search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intelligence IG"

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது ஏன்? என்று உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார். #JayaDeath #JudgeArumugasamy
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி நேற்று ஆஜரானார். முதல்-அமைச்சரின் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உளவுப்பிரிவு போலீசார் தான் மேற்கொள்வார்கள் என்ற அடிப்படையில் போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது முதல் அவர் மரணம் அடையும் வரை மருத்துவமனையில் நடந்தது குறித்து நீதிபதி மற்றும் ஆணையம் தரப்பு வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.



    விசாரணையின் போது, ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உளவுப்பிரிவு போலீசார் உடன் சென்றார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று சத்தியமூர்த்தி பதில் அளித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதி, ‘செப்டம்பர் 21-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி நீங்கள் தானே கண்டறிய வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார்.



    அதற்கு சத்தியமூர்த்தி, ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டது தெரியும். ஆனால் அவரது உடல்நிலை பாதிப்பு பற்றி எந்த தகவலும் தெரியாது’ என்று பதில் அளித்தார்.

    விசாரணையின் போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது தெரியுமா? என்று ஆணையத்தின் தரப்பு வக்கீல்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்தியமூர்த்தி, ‘ஆமாம். சொன்னார்கள்’ என்று பதில் அளித்துள்ளார். ‘பாதுகாப்பு கருதி உங்களது அறிவுரையின் பேரிலேயே கண்காணிப்பு கேமரா எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறதே?’ என்று ஆணையத்தின் வக்கீல்கள் கேட்டதற்கு, ‘நான் எதுவும் சொல்லவில்லை. யாருடைய உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது என்பது தெரியாது’ என்று அவர் பதில் அளித்தார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டு பகுதிக்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று நீங்கள் அறிவுறுத்தினீர்களா?, இதுதொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் உங்களிடம் ஆலோசனை நடத்தினார்களா?, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டு பகுதிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் யாரை விடக்கூடாது என்ற கட்டுப்பாடு யாரிடம் இருந்தது? என்று ஆணையத்தின் வக்கீல்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. சசிகலாவை மருத்துவமனையில் நான் சந்திக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

    மேலும் அவர் தனது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு சீருடை அணியாத உளவுப்பிரிவு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது தளம் முழுவதும் உளவுத்துறை கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரை பார்க்க யார், யார் வந்தார்கள் என்பது குறித்த விவரம் தன்னிடம் இல்லை.

    ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்த கருப்பு பூனை படைக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏன் அவர்கள் பாதுகாப்புக்கு வரவில்லை என்பது தெரியாது. அதை தெரிந்துகொள்ளவும் நான் முயற்சிக்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

    காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சுமார் 2½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. 
    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் மனு கொடுத்துள்ளார். #ThoothukudiShooting #Kanimozhi
    புதுடெல்லி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தமிழக உளவுத்துறையின் தோல்விக்கு உதாரணம் என்றும், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் மனு கொடுத்துள்ளார்.

    டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவருக்கு, தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக அமைதியான முறையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந்தேதி ஊர்வலம் சென்ற பொதுமக்கள் மீது, போலீசார் நடத்திய கண் மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    தூத்துக்குடி போராட்டம் குறித்து தகவலை சேகரிக்க முடியாததாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும், 13 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்தவேண்டும்.

    மே 22-ந்தேதி மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற போவதை தெரிந்து இருந்தும், மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை ஏனோ தானோ என்று போக்கில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை தீவிரமாக செயல்படுத்தவில்லை. இதுகுறித்தும் விசாரிக்கவேண்டும்.

    போலீசாரை போராட்டக்காரர்கள் கொடூரமாக தாக்கி, கொலை செய்ய முயன்றதால், போலீஸ்காரர்களின் உயிரை காப்பாற்ற வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று ஐகோர்ட்டில் தமிழக டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஆனால், இந்த கலவரத்தில் ஒரே ஒரு போலீஸ்காரர்தான் காயம் அடைந்து, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு எந்த ஒரு போலீசாரும் கொடூர காயம் அடையவில்லை. போலீசாரின் சட்டவிரோத செயலை நியாயப்படுத்தும் விதமாக டி.ஜி.பி. இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்தும் விசாரிக்க வேண்டும்.



    தூத்துக்குடியில் போராட்டத்தின்போது, 9 சிறப்பு தாசில்தாரர்கள், துணை தாசில்தாரர்கள் ஆகியோருக்கு பணி ஒதுக்கீடு செய்து, சப்-கலெக்டர் கடந்த மே 21-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எந்த தாசில்தார் எந்த இடத்தில் பணி செய்யவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார்.

    துணைதாசில்தார் சேகர், திரேஸ்புரம், பனிமய மாதா தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் பணி செய்தார். சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக அவர் புகாரில் கூறியுள்ளார்.

    அதேபோல, மாத்தூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த மண்டல துணை தாசில்தார் கண்ணன், 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திரேஸ்புரம் சந்திப்பில் துப்பாக்கி சூடு நடத்தவும், எஸ்.ஏ.வி. மைதானத்தில் பணியில் இருந்த மண்டல வரித்துறை அதிகாரி சந்திரன், அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது, சட்ட விரோதமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த அதிகாரிகள் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது.

    மே 22-ந்தேதி நடந்த கலவரத்தின்போது, நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்துள்ளார். டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனிடம் வாய்மொழியாக பெற்ற உத்தரவின் அடிப்படையில், துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். ஆனால், இந்த விவரத்தை எந்த ஒரு இடத்திலும் அதிகாரிகள் பதிவு செய்யவில்லை. எனவே, மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழு விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கனிமொழி கூறியுள்ளார். #ThoothukudiShooting #Kanimozhi
    ×