search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "explains"

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது ஏன்? என்று உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார். #JayaDeath #JudgeArumugasamy
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி நேற்று ஆஜரானார். முதல்-அமைச்சரின் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உளவுப்பிரிவு போலீசார் தான் மேற்கொள்வார்கள் என்ற அடிப்படையில் போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது முதல் அவர் மரணம் அடையும் வரை மருத்துவமனையில் நடந்தது குறித்து நீதிபதி மற்றும் ஆணையம் தரப்பு வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.



    விசாரணையின் போது, ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உளவுப்பிரிவு போலீசார் உடன் சென்றார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று சத்தியமூர்த்தி பதில் அளித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதி, ‘செப்டம்பர் 21-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி நீங்கள் தானே கண்டறிய வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார்.



    அதற்கு சத்தியமூர்த்தி, ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டது தெரியும். ஆனால் அவரது உடல்நிலை பாதிப்பு பற்றி எந்த தகவலும் தெரியாது’ என்று பதில் அளித்தார்.

    விசாரணையின் போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது தெரியுமா? என்று ஆணையத்தின் தரப்பு வக்கீல்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்தியமூர்த்தி, ‘ஆமாம். சொன்னார்கள்’ என்று பதில் அளித்துள்ளார். ‘பாதுகாப்பு கருதி உங்களது அறிவுரையின் பேரிலேயே கண்காணிப்பு கேமரா எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறதே?’ என்று ஆணையத்தின் வக்கீல்கள் கேட்டதற்கு, ‘நான் எதுவும் சொல்லவில்லை. யாருடைய உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது என்பது தெரியாது’ என்று அவர் பதில் அளித்தார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டு பகுதிக்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று நீங்கள் அறிவுறுத்தினீர்களா?, இதுதொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் உங்களிடம் ஆலோசனை நடத்தினார்களா?, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டு பகுதிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் யாரை விடக்கூடாது என்ற கட்டுப்பாடு யாரிடம் இருந்தது? என்று ஆணையத்தின் வக்கீல்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. சசிகலாவை மருத்துவமனையில் நான் சந்திக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

    மேலும் அவர் தனது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு சீருடை அணியாத உளவுப்பிரிவு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது தளம் முழுவதும் உளவுத்துறை கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரை பார்க்க யார், யார் வந்தார்கள் என்பது குறித்த விவரம் தன்னிடம் இல்லை.

    ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்த கருப்பு பூனை படைக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏன் அவர்கள் பாதுகாப்புக்கு வரவில்லை என்பது தெரியாது. அதை தெரிந்துகொள்ளவும் நான் முயற்சிக்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

    காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சுமார் 2½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. 
    ×