என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
    • இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

    சென்னை:

    உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது.

    இந்தநிலையில் அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.

    இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

    07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920

    04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-09-2025- ஒரு கிராம் ரூ.140

    07-09-2025- ஒரு கிராம் ரூ.138

    06-09-2025- ஒரு கிராம் ரூ.138

    05-09-2025- ஒரு கிராம் ரூ.136

    04-09-2025- ஒரு கிராம் ரூ.137

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • கார்களின் மாடல்களுக்கு ஏற்ப விலை குறைக்கப்படுகிறது.
    • பண்டிகை காலம் நெருங்குவதால் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

    ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களில் ஏராளமான பொருட்களுக்கு வரிகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கார்களும் அடங்கும். வரி குறைப்பு 22-ந்தேதி அமலுக்கு வருகிறது.

    இதற்கிடையே, வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக, ஜெர்மனி சொகுசு காரான ஆடி கார்கள் விலை குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    கார்களின் மாடல்களுக்கு ஏற்ப ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம்வரை விலை குறைக்கப்படுவதாக கூறியுள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால், விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-24 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவிதியை இரவு 8.54 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.07 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உழைப்பு

    ரிஷபம்-மகிழ்ச்சி

    மிதுனம்-சாந்தம்

    கடகம்-களிப்பு

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-தேர்ச்சி

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- கடமை

    மகரம்-முயற்சி

    கும்பம்-ஓய்வு

    மீனம்-பரிவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். இனிய நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினர்களுடன் குதூகலப் பயணம் உண்டு. திட்டமிட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.

    ரிஷபம்

    நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. வீடு மாற்றம், வரலாம். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிகப்பொறுப்புகளை வழங்குவர்.

    மிதுனம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்டநாளாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.

    கடகம்

    வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    சிம்மம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வரலாம்.

    கன்னி

    வெற்றிச்செய்திகள் வீடு வந்துசேரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

    துலாம்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். வரன்கள் வாயில் தேடி வரும்.

    விருச்சிகம்

    யோகமான நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றிதரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

    தனுசு

    வியக்கும் தகவல் வீடு வந்துசேரும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். அலுவலகப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    மகரம்

    பிரபலஸ்தர்களைச் சந்தித்து மகிழும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்க முன்வருவீர்கள். அஞ்சல் வழியில் அனுகூலத் தகவல் உண்டு.

    கும்பம்

    முன்னேற்றம் கூட முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

    மீனம்

    நாசூக்காகப் பேசி நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும். பணவரவு உண்டு.

    • இந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் பஸ், ரெயில் மற்றும் கார்கள் மூலமாக பயணம் மேற்கொள்கின்றனர். ரெயில்களை பொறுத்தவரையில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவா்கள் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், தீபாவளி முன்பதிவின்போது உடனடியாக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும். 300-க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருப்பு பட்டியலுக்கு சென்றுவிடுவார்கள்.

    இதுபோன்று காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னையில் இருந்து கடந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த சிறப்பு ரெயில்களும் போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, பயணிகளின் வசதிக்காக பண்டிகை காலங்களில் கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

    அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு முழுமையாக முடிந்து காத்திருப்பு பட்டியலில் பலரும் உள்ளனர். இதற்கிடையே, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைகளின்போது பயணிகளின் வசதிக்காக இந்தியா முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆனால், தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, திருவனந்தபுரம், எர்ணாகுளத்திற்கும், எழும்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், செங்கல்பட்டில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வே வாரியத்திடம் தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைந்த அளவிலான சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து, ரெயில் பயணிகள் கூறியபோது, 'தீபாவளி பண்டிகை ரெயிலுக்கான முன்பதிவின்போது வழக்கமான ரெயில்களுக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுதீர்ந்துவிடுகிறது. இதனால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். ஆனால் பண்டிகை காலங்களில் போதுமான அளவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதில்லை. கூடுதல் ரெயில்கள் இயக்க தொடர்ந்து கோரிக்கை எழுப்புகிறோம். ஆனால் கூடுதல் ரெயில்கள் இயக்குவதில்லை. இந்த ஆண்டும் வெறும் 11 ரெயில்கள் இயக்க பரிந்துரை செய்துள்ளனர். இது எந்தவிதத்தில் நியாயம். சொந்த ஊர்களுக்கு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காததால் மிகவும் அவதியுடன் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது' என்றார்கள்.

    இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'தெற்கு ரெயில்வேயில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க போதுமான ரெயில் பெட்டிகள் இல்லை. எனினும் பயணிகள் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிகபட்சமாக 24 பெட்டிகள் வரை இணைத்து இயக்க முடியும்.

    எனவே, கொல்லம், செங்கோட்டை, நாகர்கோவில், நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படும். இதுதவிர, 2 பயணிகள் ரெயிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூடுதலாக எத்தனை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்பது குறித்து முழுமையாக தெரியவரும்' என்றார்கள்.

    • பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கள், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார்.
    • லண்டன், கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார். தனது பயணத்தின் ஒரு அங்கமாக, லண்டன், கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் (எஸ்.ஓ.ஏ.எஸ்.) உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இந்தநிலையில், அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளரும், எம்.பி.யுமான ஐ.எஸ்.இன்பதுரை, மு.க.ஸ்டாலினின் சித்தாந்த தடுமாற்றம் என்ற தலைப்பில், நெற்றியில் விபூதி வைக்கப்பட்ட திருவள்ளுவரை மு.க.ஸ்டாலின் கும்பிடுவது போன்ற படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

     

    இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''விபூதியுடன் திருவள்ளுவர் இருக்கும் படம் 'எடிட்' செய்த படம்'' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நெற்றியில் விபூதி இல்லாமல் உள்ள திருவள்ளுவர் படத்தையும், நெற்றியில் விபூதி இருப்பது போன்ற 'எடிட்' செய்யப்பட்டதாக கூறப்படும் திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை, ஸ்ரீ நகர் காலனி, எல்டிஜி சாலை.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    பாரிவாக்கம்: அன்னைக்காட்டுச்சேரி, அமுதூர்மேடு, திருமணம், காவல்சேரி, வயலாநல்லூர், சோரஞ்சேரி, ஆயில்ச்சேரி, சித்துகாடு.

    கோட்டூர்புரம்: ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை, ஸ்ரீ நகர் காலனி, எல்டிஜி சாலை, வெங்கடாபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, சித்ரா நகர், ரிவர் வியூ ரோடு, மற்றும் ஹவுசிங் போர்டு.

    • வரும் 13-ந் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவிப்பு
    • திருச்சியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் வரும் 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.

    இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அதனையும் காவல்துறை நிராகரித்தது. 2-வது முறையாக அனுமதி மறுக்கப்பட்டதால் மாற்று இடம் குறித்து தவெகவினர் ஆலோசனை நடத்தினர்.

    அந்த வகையில் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    3-வது முறையும் காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை அணுகவும் தவெகவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர்ஜிவால் ஓய்வு பெற்றார்.
    • பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா தாக்கல் செய்துள்ள மனுவில், 'டி.ஜி.பி. நியமனம், காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக பிரகாஷ் சிங் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 3-ந் தேதி கூறிய தீர்ப்பில், டி.ஜி.பி. தேர்வுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன் அந்தந்த மாநில அரசுகள் அனுப்பி வைக்க வேண்டும்.

    யாரையும் தற்காலிக டி.ஜி.பி.யாக நியமிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. நியமனத்தில் ஒற்றைச் சாளர முறை ஏற்படுத்தப்பட்டது. தமிழக டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தபோது, இந்த மனு சற்று முன்னதாக தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்து தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மேலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 'டி.ஜி.பி. நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்' என்று வலியுறுத்தியது. டி.ஜி.பி. நியமன நடைமுறைகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததன் அடிப்படையில் மனு முடித்துவைக்கப்பட்டது.

    தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர்ஜிவால் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு டி.ஜி.பி. தேர்வுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பிவைக்கவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே மீறுவதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்தும் கடமையை செய்ய தமிழ்நாடு அரசு தவறியுள்ளதால், தலைமைச் செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஹென்றி திபேன் சார்பில் மூத்த வக்கீல் நித்யா ராமகிருஷ்ணன் ஆஜராகி, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தமிழ்நாடு அரசு கடைபிடிக்கவில்லை என வாதிட்டார்.

    அப்போது தலைமை நீதிபதி, 'தமிழ்நாட்டில் ஏன் தற்காலிக டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும்' என்று கேட்டார்.

    இதற்கு தமிழ்நாடு அரசின் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியத்துடன் ஆஜரான மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி, 'டி.ஜி.பி. பரிந்துரை பெயர் பட்டியலை சேர்க்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் (பிரமோத் குமார்) மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை நாடினார். அவரது மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நிராகரித்தது. இதைத்தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 22-ந் தேதி தள்ளுபடி செய்தது என்று பதில் அளித்தார்.

    தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'அடுத்த டி.ஜி.பி. நியமனத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி. விரைந்து பரிசீலிக்க வேண்டும்.

    யு.பி.எஸ்.சி. அனுப்பும் பரிந்துரை பட்டியலின் அடிப்படையில் நிரந்தர டி.ஜி.பி.யைநியமிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்தது.

    • தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்பு 4 முறை பங்கேற்றுள்ள ஹாங்காங் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை.

    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

    இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.

    2016-ம் ஆண்டில் இருந்து ஆசிய கோப்பை போட்டிக்கான வடிவம், உலக கோப்பை அடிப்படையில் மாற்றப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வருவதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது 20 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. அடுத்த சீசனில் 50 ஓவர் அடிப்படையில் நடைபெறும். இதுவரை 50 ஓவர் வடிவில் 14 முறையும், 20 ஓவர் வடிவில் 2 முறையும் ஆசிய கோப்பை போட்டி நடந்துள்ளது. இதில் இந்தியா 8 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன. இந்த தடவையும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கணிப்புபடி எல்லாம் சரியாக அமைந்தால் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த ஆசிய கோப்பை போட்டியில் 3 முறை மோத வேண்டி இருக்கும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை நாளை எதிர்கொள்கிறது.

    முதல் நாளான இன்றிரவு 8 மணிக்கு அபுதாபியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ரஷித்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, யாசிம் முர்தசா தலைமையிலான ஹாங்காங்கை சந்திக்கிறது. சுழல்ஜாலத்தால் வலுவாக காணப்படும் ஆப்கானிஸ்தான், நேற்று முன்தினம் முத்தரப்பு தொடரில் அடைந்த தோல்வியை மறந்து விட்டு புத்துணர்ச்சியுடன் தொடங்கும் ஆவலில் உள்ளது.

    அதே சமயம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்பு 4 முறை பங்கேற்றுள்ள ஹாங்காங் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை. விளையாடியுள்ள 11 ஆட்டங்களிலும் தோற்றுள்ள ஹாங்காங், அந்த மோசமான வரலாற்றை மாற்றிக்காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆப்கானிஸ்தான்: ரஷித்கான் (கேப்டன்), ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், டார்விஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், கரிம் ஜனத், முகமது நபி, முஜீப் ரகுமான் அல்லது கசன்பார், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி.

    ஹாங்காங்: யாசிம் முர்தசா (கேப்டன்), அன்ஷூமன் ராத், பாபர் ஹயாத், ஜீஷன் அலி, நிஜாகத் கான், மேத்யூ ஜோட்ஜீ, இசன் கான், அஜாஸ் கான், அதீக் இக்பால், நஸ்ருல்லா ராணா, ஆயுஷ் சுக்லா.

    இந்த போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×