என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu DGP"

    • தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர்ஜிவால் ஓய்வு பெற்றார்.
    • பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா தாக்கல் செய்துள்ள மனுவில், 'டி.ஜி.பி. நியமனம், காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக பிரகாஷ் சிங் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 3-ந் தேதி கூறிய தீர்ப்பில், டி.ஜி.பி. தேர்வுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன் அந்தந்த மாநில அரசுகள் அனுப்பி வைக்க வேண்டும்.

    யாரையும் தற்காலிக டி.ஜி.பி.யாக நியமிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. நியமனத்தில் ஒற்றைச் சாளர முறை ஏற்படுத்தப்பட்டது. தமிழக டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தபோது, இந்த மனு சற்று முன்னதாக தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்து தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மேலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 'டி.ஜி.பி. நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்' என்று வலியுறுத்தியது. டி.ஜி.பி. நியமன நடைமுறைகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததன் அடிப்படையில் மனு முடித்துவைக்கப்பட்டது.

    தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர்ஜிவால் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு டி.ஜி.பி. தேர்வுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பிவைக்கவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே மீறுவதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்தும் கடமையை செய்ய தமிழ்நாடு அரசு தவறியுள்ளதால், தலைமைச் செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஹென்றி திபேன் சார்பில் மூத்த வக்கீல் நித்யா ராமகிருஷ்ணன் ஆஜராகி, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தமிழ்நாடு அரசு கடைபிடிக்கவில்லை என வாதிட்டார்.

    அப்போது தலைமை நீதிபதி, 'தமிழ்நாட்டில் ஏன் தற்காலிக டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும்' என்று கேட்டார்.

    இதற்கு தமிழ்நாடு அரசின் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியத்துடன் ஆஜரான மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி, 'டி.ஜி.பி. பரிந்துரை பெயர் பட்டியலை சேர்க்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் (பிரமோத் குமார்) மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை நாடினார். அவரது மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நிராகரித்தது. இதைத்தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 22-ந் தேதி தள்ளுபடி செய்தது என்று பதில் அளித்தார்.

    தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'அடுத்த டி.ஜி.பி. நியமனத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி. விரைந்து பரிசீலிக்க வேண்டும்.

    யு.பி.எஸ்.சி. அனுப்பும் பரிந்துரை பட்டியலின் அடிப்படையில் நிரந்தர டி.ஜி.பி.யைநியமிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்தது.

    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் மனு கொடுத்துள்ளார். #ThoothukudiShooting #Kanimozhi
    புதுடெல்லி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தமிழக உளவுத்துறையின் தோல்விக்கு உதாரணம் என்றும், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் மனு கொடுத்துள்ளார்.

    டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவருக்கு, தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக அமைதியான முறையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந்தேதி ஊர்வலம் சென்ற பொதுமக்கள் மீது, போலீசார் நடத்திய கண் மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    தூத்துக்குடி போராட்டம் குறித்து தகவலை சேகரிக்க முடியாததாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும், 13 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்தவேண்டும்.

    மே 22-ந்தேதி மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற போவதை தெரிந்து இருந்தும், மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை ஏனோ தானோ என்று போக்கில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை தீவிரமாக செயல்படுத்தவில்லை. இதுகுறித்தும் விசாரிக்கவேண்டும்.

    போலீசாரை போராட்டக்காரர்கள் கொடூரமாக தாக்கி, கொலை செய்ய முயன்றதால், போலீஸ்காரர்களின் உயிரை காப்பாற்ற வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று ஐகோர்ட்டில் தமிழக டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஆனால், இந்த கலவரத்தில் ஒரே ஒரு போலீஸ்காரர்தான் காயம் அடைந்து, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு எந்த ஒரு போலீசாரும் கொடூர காயம் அடையவில்லை. போலீசாரின் சட்டவிரோத செயலை நியாயப்படுத்தும் விதமாக டி.ஜி.பி. இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்தும் விசாரிக்க வேண்டும்.



    தூத்துக்குடியில் போராட்டத்தின்போது, 9 சிறப்பு தாசில்தாரர்கள், துணை தாசில்தாரர்கள் ஆகியோருக்கு பணி ஒதுக்கீடு செய்து, சப்-கலெக்டர் கடந்த மே 21-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எந்த தாசில்தார் எந்த இடத்தில் பணி செய்யவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார்.

    துணைதாசில்தார் சேகர், திரேஸ்புரம், பனிமய மாதா தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் பணி செய்தார். சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக அவர் புகாரில் கூறியுள்ளார்.

    அதேபோல, மாத்தூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த மண்டல துணை தாசில்தார் கண்ணன், 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திரேஸ்புரம் சந்திப்பில் துப்பாக்கி சூடு நடத்தவும், எஸ்.ஏ.வி. மைதானத்தில் பணியில் இருந்த மண்டல வரித்துறை அதிகாரி சந்திரன், அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது, சட்ட விரோதமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த அதிகாரிகள் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது.

    மே 22-ந்தேதி நடந்த கலவரத்தின்போது, நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்துள்ளார். டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனிடம் வாய்மொழியாக பெற்ற உத்தரவின் அடிப்படையில், துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். ஆனால், இந்த விவரத்தை எந்த ஒரு இடத்திலும் அதிகாரிகள் பதிவு செய்யவில்லை. எனவே, மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழு விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கனிமொழி கூறியுள்ளார். #ThoothukudiShooting #Kanimozhi
    ×