராட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. படித்தவர்கள், எந்த எல்லை வரை போராட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக அவர்களை பார்க்கிறேன். எது எப்படி இருந்தாலும் அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள். கண்டிப்பாக கைவிட மாட்டோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து வருகிறது என்பதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
    • கட்டமைப்பு வசதிகள் வேகமாக ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ வார்டில் திசம்பர் 31-ஆம் தேதி மது விருந்துடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது என்றும், அந்த நேரத்தில் நோயர்களுக்கு மருத்துவம் அளிக்க மருத்துவர்களோ, பிற பணியாளர்களோ இல்லை என்றும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. போதையை ஒழிப்பதற்கான அரசு மருத்துவமனைகளை போதையை வளர்க்கும் குடிப்பகங்களாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

    திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து வருகிறது என்பதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தமிழ்நாட்டில் கஞ்சா போதை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று மருத்துவத்துறை அமைச்சர் கூறுகிறார்; ஆனால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே கஞ்சாச் செடி வளர்ந்திருப்பது கண்டறிந்து அகற்றப்படுகிறது. கட்டமைப்பு வசதிகள் வேகமாக ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்; ஆனால், நாமக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் அதில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் ரோகித் உயிரிழந்திருக்கிறான். திமுக ஆட்சியில் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கான ஏராளமான எடுத்துக்காட்டுகளில் இவை சிலவாகும்.

    மருத்துவமனையின் பிரசவ வார்டில் வைத்து மது அருந்தியவர்கள் யார்? அரசு மருத்துவமனையில் ஓராண்டுக்கும் மேலாக கண்காணிப்புக் கேமராக்கள் செயல்படாமல் பழுதடைந்து கிடந்தது ஏன்? அந்த நேரத்தில் மருத்துவர்கள் அங்கு இல்லாதது ஏன்? என்பதற்கான விடை அரசிடம் இல்லை. ஆனால், அங்கு பணியிலிருந்த 4 மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பதன் மூலம் அனைத்துத் தவறுகளையும் அவர்கள் மீது சுமத்தி விட்டு தப்பிக்க திமுக அரசு முயல்கிறது. இத்தகைய சீர்கேடுகளுக்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் அனைத்து தெருக்களிலும் மதுக்கடைகள் நிறைந்திருப்பதும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தடையின்றி கிடைப்பதும் தான் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் ஆகும். இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு திமுகவை ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகற்றுவது தான். அது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும். மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் சில வாரங்களில் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார். 

    • வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை KKR அணி ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.
    • ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச வீரர்களை புறக்கணிக்க வேண்டும்.

    பாலிவுட் நடிகர் ஷாருக்கானை துரோகி என த்தவ் சிவசேனா கட்சி கடுமையாகச் சாட்டியுள்ளது.

    சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷாருக்கானுக்குச் சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.

    இதுகுறித்து பேசிய உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே, "வங்கதேச வீரரை கொல்கத்தா அணியில் சேர்ப்பது நாட்டின் பாதுகாப்பு விவகராம் தொடர்புடையது. ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச வீரர்களை புறக்கணிக்க வேண்டும். ஷாருக்கான் வங்கதேச வீரரை விளையாட வைத்தால் அதனால் அவருக்கு கிடைக்கும் பணம் பயங்கரவாதத்தை வளர்க்கவும், நமது நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டவும் பயன்படுத்தப்படும். எனவே நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். துரோகிகளை நாட்டுக்குள் விடமாட்டோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியை கேட்போம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சங்கீத் சோம், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை துரோகி என்று கடுமையாகச் சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலத்தில் கால் பதிந்ததை நயினார் பார்த்தபோது சிறுத்தை கால் தடம் போல் இருந்ததாக கூறப்படுகின்றது.
    • வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் பகுதி மலைப்பகுதியாக இருந்து வருகிறது. இங்கு பெரும்பாலும் வாழை , முந்திரி மரங்கள், வேர்க்கடலை உள்ளிட்ட ஊடுபயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது.

    இங்கு அதே பகுதியை சேர்ந்த நயினார் வேர்க்கடலை பயிரிட்டு இருந்தார். தற்போது வேர்க்கடலை முளைத்து வருவதால் அதிகளவில் பறவைகள் பயிர்களை நாசம் செய்து செல்வதால் காலை நேரங்களில் நயினார் தனது நிலத்திற்கு சென்று பட்டாசு வெடித்து விரட்டி விடுவது வழக்கம்.

    அதே போன்று இன்று காலை வழக்கம் போல் நயினார் பறவைகளை விரட்ட பட்டாசு வெடிக்க சென்றபோது பெரிய அளவிலான உருவம் ஒன்று திடீரென்று வேகமாக சென்றது. நிலத்தில் கால் பதிந்ததை நயினார் பார்த்தபோது சிறுத்தை கால் தடம் போல் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் நயினார் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஊர் பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள பொதுமக்களிடம் இந்த தகவலை கூறினார்.

    இது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் வன சரக அலுவலர் கேசவன் தலைமையில் வனவர் திலகராஜ், வன ஆர்வலர் செல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலப்பகுதியில் பதிந்துள்ள கால் தடம் சிறுத்தையா? அல்லது வேறு ஏதேனும் மிருகமா? என சோதனை மேற்கொண்டனர்.

    இந்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பீதி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. 

    • சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெற்றது.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையடுத்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா நேற்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபையில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க கீழ ரத வீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீற்றிருக்க தேர் நிலையான கீழ ரத வீதியில் இருந்து சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி கொண்டு செல்லப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.

    நாளை (4-ந் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், நாளைமறுநாள் (5-ந் தேதி) ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    • சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • ரஜினிகாந்த் படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். மூவரும் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தொடக்கம் குறித்து ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்தது.

    ஆனால் சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். எதிர்பாராத காரணங்களால் விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே அண்மையில் செய்தியார்களிடம் பேசிய கமல் ஹாசன், 'அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்' என்றார்.

    இந்நிலையில், ரஜினியின் 173 வது படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பதாக ராஜ் கமல் பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காவல் துறையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொறுப்பும் கடமையும் அதிகம்.
    • குறிப்பாக பெண்கள் புகார் அளிக்க வரும்போது மரியாதையுடன் நடத்தி புகாரை பெற வேண்டும்.

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வான 621 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார். 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், தமிழ்நாடு அமைதி பூங்கா என்று இந்திய அளவில் கூறுகின்றனர்.

    * போலீஸ் இருக்கிறார்கள் அவர்கள் நம்மை பார்த்துக்கொள்வார்கள் என நம்பித்தான் மக்கள் நடமாடுகிறார்கள்.

    * அதிகாரத்தை மக்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும்.

    * ஒரு காவலர் செய்யும் நல்ல செயல் அந்த துறைக்கே பெருமையை ஏற்படுத்தி தரும்.

    * வீரத்தின் விளை நிலம் என்பது அன்புதான்.

    * காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.

    * புதிதாக காவல்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.

    * காவல் துறையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொறுப்பும் கடமையும் அதிகம்.

    * காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை வெறும் வார்த்தைகளில் இல்லாமல் அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும்.

    * குற்றம் செய்பவர்களிடம் இரும்புக்கரத்தையும் புகார் அளிக்க வருபவர்களிடம் அன்புக்கரத்தையும் காட்டுங்கள்.

    * பெண்கள், குழந்தைகள் குறித்த புகார்களில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

    * குறிப்பாக பெண்கள் புகார் அளிக்க வரும்போது மரியாதையுடன் நடத்தி புகாரை பெற வேண்டும்.

    * பணியில் இருக்கும் பகுதியில் சிறு குற்றம் கூட நடந்துவிடக்கூடாது என ஒவ்வொரு போலீசும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    * ஒரு காவலர் தவறு செய்தாலும் அது காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி விடும்.

    * போதைப்பொருள் விவகாரத்தில் சமரசமின்றி செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×