என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
- நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்து ஒரு வார கால பயணம் செல்கிறேன்.
சென்னை நீலாங்கரையில் தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் மீதும், தி.மு.க. மீதும், என் மீதும் பற்று கொண்டவர் என்.ஆர்.இளங்கோ.
* என்.ஆர்.இளங்கோ அரசு வழக்கறிஞராக பணியாற்ற வாய்ப்பு தந்தவர் கலைஞர்.
* தேர்தல் காலத்தில் வழக்கறிஞர் அணியை தயார் நிலையில் வைத்திருப்பார் என்.ஆர்.இளங்கோ.
* பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
* வாக்குத்திருட்டு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
* பீகார் போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
* நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்து ஒரு வார கால பயணம் செல்கிறேன்.
* இதுவரை நான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
* ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் நோக்கம் குறித்து நாளை தெரிவிக்கிறேன்.
* ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விளையாட்டு துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது.
- இந்தியாவை விளையாட்டுத் திறனுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள்! இந்த சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், மேஜர் தியான் சந்த் ஜிக்கு அஞ்சலி செலுத்துவோம். அவரது சிறப்பு பல தலைமுறைகளை கடந்தும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விளையாட்டு துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது.
இளம் திறமையாளர்களை வளர்க்கும் அடிமட்டத் திட்டங்கள் முதல் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை உருவாக்குவது வரை, நமது நாட்டில் ஒரு துடிப்பான விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பைக் காண்கிறோம்.
விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதற்கும், உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், இந்தியாவை விளையாட்டுத் திறனுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தனர்.
- பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் செயல் திறன் மற்றும் பிரதமராக நரேந்திர மோடியின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது ஆகஸ்டு மாத கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது.
ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் 54 ஆயிரத்து 788 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இது மோடியின் செல்வாக்கில் சிறிய சரிவு இருப்பதை காட்டினாலும், 11 ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகும் பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து செல்வாக்கு இருப்பதையும், அவருக்கு மக்கள் மத்தியில் நீடித்த அங்கீகாரத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
இதை போல கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 34.2 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் 3-வது பதவி காலத்தில் அவரது செயல் திறன் இதுவரை சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.
அதே நேரம் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடியின் செயல் திறன் சிறப்பாக இருப்பதாக 36.1 சதவீதம் பேர் கூறியிருந்தனர். இது இந்த முறை மோடியின் செயல் திறன் சற்று சரிவை காட்டுகிறது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் பிரதமர் மோடியின் செயல் திறன் சராசரி என்று 12.7 சதவீதம் பேரும், மோசம் என்று 12.6 சதவீதம் பேரும், மிகவும் மோசம் என்று 13.8 சதவீதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் 62.1 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் தற்போது ஆகஸ்டு மாத கருத்துக்கணிப்பில் இது 54.2 சதவீதமாக குறைந்துள்ளது.
- உடலை அடக்கம் செய்ய அருகருகே கல்லறை கட்ட இடத்தை முன்பதிவு செய்யும் பழக்கம் நீடித்து வருகிறது.
- கட்டப்பட்டுள்ள கல்லறை அருகே முன்பதிவு செய்யப்பட்ட பகுதி என பலகை வைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா நகர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இறப்பதற்கு முன்பாகவே இடத்தை முன்பதிவு செய்து வருகின்றனர்.
தாங்கள் இறந்த பிறகு தங்களது உடல்களை உறவினர்கள் எவ்வாறு அடக்கம் செய்வார்கள் என தெரியாது. எனவே மனைவி இறந்த பிறகு கணவரும், கணவர் இறந்த பிறகு மனைவியும் அவர்களது உடலை அடக்கம் செய்ய அருகருகே கல்லறை கட்ட இடத்தை முன்பதிவு செய்யும் பழக்கம் நீடித்து வருகிறது.
கட்டப்பட்டுள்ள கல்லறை அருகே முன்பதிவு செய்யப்பட்ட பகுதி என பலகை வைத்துள்ளனர்.
கணவன், மனைவி சிறு சிறு சண்டைகளுக்காகவே பிரிந்து செல்லும் கால நிலையில் இறந்த பிறகும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லறை கட்ட இடங்களை முன்பதிவு செய்து வருவதாக தெரிவித்தனர்.
- நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,840-க்கும், புதன்கிழமை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும், நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 131 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 31ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240
27-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,120
26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840
25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440
24-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-08-2025- ஒரு கிராம் ரூ.130
27-08-2025- ஒரு கிராம் ரூ.130
26-08-2025- ஒரு கிராம் ரூ.130
25-08-2025- ஒரு கிராம் ரூ.131
24-08-2025- ஒரு கிராம் ரூ.130
- மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பந்தலூர், கூடலூரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
பாடந்தொரை-அலவயல் பிரதான சாலை முழுவதும் நீரில் மூழ்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தண்ணீர் வடியும் வரை காத்திருந்து அதன்பின்னரே மக்கள் அவ்வழியாக சென்றனர். கர்க்கார்பாலி செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் மெதுவாக சென்றன.
கனமழைக்கு பாடந்தொரை மற்றும் அலவயல் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை வாளி மூலமாக வெளியேற்றினர். சிலர் அங்கிருந்து வெளியேறி தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
கூடலூர் பகுதியில் பெய்த கனமழைக்கு தேவாலா அருகே வாழவயல் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த சுந்தரலிங்கத்தின் மனைவி சந்திரிகா(50) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் அந்த பகுதியில் உள்ள முத்துலிங்கம் என்பவரது வீடும் மழைக்கு இடிந்து விழுந்தது.
பந்தலூர் தாலுகாவில் உப்பட்டி பொன்னானி, நெலாக்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பந்தலூர் பஜாரில் வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் கூடலூர், கோழிக்கோடு சென்ற அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்த படியே சென்றன.
ஊட்டியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடியதாக 283 பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அந்த பகுதிகளை கண்காணிக்க 43 மண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளது.
மேலும் நீலகிரியில் 3,600 முதல்நிலை பொறுப்பாளர்கள், 200 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பேரிடர் பாதிப்பு இருந்தால் வருவாய்த்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து நிவாரண முகாம்களில் தங்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
- மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது.
- திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றபோது தனது நகைகள் திருட்டு போனதாக பேராசிரியை நிகிதா திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அக்கோவிலின் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை, மானாமதுரை தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நிகிதா அளித்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு நிகிதா அளித்த புகார் மற்றும் வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் திருப்புவனம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில் போலீசில் நிகிதா ஏற்கனவே அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக சி.பி.ஐ. நேற்று புதிய வழக்குப்பதிவு செய்தது. அந்த புகாரில் என்னென்ன உள்ளது என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
கடந்த ஜூன் 27-ந் தேதி காலையில் பேராசிரியை நிகிதாவும், அவருடைய தாயார் சிவகாமியும் காரில் மடப்புரம் கோவிலுக்குச் சென்றுள்ளனர். கோவில் காவல் பணியில் இருப்பவர்களுக்கான சீருடையைப் போல தோற்றமளிக்கும் வகையில் உடை அணிந்து வந்த அஜித்குமார் அவரை அணுகி உள்ளார்.
நிகிதா தாயாரின் முதுமையை சாதகமாகப் பயன்படுத்தி, காரை நிறுத்த அஜித்குமாரே முன்வந்து சாவியை தன்னிடம் கொடுக்க வற்புறுத்தி வாங்கினார். பின்னர் கோவிலில் இருந்து வாகனத்திற்கு திரும்பிய பிறகு, தன் கைப்பை சிதைக்கப்பட்டு இருப்பதை நிகிதா பார்த்துள்ளார். சோதனை செய்தபோது, 6 பவுன் எடையுள்ள ஒரு சங்கிலி, 2½ பவுன் எடையுள்ள 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள கல் பதித்த 2 மோதிரங்கள் என மொத்தம் 9½ பவுன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து தர வேண்டும் என நிகிதா புகார் அளித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக போலீசார் அதே நாளில் அஜித்குமாரை அழைத்துச் சென்றனர். மறுநாள் இரவில் அவர் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக போலீசாரால் அறிவிக்கப்பட்டது. ஜூன் 29 அன்று மாலை 5.45 மணி முதல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த பிரேத பரிசோதனையில், அஜித்குமாரின் கால்கள், கைகள், மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 44 வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் 19 காயங்கள் ஆழமானவை. தசை வரை நீண்டு இருந்தன. பிரேத பரிசோதனைக்கு சுமார் 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பு மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் சிகிச்சை நிபுணர்களின் அறிக்கை கூறி உள்ளது. ஆனால் இறப்புக்கான சரியான காரணத்தை குறிப்பிடவில்லை. மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது. திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
நிகிதாவிடம் இருந்து உண்மையிலேயே நகை திருட்டு போனதா? மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கி கொன்றனரா? என இந்த வழக்கில் சந்தேகம் எழுப்பப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரிலேயே சி.பி.ஐ. இந்த நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது.
- கடந்த ஆண்டு ஒரு பள்ளி மாணவன் தண்ணீர் குடித்த நிலையில் அசையாமல் நின்ற காட்சி வீடியோவில் பரவியது.
தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது பண்பாடு.
தாய்லாந்தில் காலை 8 மணிக்கும், மாலை 6 மணிக்கும் தேசிய கீதம் இசைக்கப்படும். அதன்படி ஒரு பள்ளியில் காலை 8 மணிக்கு தேசியகீதம் இசைக்கப்பட்டபோது பள்ளியின் கீழ்தளத்தில் நடந்து கொண்டிருந்த மாணவன், நடந்தபடியே சிலைபோல அசையாமல் நின்றான்.
படத்தில் பார்க்கும்போது அது ஓவியம்போல தெரிந்தாலும், வீடியோவாக காணும்போதுதான் மேல் தளத்தில் மற்ற மாணவர்கள் நிற்பதும், கீழ் தளத்தில் அந்த மாணவர் தனியே நடக்கும் சிலையாக தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவதும் வினோத காட்சியாக பதிவாகி உள்ளதை உணர முடியும். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது.
கடந்த ஆண்டு ஒரு பள்ளி மாணவன் தண்ணீர் குடித்த நிலையில் அசையாமல் நின்ற காட்சி வீடியோவில் பரவியது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
- கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி:
'பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள்-2025'ன் பட்டியலை நேற்று தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12 ஆயிரத்து 770 பெண்களிடம் கருத்துக் கேட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நகரங்களின் தரவரிசை பட்டியலிடப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் சட்டக்கல்லூரி நிபுணர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு இந்த கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. அந்த கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா, பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள நகரமாக பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. அங்கு பெண்களுக்கு நல்ல மரியாதையும், நிகழ்வுகளில் சரிசமமான பங்களிப்பும் கிடைப்பதாக பெண்கள் கூறி உள்ளனர். பெண்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன, அங்கு பெண்களுக்கு நிறுவன ரீதியான மதிப்புகள், கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஆணாதிக்க முறைகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஐஸாவல், காங்டாக், இடாநகர், மும்பை ஆகியவை சிறந்த பாதுகாப்பான நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அந்த வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன.
ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கப்பட்டதில் 60 சதவீதம் பெண்கள், தங்கள் நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், 40 சதவீத பெண்கள் பாதுகாப்பை உணரவில்லை என்றும் அல்லது பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரவிலும், கல்வி வளாகத்திற்கு வெளியிலும் பாதுகாப்பு அப்படி உணர்வதில்லை என்று கூறி உள்ளனர்.
இரவில் பொது போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதாக பலரும் தெரிவித்து உள்ளனர்.
பணியிடங்களில் பாதுகாப்பாக இருப்பதாக 91 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். 50 சதவீதம் பேர் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிரான விதிகள் இருக்கிறதா என தெரியவில்லை என்று கூறி உள்ளனர்.
பாதுகாப்பு புகார்களில் அதிகாரிகள் திறம்பட செயல்படுவார்கள் என்று நான்கில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே நம்புவதாக தெரிவித்து உள்ளனர். தற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் ஓரளவு போதுமானவை என்று 69 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு முயற்சிகளில் குறைபாடு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
பொது இடங்களில் துன்புறுத்தலை அனுபவித்து உள்ளதாக 7 சதவீதம் பெண்கள் கூறி உள்ளனர். அதே வேளையில் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 14 சதவீதம் பேர் பாலியல் தொல்லையை அனுபவித்து உள்ளதாக கூறி உள்ளனர். அதாவது இளம்பெண்கள் 2 மடங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களாம்.
துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக சுற்றுப்புறங்கள் இருப்பதாக 39 சதவீதம் பேரும், போக்குவரத்து இடங்கள் துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக 29 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பெண் மட்டுமே புகார் அளிப்பதாகவும், 2 பங்கு துன்புறுத்தல்கள் பலவித காரணங்களால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.
- நடிகர் விஷால் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- விஷாலுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், 'நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் தனக்கு திருமணம் நடக்கும்' என அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து, இந்த நடிகை, அந்த நடிகை என பல நடிகைகளுடன் விஷால் காதல் என கிசுகிசுக்கள் வந்தன.
இதற்கிடையே, பல்வேறு விஷயங்கள் காரணமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டுமானப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் முரட்டு 'சிங்கிளாக' வலம் வந்த விஷால், சமீபத்தில் தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக அறிவித்தார். முன்னணி கதாநாயகியான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், விரைவில் தம்பதியாக நாங்கள் வலம் வருவோம். ஆகஸ்டு 29-ந் தேதி எனது பிறந்தநாள் அன்று திருமணத்தையும் முடிவு செய்துள்ளோம். அனைவரும் வந்து எங்களை வாழ்த்த வேண்டும் என்று கூறியிருந்தார். விஷாலின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவருக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, நடிகர் விஷால் இன்று 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, பிறந்த நாள் அன்று திருமணம் என்று விஷால் அறிவித்தது குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
வழக்கம்போல் இந்த முறையும் விஷால் ஏமாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.
- மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.
- மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சந்திர கிரகணம் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.57 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைகிறது. எனவே அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் அன்று மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு ஆகியவை பகல் 11.41 மணிக்கு நடைபெறும். அன்று மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.
எனவே மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. அடுத்த நாள் (8-ந்தேதி) வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






